நம் முதல்வர் நடித்த ‘ஒரே இரத்தம்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது – ஆ.ராசா பேச்சு!

இயக்குனர் மாஸ் ரவி இயக்கி, நடித்திருக்கும் படம் காத்துவாக்குல ஒரு காதல்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், இந்நாள் எம்பியுமான அமைச்சர் திரு ஆ . ராசா MP கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “நான் சார்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் கலை இலக்கியம் – திரைத்துறைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் அரசியலுக்கு வந்த 90-களில் இருந்தே, அதிகமான நேரத்தை சினிமாவிற்கு என்னால் ஒதுக்க இயலாமல் போய்விட்டது. திரைப்பட நிகழ்வுகள் சிலவற்றில் தலைவர் கலைஞர் அவர்களுடன் பங்கேற்றது உண்டு. அவ்வளவுதான். நாங்கள் இளவயதில் பார்த்த திரை உலகமும், இன்றைக்கு இருக்கிற திரை உலகமும் நாங்கள் அப்போது அனுபவித்த இசையும், இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகள் அனுபவிக்கும் இசையும் இருவேறு உலகத்தில் இருக்கின்றனவோ என்கிற அளவிற்கு திரை உலகம்முதிர்ச்சி அடைந்திருக்கிறதா அல்லது சிலர் கூறுவதைப்போல சீரழிந்திருக்கிறதா என்பதையெல்லாம் நான் மிகப்பெரிய ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளாதவன்.

ஆனால் காதலும், வீரமும் தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டற பின்னியிருந்தது திராவிட இலக்கியங்கள், சங்க பாடல்களில் இருந்து பல்வேறு விதமான குறிப்புகளை பேரறிஞர் அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் எழுத்தில் அளித்ததை படித்து வளர்ந்தவர்கள் நாங்கள். இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் திராவிட மாடலின் நாயகர் மாண்புமிகு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அவருடைய தந்தை கலைஞர் அவர்களுடைய எழுத்தில் விளைந்த ஒரே இரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த படத்தில் சாதி ஒழிப்பு குறித்த மையக்கருத்து அடி நாதமாக இருக்கும். எப்போதுமே ஒரு கருத்தை செயற்கையாகவோ இயற்கையாகவோ நம்மீது வரித்துக்கொள்ளும்போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம்.

நானும் கூட 8-ம் வகுப்பு படிக்கும் வரையில் திராவிட இயக்கம் என்றால் என்ன, பெரியார் யார், அண்ணா யார், கலைஞர் யார் என்று அறியாதவன்தான். ஏதோ ஓர் பேச்சு போட்டியில் கலந்துகொண்டேன். தமிழாசிரியர் எழுதிக்கொடுத்ததை பேசி பரிசு பெற்றேன். அதன் பிறகு தமிழ் மீது ஈடுபாடு வந்தது… பெரியாரை, அண்ணாவை, கலைஞரை அவர்கள் வாயிலாக சங்க இலக்கியத்தை திராவிட பண்புகளை எல்லாம் அறிந்தேன். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக 3 முறை ஒன்றிய அமைச்சராக இருந்தேன். அதில் மிகப்பெரிய சோதனை வந்தும், அதை எதிர்த்து நிற்கும் வலிமை உள்ளவனாக நின்றுகொண்டிருக்கிறேன். இந்த வலிமை, திராவிட இயக்கம் தந்திருக்கின்ற கலை, இலக்கியம், அரசியல் அளித்ததுதான்.

அந்த வரிசையில், முதலமைச்சர் அவர்கள் நடித்த ‘ஒரே இரத்தம்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தின் கதை என்னவென்று கேட்டேன்… முன்வெளியிட்டு தகட்டை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். நான் முன்பே குறிப்பிட்டது போல கலை, இலக்கியம், ,காதல் வீரம் எல்லாம் தமிழர்களுக்கு என்று இருக்கின்ற தனி செம்மாந்த விழுமியங்கள்.

“எங்குற்றான் உந்தன் மகன் எனும் குரல் கேட்ட தாய்க்கிழவி, பொங்குற்ற துயரை அடக்கி, ‘புலி, போன இடம் நான்றியேன்; போர்க்களம்தான் போயிருக்கும்; புலி இருந்த குகை இதுதான்’ என்று தன் வயிற்றை சுட்டி காட்டிய தமிழ்” – என்று
கலைஞர் எழுதினார். அந்த கலைஞர் தான், ‘ஏறு தழுவுதல் ஆடவர்க்கு அழகு; அவர் வாயில் வெற்றிலை சாறு தடவுதல் மகளிர்க்கு அழகு’ என்று காதலையும் சொல்லி இருப்பார்.

