கடைசி உலகப் போர் – திரை விமர்சனம்

ஒரு தனியிசை கலைஞராக தன் பயணத்தை துவங்கி, ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குனராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். அதில் வெற்றியையும் சுவைத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஹிப் ஹாப் ஆதி இன்றைய 2கே கிட்ஸை கவரும் வகையிலான பொழுதுபோக்கு படங்களில் நடித்தார். தற்போது அவரது ஜானரை விட்டு விலகி அவரே தயாரிப்பாளராகவும் மாறி, இயக்கி இசையமைத்து நடித்திருக்கும் படம் “கடைசி உலகப்போர்”. பெரிய பட்ஜெட்டில் தான் இதுவரை சம்பாதித்த அனைத்தையும் இதில் முதலீடு செய்த ஆதி, தன்னை மிகச்சிறந்த கலைஞனாக நிரூபித்தாரா? தன் முதலீட்டை திரும்ப பெறுவாரா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 2028-ல் நடக்கும் இந்த கதையில் நட்டி கதாபாத்திரத்தின் வழியே கதை சொல்லப்படுகிறது. தமிழக முதலமைச்சராக இருக்கும் நாசரின் மச்சான், இவர் தான் இந்த ஆட்சியையே உருவாக்கி, வழி நடத்தும் ஒரு கிங் மேக்கராக இருக்கிறார். அரசியலில் அடுத்தடுத்து பல திட்டங்களை வகுத்து, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பும் கனவுடன் இருக்கிறார். அந்த நேரத்தில் முதலமைச்சர் மகள் ஆத்மிகாவுக்கு ஹிப் ஹாப் அதீ மீது காதல் மலர்கிறது. அதே நேரம் உலகம் ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என இரண்டாக பிரிகிறது. இதில் இந்தியா நடுநிலையாக உள்ளது. ரிபப்ளிக் நாடுகளின் ஆர்மி இந்தியாவை தாக்க ஆரம்பிக்கிறது, மொத்த சென்னையையும் அழிகிறது. எல்லோரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. முதல்வர் நாசரை தென்னிந்திய பிராந்தியத்துக்கு பிரதமராகவும் நியமனம் செய்கிறது. அதில் இருந்து தப்பிய சிலர் ஆதி தலைமையில் காட்டுக்குள் ஒரு சமூகமாக வாழ்கிறார்கள். ரிபப்ளிக்கை எதிர்த்து சண்டை போட்டு இந்தியாவை மீட்டார்களா? என்பதே மீதிக்கதை.

ஹிப்ஹாப் ஆதி கடைசி உலகப்போர் என்ற இந்த சிந்தனையை கருவாக்கி, அதை திரையில் கொண்டு வரும் முயற்சியை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். படத்தின் செகண்ட் ஹீரோ போல் தான் வருகிறார். முதல் ஹீரோ நட்ராஜ் என்கிற நட்டி தான். முந்தைய படங்களை போலவே ஆதி இதிலும் தன்னால் முடிந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். நடிகராக பெறும் பாராட்டை விட இயக்குனராக பாராட்டுக்களை பெறுகிறார்.

நாயகனாக படத்தை தாங்கும் இன்னொருவர் என்றால் நட்டி தான். கதையே சொல்லி படத்தை துவங்குவதே இவர் தான். அவர் எடுக்கும் முடிவுகள், அதை சுற்றியே இயங்கும் அவர் மூளை என ஸ்கோர் செய்கிறார். அவரும் அவர் நண்பராக வரும் டான்ஸ் மாஸ்டர் கல்யாணும் வரும் காட்சிகள் செம்ம. கல்யாண் ஒரு போலீஸ் அதிகாரியாக அந்த கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமான தேர்வு. நாயகி அனகா அழகு. அரசியலில் தள்ளப்பட்டாலும் அதை அவர் அணுகும் விதம் எல்லாம் கச்சிதம். அழகம் பெருமாள், நாசர், முனிஷ்காந்த், சிங்கம் புலி, இளங்கோ குமரவேல், மகாநதி ஷங்கர் என அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.

ஒளிப்பவும் மற்றும் பின்னணி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம். எதிர்காலத்தில் நடக்கும் கதை என்பதால் விஎஃப்எக்ஸ் காட்சிகள் மிக அதிகம். அதை குறிப்பிட்ட பட்ஜெட்டில் ஆதி மற்றும் அவர் நண்பர்களே உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. எப்படி இதை சாத்தியம் ஆக்கினர் என்பது வியப்புக்குரிய விஷயம்.

இப்படி ஒரு சிறந்த கான்செப்டை உருவாக்கிய ஆதி, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் மெனக்கெடம் போட்டிருக்கலாம் என்பதை நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. முதல் பாதி முழுக்க சாதாரண அரசியல் கதையாகவே சுவாரஸ்யமாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் ரிபப்ளிக் உடனான போர் என வரும்போது கொஞ்சம் கதையுடன் ஒன்ற முடியாமல் போகிறது. நம்மை முழுக்க கட்டிப் போடாமல் போகிறது. எமோஷனல் காட்சிகளையும் நம் மனதுக்குள் கடத்தாமல் மிஸ் செய்கிறார் இயக்குனர் ஆதி. நல்ல கதையும், செட் அப் இருந்தும் பல எமோஷனல் காட்சிகள் உருவாக்கும் இடமிருந்தும், அதை செய்யாமல் மிஸ் செய்து விட்டார். இன்று நாம் இருக்கும் சூழலில் இந்த மாதிரி எல்லாம் நடக்குமா? என நினைக்கலாம், ஆனால் எதுவும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி ஒரு உலகப்போரை நாம் நம் எதிர்காலத்தில் பார்த்து விடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *