அவ்வப்போது செய்திகளில் ஆட்டோவில் தவற விட்ட 2 லட்சம் பணத்தை போலீஸில் ஒப்படைத்த நேர்மையான ஆட்டோ டிரைவர், ரோட்டில் கிடந்த 1 லட்சத்தை போலீஸில் ஒப்படைத்த நேர்மையான மனிதருக்கு பாராட்டு என செய்திகளில் வரும். ஆனால் உண்மையில் அப்படிப்பட்ட ஒரு மனிதரை கண்டாலே அபூர்வமான மனிதர் போல, மனிதரில் புனிதர் என்பது போன்ற ஒரு தோற்றம் உருவாகும் அளவுக்கு சமூகத்தில் மனிதர்கள் சுயநலம், பேராசை என மாறி விட்டார்கள். அப்படிப்பட்ட இந்த காலகட்டத்தில் நேர்மையை வலியுறுத்தி வந்திருக்கும் ஒரு படம் தான் “திரு.மாணிக்கம்”. நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடித்திருக்கும் இந்த படம் உருவான நோக்கத்தை அடைந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தமிழக – கேரளா எல்லையில் அமைந்துள்ள குமுளி பஸ் ஸ்டாண்டில் லாட்டரி சீட்டுக்கடை நடத்தும் சமுத்திரக்கனி, எந்த செல்வமும் இல்லை எனினும் மனைவி அனன்யா, இரு பெண் குழந்தைகளுடன் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அடுத்தவர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் கூட உதவும் மனம் படைத்தவர். அவரின் இளைய மகளுக்கு பேச்சு சரியா வராததால் அதற்கு மருத்துவ செலவுக்கு பணம் தேவை. அவரின் மைத்துனர் துபாய் போக காசு தேவை. அத்துடன் சில லட்சங்கள் கடனை அடைக்க வேண்டிய நிலைமை. இப்படியான சூழலில், தன் குடும்ப பிரச்சினையில் இருக்கும் முதியவர் பாரதிராஜா லாட்டரி சீட்டு வாங்க வருகிறார். ஆனால் பணம் தொலைந்து விட, அதை எடுத்து வைக்க சொல்லி விட்டு போகிறார். அடுத்த சில நாட்களில் அவர் சமுத்திரக்கனியிடம் வாங்கிய அந்த லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி பரிசு விழுகிறது. அதை பாரதிராஜாவிடம் கொடுக்க கிளம்புகிறார், ஆனால் அவர் தான் பணம் கொடுக்கலயே, அது நமக்கு அடித்த அதிர்ஷ்டம் என குடும்பத்தார் சொல்ல, லாட்டரி பாரதிராஜாவுக்கு தான் சொந்தம் என சமுத்திரகனி பிடிவாதமாக இருக்க அதன் பிறகு என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை
கதையின் நாயகனாக நேர்மையான மனிதராக சமுத்திரக்கனி. கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவரின் நிஜ இமேஜே பாதி வேலையை செய்திருக்கிறது. நேர்மையில் இருந்து விலகாமல் இருக்க அவரின் மனப்போராட்டத்தை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
லாட்டரி சீட்டு வாங்கிய முதியவர் கதாபாத்திரத்தில் பாரதிராஜா. நடக்க முடியாமல், தள்ளாடி நடக்கும் வயதான தோற்றத்தில் நம்மை பரிதாபப்பட வைக்கிறார். சமுத்திரகனியின் மனைவியாக அனன்யா, அன்பான மனைவியாக, ஆதங்கத்தில் உழலும் கதாபாத்திரம். வீட்டில் இருந்தவாறே கதையை நகர்த்தி செல்கிறார். இளவரசு, கருணாகரன், தம்பி ராமையா, வடிவுக்கரசி, ஸ்ரீமன், சாம்ஸ் ஆகியோரும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
விஷால் சந்திரசேகர் இசையில் பொம்மக்கா பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் எந்த குறையும் இல்லை. சுகுமாரின் ஒளிப்பதிவில் மலை கிராமம், தமிழக கேரள எல்லையை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இயக்குனர் நந்தா பெரியசாமி எடுத்துக் கொண்ட கதைக்கும், கதைக்களத்துக்கும் தேவையான விஷயங்களை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். குடும்பம், பணத்தின் தேவை போன்ற காட்சிகளும் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. சமுத்திரக்கனியை தடுத்து நிறுத்த அவரை சுற்றி உள்ள அனைவரும் செய்யும் முயற்சிகளும், சமுத்திரகனி பாரதிராஜாவை தேடிச் செல்லும் காட்சிகளும் நன்றாகவே உள்ளன. கிளைமாக்ஸில் நம்மை நெகிழ வைக்கிறார். நமக்குள் இருக்கும் நேர்மையை ஒரு நிமிடம் நம்மையே கேள்வி கேட்க வைக்கிறது.