காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக மாறும் நடிகர்களில் சதீஷூம் அடக்கம். ஏற்கனவே ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி இருந்தாலும் அது காமெடி கலந்த ஒரு திரைப்படம். தற்போது முழுக்க சீரியஸான கதையில் சதீஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “சட்டம் என் கையில்”. சதீஷ் நாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் டான்ஸ் மாஸ்டர் அஜய் ராஜ், பவல் நவகீதன், மைம் கோபி, வித்யா பிரதீப், வெண்பா, பவா செல்லதுரை, ஈ ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூரியை போலவே சதீஷையும் கதையின் நாயகனாக மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? பார்ப்போம்.
படத்தின் கதைப்படி, முழுக்க ஒரு இரவில் நடக்கும் கதை. ஏற்காடு மலைப்பாதையில் ஏதோ ஒரு பதட்டத்துடன் காரை ஓட்டிச் செல்லும் சதீஷ் வழியில் பைக்கில் வந்த ஒருவன் மீது மோதி விடுகிறார். பின் ரத்தம் சொட்ட கிடந்த அவனை இழுத்துக் கொண்டு போய் காரில் போட்டு கிளம்புகிறார். வழியில் ஏற்காடு போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்க அவர்களிடம் மாட்டிக் கொள்கிறார். காரில் சடலம் இருப்பதை போலீஸார் பார்த்து விடக்கூடாது என்பதால் அங்கிருந்த காவல் உதவி துணை ஆய்வாளர் பாவல் நவகீதனை கன்னத்தில் அறைந்து விடுகிறார். குடித்து விட்டு கார் ஓட்டியதால் அவரையும் காரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து செல்கிறார்கள். அதே நேரத்தில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக (SI) உதவி ஆய்வாளர் அஜய்ராஜூக்கு தகவல் வர, அந்த விசாரணையில் இறங்குகிறது காவல்துறை. ஏற்கனவே சதீஷ் மீது கோபத்தில் இருக்கும் பாவல் இந்த கொலையை சதீஷ் மீது போட முயற்சிக்கிறார். அதே நேரத்தில் அஜய்க்கும், பாவலுக்கு இடையில் ஈகோ மோதல் இருக்கிறது. அதை தெரிந்து கொண்ட சதீஷ் எப்படி இந்த சிக்கலில் இருந்து தப்பித்தார்? காவல் நிலையத்தில் நிற்கும் காரில் கிடக்கும் சடலத்தை எப்படி போலீஸ் கண்ணில் படாமல் மறைத்தார்? கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார்? கார் டிக்கியில் உள்ள சடலம் என்ன ஆனது?? என்பதே மீதிக்கதை.
நாயகன் சதீஷ், சீரியஸான கதையில் பெரிதாக கவுண்டர் அடிக்காமல் நடிக்க மட்டுமே முயற்சி எடுத்திருக்கிறார். அதில் முடிந்த வரை நல்ல நடிப்பையும் வழங்க்கியிருக்கிறார். அதற்கு திரைக்கதையும் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றது. ஒவ்வொரு சிக்கலையும் அவர் சமாளிக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. சூழலுக்கு தகுந்த வகையில் செயல்படும் விதத்தில் ஸ்கோர் செய்கிறார்.
கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் பாவல் நவகீதம், அஜய் ராஜ். இருவருமே எலியும் பூனையுமாக மோதிக் கொள்வது திரைக்கதைக்கு கொஞ்சம் வலு சேர்க்கிறது. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஈ ராம்தாஸ், பவா செல்லத்துரை ஆகியோர் ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்கள். சாதாரணமாக வந்து போகும் கதாபாத்திரங்களில் வித்யா பிரதீப், வெண்பா என அறிமுகமான நடிகைகள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
முழுக்க இரவில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு முத்தையாவின் ஒளிப்பதிவு மிக முக்கிய பலம். ஜோன்ஸ் ரூபர்ட் பின்னணி இசை ஓகே ரகம்.
படத்தின் ஆரம்ப காட்சிகளில் தேமே என்று நகரும் கதை, பல இடங்களில் கொஞ்சம் அமெச்சூராக தெரியலாம். ஆனால் காவல் நிலையத்துக்கு சென்ற பின் சற்று சுவாரசியமாகிறது. இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து ட்விஸ்ட் அடித்து கிளைமாக்ஸில் மேலும் சுவாரசியம் கூடுகிறது. அதுவரை நடந்த சம்பவங்களை இணைக்கும் அந்த புள்ளி, அதை நோக்கி கொண்டு வந்த திரைக்கதை என நல்ல ஒரு க்ரைம் த்ரில்லர் பார்த்த உணர்வை தருகிறார் இயக்குனர் சாச்சி. பட்ஜெட் வகையில் படத்தின் தரம் சற்று குறைவாக தெரிந்தாலும் அதன் திரைக்கதைக்காக கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்க்கலாம்.