பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இந்திய 2 படப்பிடிப்பு தாமதமானதால் அந்த நேரத்தில் துவங்கிய படம் தான் கேம் சேஞ்சர். இந்தியன் 2 மறுபடியும் படப்பிடிப்பை துவங்கியதால் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் படங்களை இயக்கித் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட அதையும் அசாத்திய மனநிலையில் இயக்கி முடித்தார். அப்படி உருவாகி வெளியான இந்திய 2 தோல்வியை தழுவ, இப்போது வெளியாகியிருகிறது கேம் சேஞ்சர். ஷங்கருக்கு இந்த படத்தின் வெற்றி மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது. ஷங்கருக்கு வெற்றியை தந்ததா? இந்த கேம் சேஞ்சர்? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, நேர்மையான IPS அதிகாரியாக இருந்த ராம்சரண் IAS ஆக வேண்டும் என்பதற்காக IPS வேலையை விட்டு விட்டு IAS ஆகிறார். ஒரு நேர்மையான IAS அதிகாரியாக விசாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடக்கும் அத்தனை அநியாயங்களையும் தன் அதிகாரத்தின் மூலம் சீர் செய்கிறார். அதனால் சட்டவிரோத செயல்கள் மூலம் சம்பாதிக்கும் முதலமைச்சரின் மகன் SJ சூர்யாவின் வருமானம் பாதிக்கப்படுகிறது. சூர்யாவுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையும் உண்டு. பதவிக்காக அப்பாவையே கொலை செய்யத் துணிகிறார். அவர் முதலமைச்சர் பதவியை அடையும் நேரத்தில் முதலமைச்சர் பேசிய ஒரு வீடியோ பதிவு வெளியாக, அதில் நல்லாட்சி அமைய வேண்டும், ராம்சரணை முதலமைச்சர் ஆக்குகிறேன் என தன் கடைசி ஆசையயும் முடிவையும் சொல்லி விட்டு செல்கிறார். அதன் பின் ராம் சரண், எஸ் ஜே சூர்யா மோதல் உச்சத்தை எட்ட, முதலமைச்சர் ஆனது யார்? முதலமைச்சர் பதவியில் ராம் சரணை அமர வைக்க முதல்வர் ஆசைப்பட்டது ஏன்? என்பதே மீதிக்கதை.
ராம் சரண் IAS அதிகாரியாக, எந்தவித அலட்டலும் இன்றி கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் அப்பாவாக அவரின் நடிப்பு ரங்கஸ்தலம் படத்துக்கு பின் அவரின் கேரியர் பெஸ்ட். திரைக்கதை சில நேரங்களில் நம் பொறுமையை சோதித்தாலும் தன் திரை ஆளுமையால் மொத்த படத்தையும் அழகாக நகர்த்தி செல்கிறார் ராம் சரண். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா. வழக்கம் போலவே வில்லத்தனத்தில் கலக்கி எடுத்திருக்கிறார். காமெடி கலந்த வகையில் அமைந்த பல காட்சிகளில் அவர் அடிக்கும் கவுண்டர்கள், வசனங்கள் எல்லாமே தியேட்டரை தெறிக்க விடுகிறது.
நாயகியாக கியாரா அத்வானி. படத்தில் ரசிகர்களுக்கு கொஞ்சம் புத்துணச்சி கொடுக்க அவ்வப்போது அழகுப் பதுமையாக வந்து செல்கிறார். பாடல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். அதிலும் ஹைரனா பாடல் படத்தில் இடம் பெறாதது துரதிருஷ்டம். அஞ்சலி மிக அழுத்தமான கதாபாத்திரம், இருவேறு பரிமாணங்களில் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார். சுனில் சைடு சத்யம் கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை தந்துள்ளார். சமுத்திரகனி, நவீன் சந்திரா, ஸ்ரீகாந்த், ஜெயராம் ஆகியோரும் நல்ல நடிப்பை தந்துள்ளனர். வெண்ணிலா கிஷோர், பிரமானந்தம், யாஷிகா ஆனந்த் ஆகியோர் சின்ன சின்ன கேமியோ கதாபாத்திரங்களில் தலையை காட்டி விட்டு சென்றிருக்கிறார்கள்.
திருவின் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தை மேலும் கூட்டுகிறது. காட்சிக்கு காட்சி பிரமாண்டம், பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகளிலும் திருவின் உழைப்பு தெரிகிறது. தமன் முதல்முறையாக தன் குருநாதர் ஷங்கர் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் திரையில் காட்சிகளுடன் பார்க்கும்போது நல்ல ஒரு எனர்ஜியை தருகிறது. தொப், ஜருகண்டி பாடல்களில் கொஞ்சம் புதுமையை புகுத்தியுள்ளார் ஷங்கர். பின்னணி இசை அக்மார்க் தெலுங்கு மசாலா படத்துக்கு தேவையான அம்சங்களுடன் தெறிக்க விட்டிருக்கிறார் தமன்.
முதல்வன், சிவாஜி போல சமூக மாற்றம் அதை அரசியல் பின்னணியில் சொல்வது எல்லாம் ஷங்கருக்கு கைவந்த கலை. இந்த படத்திலும் அரசியல் பின்னணியில் ஒரு அதிகாரியின் அதிகாரம் எந்த எல்லை வரை போகும், மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பாகவே செல்லும் படம் இரண்டாம் பாதியில் ஃபிளாஷ்பேக் காட்சிக்கு பிறகு கொஞ்சம் சறுக்குகிறது. தெலுங்கு படம் என்றால் லாஜிக் பார்க்க மாட்டர்கள் தான், ஆனாலும் இப்படியா என்பது போல அமைந்துள்ளது, குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. இந்த காட்சிகளையும் ஷங்கர் தான் எடுத்தாரா என யோசிக்க வைக்கிறது அந்த காட்சிகள் எல்லாம். மொத்தத்தில் இந்தியன் 2 படம் போல சறுக்காமல் அனைவரும் பார்க்கும் விதத்தில் நல்ல ஒரு அரசியல் படமாகவே அமைந்துள்ளது இந்த கேம் சேஞ்சர்.