அப்படி ‘காத்துவாக்குல ஒரு காதல்’ கதையை கேட்டபோது இரண்டு உண்மையான காதலர்கள் சந்திக்கின்ற தடையை, அதுவும் ஒரு குறிப்பிட்ட பூலோக பகுதியிலே இருக்கின்ற தடைகளை எல்லாம் தாண்டி வருகின்ற அந்த ஓட்டத்தை தந்திருப்பதாக சொன்னார்கள்.

சினிமாவாக இருந்தாலும், கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும் சமூகத்தில் இருக்கின்ற புழுக்கத்தை சமூகத்தில் இருக்கின்ற கொதிப்பை வெளியேகொண்டு வந்து அவற்றை தீர்க்க கூடிய தீர்க்கமான ஆயுதமாக இருக்க வேண்டுமென்று விரும்புகின்ற இயக்கம் திராவிட இயக்கம்.

உலகத்தில் இருக்கின்ற எத்தனையோ காதல் கதைகளை எல்லாம் சுருக்கி வைத்து பார்த்தால் இரண்டே இரண்டு விஷயம் தான். உன்னை நான் காதலிக்கிறேன் அல்லது நான் காதலித்துக் கொண்டே இருப்பேன். இதற்கு தான் இவ்ளோ பெரிய இலக்கியங்கள் எல்லாம்.

இன்றைக்கு இருக்கிற சாதியம், அரசியல், பொருளாதார வேறுபாடு, மதவெறி இவைகளை எதிர்த்து ஒரு காதல் வெற்றிபெற வேண்டுமென்றால் அதற்க்கு இளமை மட்டும் காரணம் அல்ல; அதையும் தாண்டி ஒரு மனப்பக்குவமும், புரிந்துகொள்ளுகின்ற ஆற்றலும் வேண்டும் என்கின்ற அந்த உணர்வோடு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் பேசும்போது, “அறிமுக இயக்குநர்கள் பலரது படங்களில் நான் பணியாற்றி இருக்கிறேன். அத்தனையும் வெற்றி பெற்றன. அவர்கள் அனைவரும் இன்று மிகப்புரிய அளவில் வளர்ந்துள்ளார்கள். அதேப்போல் தம்பி மாஸ் ரவியும் இத்திரைப்படத்தின் மூலம் மிகப்பபெரிய வெற்றியடைவார். படத்தின் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்கள் முழு வேகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஒரு உதவி இயக்குனர் போல் அனைத்து வேலைகளையும் முன் வந்து சிறப்பாக செய்தார்” என்றார்.

இயக்குனர் சுப்ரமணிய சிவா பேசும்போது, “இந்தப் படத்தின் இயக்குநர் மாஸ் ரவி, எனது பல வருட நண்பன், என் தம்பி! அவர், மிகவும் கஷ்டமான சூழ்நிலைகள் பலவற்றை கடந்து வந்தவர். இத்திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாகவும் இயக்குனராகவும் களம் இறங்குவது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. அதற்கான களம் அமைத்துக் கொடுத்த வாய்ப்பளித்த சென்னை பிரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் சினிமாவில் தற்ப்போது இருக்கும் மாடர்ன் சண்டை காட்சிகளுக்கு எல்லாம் குரு திரு.சூப்பர் சுப்புராயன் அவர்கள் தான் . அவரும் இத்திரைப்படத்தில் இருப்பது மேலும் வெற்றியை உறுதி செய்து உள்ளது” என்றார்.

இயக்குனர் மாஸ் ரவி பேசும்போது, “தயாரிப்பாளர் திரு. எழில் இனியன் அவர்கள் சினிமாவை மிகவும் நேசிப்பவர். அணு அணுவாக சினிமாவை ரசிப்பவர். நம்மை பின் தள்ள ஆயிரம் பேர் இருந்தாலும் நம்மை மேலே தூக்கிவிட வந்தவர் தான் என் தயாரிப்பாளர் திரு.எழில் இனியன் அவர்கள். பின் நான் 15 வருடமாக பயனிக்ககூடிய என் குரு இயக்குனர் திரு. சுப்ரமணிய சிவா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டண்ட் இயக்குனர் திரு. சூப்பர் சுப்புராயன் மாஸ்டர் அவர்களுக்கும் என் நன்றிகள், என்னை தன் மகன் போல அக்கரையுடன் பார்த்துக் கொண்டார். இசையமைப்பாளர் ஜீ.கே.வி மற்றும் மிக்கின் அருள்தேவ் இருவருடைய உழைப்பும் படத்திற்க்கு மிக முக்கியமானது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *