அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாலா’. மதுவுக்கு எதிரான இந்த படத்தில் தீரன், ஸ்ரீநாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத் ராம், ‘மெட்ராஸ்’ வினோத் மற்றும் பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி.ஜி.விஷ்வ பிரசாத் தயாரித்திருக்கிறார். விட்னஸ், வடக்குப்பட்டி ராமசாமி படங்களுக்கு பிறகு இந்நிறுவனம் தயாரிக்கும் மூன்றாவது திரைப்படம் இது. ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசையமைத்துள்ளார். மதுவுக்கு எதிராக கமெர்சியல் அம்சங்கள் கலந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் அதன் நோக்கத்தை நிறைவேற்றியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, வடசென்னையில் உள்ள பார்வதி பார் என்ற மதுபானக் கூடத்துக்காக இரண்டு குழுக்கள் மோதிக் கொள்கிறார்கள். அருள்தாஸ் மற்றும் அவருக்கு தம்பி போல இருக்கும் நாயகன் தீரான் ஆகிய இருவருக்கும் எத்தனையோ பார் நடத்தினாலும் அந்த பார்வதி பாரை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பது கனவு. அவருக்கு எதிராக அந்த பாரை கைப்பற்றி அது கைக்கு வந்த மறுநொடியே பழைய பகையால் அவர்களை பழிவாங்க நினைக்கிறார் சார்லஸ் வினோத். இவர்களின் போட்டிக்கு மத்தியில் டாஸ்மாக்குகளை இழுத்து மூட பெரும் அறப்போராட்டத்தையே நடத்தி வருகிறார் நாயகி. இவர்களுக்குள் நடக்கும் அடுத்தடுத்த சம்பவங்கள் தான் படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை.
நாயகனாக தீரன், முதல் படம் என்றாலும் கட்டுமஸ்தான உடலுடன் ஆக்ஷன் ஹீரோவுக்கு உண்டான அம்சங்களுடன் வலம் வருகிறார். சிம்பு குரலை ஜெராக்ஸ் எடுத்தாற்போல தோன்றும் அவரது குரல், தாடி, தலைமுடியுடன் ராக்கி பாய் யாஷ் போல முறுக்கிக் கொண்டு சுற்றுகிறார். அறிமுக நாயகன் என்றாலும் முடிந்தவரை நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷ். மனதில் பதியக்கூடிய கதாபாத்திரம். எந்த சூழல் வந்தாலும் தன் நோக்கத்துக்காக போராடும் இளம்பெண் கதாபாத்திரத்தில் கச்சிதம். அவர் படிக்க வைக்கும் குழந்தைகளும் மிக இயல்பான, ரசிக்கும்படியான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
குணாவாக அருள்தாஸ், பெரிதாக அரசியல் தெரியாத மக்கள் செல்வாக்குள்ள மனிதராக, சாலா, தாஸ் ஆகியோரை எடுத்து வளர்க்கும் ஒரு காட்ஃபாதராக நடித்திருக்கிறார். ஒரு அண்ணனாக, குருவாக நல்ல ஒரு தேர்வு. அவருக்கு எதிராக வில்லனாக வரும் சார்லஸ் வினோத் வில்லத்தடத்தில் ஸ்கோர் செய்கிறார். தாஸாக வரும் ஸ்ரீநாத், வில்லனின் ரைட் ஹேண்டாக வருபவரும் நல்ல சாய்ஸ். குடிக்க ஆசைப்பட்டு ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்தில் சுற்றும் பள்ளி மாணவர்கள் வரும் காட்சிகள் ரகளை.
ரவீந்தரநாத் குரு ஒளிப்பதிவும், தீசன் இசையும் படத்துக்கு கூடுதல் பலமாகவே இருக்கிறது. கமர்ஷியல் ஆக்ஷன் கதை என்றாலும் நல்ல மெசேஜ் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் மணிபால். அன்றாடம் நம்மை சுற்றி சமூகத்தில், நம் குடும்பங்களில் குடியால் நடக்கும் பாதிப்புகளை, பிரச்சினைகளை மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். மதுரையை சேர்ந்த நந்தினி இன்ஸ்பிரேஷனில் உருவான நாயகி கதாபாத்திரம் மனதில் ஆழப் பதிகிறது. கிளைமாக்ஸ் காட்சி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தப் படத்தை பார்த்து இரண்டு பேராவது திருந்தினால் அதுவே படத்தின் மிகப்பெரிய வெற்றி தான்.