மெட்ராஸ்காரன் – விமர்சனம்!

மலையாளத்தில் கும்பளாங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படங்களின் மூலம் முன்னணி இளம் நடிகராக திகழும் ஷேன் நிகம் தமிழில் அறிமுகமாகும் படம் தான் “மெட்ராஸ்காரன்”. மிகப்பெரும் இளம் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு ஜோடியாக சிரஞ்சீவி குடும்பத்தின் வாரிசான நடிகை நிஹாரிகா நடித்திருக்கிறார். கலையரசன் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் எப்படி இருக்கு பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சென்னைக்கு குடி பெயர்ந்த புதுக்கோட்டை இளைஞரான ஷேன் நிகம், தான் கஷ்டப்பட்டு வளர்ந்த சொந்த ஊரில் அந்த மக்கள் முன்னிலையில் விமரிசையாக தன் திருமணத்தை நடத்த ஆசைப்படுகிறார். ஊரில் திருமணத்தை ஏற்பாடு செய்து தான் திருமணம் செய்யப்போகும் நாயகி மற்றும் குடும்பத்தையும் புதுக்கோட்டை வர வைக்கிறார். திருமணத்திற்கு முதல் நாள் ஹோட்டலில் தங்கி இருக்கும் நாயகி உன்னை இப்போவே பார்க்கணும் என அழைக்க, அவரை பார்க்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பும் நாயகனுக்கு வழியில் ஒரு பிரச்சினை. அந்த பிரச்சினை நூல் பிடித்தவாறு எப்படி அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது என்பது தான் மீதிக்கதை.

நாயக்ன் ஷேன் நிகம். மலையாள நடிகர் என்றாலும் துல்கர் சல்மான், ஃபகத் பாசில், பிரித்விராஜ் போல ஒரு தனித்துவமான தமிழில் பேசி நடிப்பது புதுவிதமாக இருக்கிறது. ஒரு துடிப்பான இளைஞராக, பிரச்சினையில் சிக்கிக் கொண்டு அதை எதிர்கொள்ளும் சூழல், அதனால் தனக்கு ஏற்பட்ட இழப்புகளை சந்திக்கும் சூழல், அதை தொடர்ந்து செல்லும் காட்சிகள் என தன்னால் முடிந்த நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழில் சிறப்பான ஒரு அறிமுகமே கிடைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

நாயகி நிஹாரிகா. மிக அழகாக இருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட சிறிய வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக இரண்டு பாடல்களிலும் அவர் ரசிக்க வைக்கிறார். கலையரசன் மிக முக்கியமான கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கதாபாத்திரத்தில் வழக்கம் போல கலக்கி எடுத்துள்ளார். சண்டைக்காட்சிகளிலும் உழைப்பை கொடுத்துள்ளார். ஐஸ்வர்யா தத்தா ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து நம் பாரவையை அவர் பக்கம் திருப்புகிறார். கருணாஸ் நாயகனின் தாய் மாமனாக நல்ல ஒரு கதாபாத்திரத்தில் நம்மை கலங்க வைக்கிறார். இப்படி ஒரு தாய் மாமன் நமக்கு வேண்டும் என எண்ண வைக்கிறார். பாண்டியராஜன், கீதா கைலாசம், தீபா சங்கர், சூப்பர் சுப்பராயன், லல்லு மற்றும் பலரும் தங்கள் கதாபாத்துரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

பிரசன்னாவின் ஒளிப்பதிவு படத்தின் யதார்த்த தன்மையை மேலும் கூட்டி, கதை நடக்கும் இடத்திலேயே நாமும் கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் உணர்வை தருகிறது. சாம் சி.எஸ். இசையில் கல்யாண பாடலும், காதல் சடுகுடு ரீமிக்ஸூம் இன்ஸ்டண்ட் ஹிட். தியேட்டரிலும் பார்க்க சிறப்பாகவே அமைந்துள்ளது. பின்னணி இசை படத்தின் பரபரப்பை மேலும் கூட்டுகிறது.

ரங்கோலி படத்தை இயக்கிய வாலி மோகன் தாஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் நம்ம தமிழ் மண்ணில் நடக்கும் யதார்த்த சம்பவங்களை மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறார். ஒரு சிறு ஈகோ ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச் செல்லும் என்பதை படத்தின் மூலம் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களை மறந்து கடந்தால் வாழ்க்கையில் பல பெரிய பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்ற ஒரு உண்மையும் இதில் அடங்கியிருக்கிறது. முதல் பாதியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என தொடங்கி, மையப் பிரச்சினை தொடங்கிய பின் வேறு ரூட்டில் கதை பயணிக்கிறது. காதல், ஆக்ஷன், உறவுகளின் முக்கியத்துவம், எமோஷன், பிரிவு, ஈகோ, துரோகம் என அத்தனையும் கலந்து ஒரு கமெர்சியல் படமாக, அதே சமயம் மிகவும் ராவான படமாகவே தந்திருக்கிறார் இயக்குனர். கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்கலாம் இந்த மெட்ராஸ்காரனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *