விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் ‘96’ என்ற காலத்தால் அழியாத திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரேம்குமார் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியிருக்கும் திரைப்படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் 96 படத்தை போலவே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. வன்முறை, ஆக்ஷன் படங்களாக வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதுபோன்ற படங்கள் இன்னும் வர வேண்டும் என்ற குரல் ஒலிக்கிறது. உறவுகளின் உன்னதத்தை பேசும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடங்கள் என்பது அதிகமாக உள்ளதாக கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் முதல் மூன்று நாட்களை கடந்த நிலையில் திங்கள் கிழமை முதல் படத்திலிருந்து 18 நிமிடம் 42 நொடி காட்சிகளை நீக்கியுள்ளனர் படக்குழுவினர்.
இது குறித்து இயக்குனர் பிரேம்குமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். அதில் அன்பால் உருவான மெய்யழகனுக்கு பேரன்பை அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி. மெய்யழகனை உணர்ந்து புரிந்து கொண்ட பெரும்பாலானோரின் அன்பும், ரசனையும் பிரமிக்க வைக்கின்றன. படத்தின் நீளம் குறித்து மட்டும் சில அக்கறை குரல்கள் வெளிப்பட்டன. ஒரு படைப்பாளியின் முதல் கடமை மக்களின் குரல்களுக்கு செவிமடுப்பது. எனவே மெய்யழகனின் மீது நீங்கள் கொண்ட அன்பிற்கு நான் செய்யும் கைம்மாறாக படத்திலிருந்து 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைத்திருக்கிறேன். இன்று முதல் 2 மணி நேரம் 38 நிமிடங்கள் கொண்ட படமாக ஓடும். என் படைப்பு சுதந்திரத்தில் என்றும் உறுதுணையாக இருக்கும் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யா ஆகியோருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.