அருண்ராஜா காமராஜ் இயக்கிய நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனங்கள் நச்சென இருக்கும், யாருப்பா அது வசனகர்த்தா? என ரசிகர்களை நினைக்க வைத்தது. அந்த வசனங்களை எழுதியவர் தமிழரசன் பச்சமுத்து. தற்போது அவர் இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் லப்பர் பந்து. ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஸ்வாசிகா, கீதா கைலாசம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் தனித்துவமான படமாக அமைந்ததா? வெற்றி அடையுமா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, லப்பர் பந்து கிரிக்கெட்டில் சுற்று வட்டாரத்திலேயே மிகத் திறமையான பேட்ஸ்மேன் என்ற கெத்துடன் சுற்றும் அட்டக்கத்தி தினேஷ், தன்னை மிஞ்ச ஆள் இல்லை என்ற கெத்துடன் வலம் வருகிறார். திருமண வயதில் மகள் இருக்கும்போதும் கிரிக்கெட் கிரிக்கெட் என சுற்றி வருகிறார். மனைவிக்கு அவர் விளையாடுவதை கண்டாலே பிடிக்காது. மனைவி அன்புக்கு கட்டுப்பட்டவர். அவருக்கு தினேஷ் கிரிக்கெட் விளையாடுவதே பிடிக்காது. இந்த நிலையில் ஹரீஷ் கல்யாண் அட்டகத்தி தினேஷின் மகளை காதலிக்கிறார். ஆனால் காதலியின் அப்பா யார் என்றே தெரியாது. ஒரு கிரிக்கெட் போட்டியில் அட்டகத்தி தினேஷை தனது பௌலிங்கால் திணறடிக்கிறார் ஹரீஷ் கல்யாண். அங்கு துவங்கும் பிரச்சினை, குடும்பத்திற்குள் பிரச்சினையாக மாறுகிறது. காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? கிரிக்கெட் விளையாட்டு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
அட்டகத்தி தினேஷ் இளம் வயது மகளுக்கு அப்பாவாக நடுத்தர வயதுக்காரராக நடித்ததே பாராட்டத்தக்க விஷயம். கெத்து என்ற அந்த கேரக்டரில் கனகச்சிதம். விஜயகாந்த் ரசிகராக பாட்டு போட சொல்லி களம் இறங்குவது, மனைவிக்கு பயப்படுவது, ஹரீஷ் கல்யாண் உடன் ஈகோ மோதல், மகளுடனான பாச போராட்டம் என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மனைவியாக வரும் ஸ்வாசிகா நல்ல தேர்ந்த நடிப்பு. வயதுக்கு மிஞ்சிய கதாபாத்திரம் ஆனாலும் மெச்சும்படி நடித்திருக்கிறார். பொருத்தமான தேர்வு.
ஹரீஷ் கல்யாண் தொட்டால் பத்திக்கும் என்று சொல்வது போன்ற அதிரடியான இளைஞர் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். கிராமத்து இளைஞராகவே ஸ்கோர் செய்கிறார். அவரது ஜோடியாக வரும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நல்ல தேர்வு. துணிச்சலான, அழுத்தமான கதாபாத்திரத்தில் சிறந்த நடிப்பு.
காளி வெங்கட், பால சரவணன் துணை கதாபாத்திரங்களில் ஸ்கோர் செய்கிறார்கள். ஒரு மிக முக்கிய காட்சியில் அவர்களின் உரையாடல் யதார்த்தத்தின் பிரதிபலிப்பு. தேவதர்ஷினி, கீதா கைலாசம், ஜானகி போன்ற நடிகர்களும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
தினேஷ் குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் கிரிக்கெட் காட்சிகள் அனைத்தும் மிக மிக இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கிராமங்களையும், மக்கள் வாழ்வியலையும் நன்றாகவே காட்டியிருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையில் சில்லாஞ்சிரிக்கியே பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்களும் கதையோட்டத்துக்கு கச்சிதமாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் ஷான் ரோல்டன் கலக்கி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் கிரிக்கெட் காட்சிகளில் பதட்டத்தை தரும் இசை, குடும்ப காட்சிகளில் உணர்வுகளை அற்புதமாக பிரதிபலிக்கும் இசை.
இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார். தமிழர்களின் இதயங்களில் இரண்டற கலந்துள்ள கிரிக்கெட்டை மையமாக வைத்து, அதை சுற்றி மனிதர்களின் வாழ்வியலை அழகாக பிண்ணியிருக்கிறார். அத்துடன் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் மிக இயல்பாக, திணிக்காமல் அதே சமயம் மனதில் உணரும் விதத்தில் சொல்லியிருக்கிறார். பல வசனங்கள் படத்தில் அப்ளாஸை அள்ளும் அதே நேரத்தில் சிந்திக்க வைக்கிறது. அன்றாட வாழ்வில் நாம் காணும் யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. ரசிகர்களை ரசிக்க வைக்கும் அதே வேளையில் சொல்ல வந்த கருத்தையும் மிகச் சிறப்பாக சொல்லி, முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.