பாட்டல் ராதா – விமர்சனம்

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் பல நல்ல திறமையான இளைஞர்களுக்கு பாதை அமைத்துக் கொடுப்பதோடு, சமூகத்துக்கு தேவையான பல நல்ல கருத்துக்களை சொல்லும் பொறுப்பான படங்களை தொடர்ந்து வழங்கி வருகிறார். அப்படி சமூகத்தில் புரையோடிப்போன, ஒவ்வொரு குடும்பத்தையும் நாசம் செய்யும் குடி நோயாளிகள் பற்றிய படமாக பலூன் பிக்சர்ஸ் உடன் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் தான் “பாட்டல் ராதா”. அறிமுக இயக்குனர் தினகர் சிவலிங்கம் இயக்கியிருக்கும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், ஆண்டனி, மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

படத்தின் கதைப்படி, சென்னை புறநகரில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வரும் குரு சோமசுந்தரம் கட்டிட வேலை செய்து வருகிறார். வேலையில் கெட்டிக்காரராக இருந்தாலும் அவரின் குடிப்பிரச்சினையால் பல விஷயங்களை இழக்கிறார். ராதாமணி என்ற அவரது பெயரே பாட்டல் ராதா என்று அழைக்கும் அளவுக்கு குடித்து விட்டு தன்னை மறந்து தன் குடும்பத்தை, சுற்றத்தை கஷ்டப்படுத்துகிறார். தன் தாலியைக் கூட விற்று அவரை போதை மறுவாழ்வு மையத்தில் விட்டு விட்டு வருகிறார் அவரின் மனைவி சஞ்சனா நடராஜன். அங்கிருந்து தப்பித்து வெளியில் வரும் அவரால் குடியை விடவே முடியவில்லை. பின் தன் குழந்தைகளை கூட்டிக் கொண்டு தனியே வாழ ஆரம்பிக்கிறார் மனைவி. அந்த தனித்து விடப்பட்ட சூழலில் திரியும் குரு சோமசுந்தரம் குடித்து தன் வாழ்க்கையை இழந்தாரா? அல்லது குடியில் இருந்து மீண்டாரா? என்பதே மீதிக்கதை.

குரு சோமசுந்தரம். நம் தமிழக குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் இப்படி குடி நோயாளியாக ஒருவருடன் நாம் வாழ்ந்து வருவோம். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் மிக இயல்பாக, ஒரு குடிகாரராகவே நடை உடை பாவனை என எல்லாவற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டு மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். யதார்த்தத்தை புரிந்து கொண்டு அவர் அழும் காட்சிகளில் உருக வைக்கிறார். குடிகாரர்களுக்கே உரித்தான அந்த குணநலன்களை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார்.

நாயகியாக சஞ்சனா நடராஜன். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக, குடிநோயாளிக்கு வாக்கப்பட்டு தன் வாழ்க்கை சீரழிந்ததே என நொந்து கொண்டு படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். வீட்டுக்கு திரும்பும் கணவனுக்கு ஆசையாய் மீன் குழம்பு செய்து வைத்து காத்திருக்கும் காட்சியிலும் நம்மை கண் கலங்க வைக்கிறார்.

ஜான் விஜய் போதை மறுவாழ்வு மையத்தை நடத்துபவராக, பல நோயாளிகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராக மிக யதார்த்தமான நடிப்பை வழங்கியுள்ளார். மாறன் தன்னுடைய கலாய்ப்பான நடிப்பில் சில பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குரு சோமசுந்தரத்தின் தம்பியாக ஆண்டனி நல்ல ஒரு கதாபாத்திரத்தில் இயல்பாய் பொருந்திப் போயிருக்கிறார். ஜமா படத்தில் நாயகனாக இரு பரிமாணங்களில் கலக்கிய பாரி இளவழகன் ஆளே அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடியான கதாபாத்திரத்தில் நம்மை ரசிக்க வைக்கிறார்.

ரூபேஷ் ஒளிப்பதிவில் சென்னை புறநகரின் அழகும், இயல்பும் அப்படியே ரசிக்க வைக்கிறது. மறுவாழ்வு மையத்தில் நடக்கும் காட்சிகளையும் மிக இயல்பான எந்த வித நிறப்பூச்சும் இல்லாமல் இயல்பாக படம் பிடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது. படம் முழுக்க இழையோடும் இசை மூலம் நம்மை படத்திலேயே பயணிக்க வைக்கிறார். என் வானம் நீ பாடலில் உருக வைக்கிறார்.

இயக்குனர் தினகர் சிவலிங்கம், இன்றைய சமூகத்தினர் பார்க்க வேண்டிய மிக முக்கியமான விஷயத்தை மிகச்சிறப்பான படமாக நமக்கு கொடுத்திருக்கிறார். குடிநோயாளிகளின் வாழ்க்கை எப்படிப்பட்டது, அவர்களின் குடும்பம் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கிறது, குடியில் இருந்து மீண்டும் வெளியில் வரவும் பல வழிகள் உள்ளன என்பது போன்ற பல விஷயங்களை இயல்பான திரை மொழியில் காட்டியுள்ளார். இரண்டாம் பாதி முழுக்க மனதில் நிற்கும் விஷயங்களாக இருக்கிறது. அதே சமயம் முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம். மொத்ததில் இந்த ஆண்டில் வெளியாகியிருக்கும் படங்களில் மிக முக்கியமான படமாக மாறியிருக்கிறது இந்த பாட்டல் ராதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *