கொட்டுக்காளி – திரை விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்து வெளியிட, கூழாங்கல் என்ற உலக சினிமாவை தமிழ் சினிமாவுக்கு தந்த இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. பின்னணி இசை, பாடல்கள் இல்லாமல் முழுக்க ஒலியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் கூழாங்கல் போலவே தரமான படமாக அமைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகி அன்னா பென்னுக்கு பேய் பிடித்துள்ளது, அதை ஓட்ட சாமியாரிடம் அழைத்துச் செல்லலாம் என அவர்கள் குடும்பத்தினர் முடிவெடுத்து அழைத்துச் செல்லும் புள்ளியில் கதை துவங்குகிறது. அவரை வீட்டில் இருந்து சாமியாரிடம் அழைத்துச் செல்லும் சில மணி நேர பயணமே திரையில் கதையாக விரிகிறது. அந்த பயணத்தில் அவர்களின் உரையாடல் வழியே முன்கதை மற்றும் அடுத்த நகர்வு என்ன என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே செல்கிறார் இயக்குனர். நாயகியை மணக்க வேண்டும் என்ற ஆசையில் நாயகன் சூரி, குடும்பத்தினர் உடனடியாக திருமணம் செய்து வைக்க முற்பட்டும் நாயகி படிக்க ஆசைப்பட அவளை கல்லூரிக்கு அனுப்புகிறார். அவளோ கல்லூரி படிக்க சென்ற இடத்தில் ஒருவனை காதலித்து விடுகிறாள். அது தவறான முடிவு என எண்ணும் குடும்பத்தினர் நாயகி மனதை மாற்றி சூரிக்கு திருமணம் செய்து வைக்க எடுக்கும் முயற்சியாய் அமைகிறது. இறுதியில் அன்னா பென், சூரி மனநிலை என்னவாக இருந்தது? என்பதே மீதிக்கதை.

சூரி, கதையின் மைய ஆண் கதாபாத்திரம். ஆரம்ப காட்சியில் இருந்தே அவரின் ஆணாதிக்க குணாதிசயம் காட்சிகளினூடே வெளிப்படுகிறது. ஒரு சில காட்சிகளில் நல்ல மனிதர் தானோ எனவும் நினைக்க வைக்கிறார். அடுத்த காட்சியிலேயே மிக மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறார். மிக அழுத்தமான கதாபாத்திரத்தை மிக யதார்த்தமான நடிப்பால் சிறப்பாக செய்திருக்கிறார்.

அன்னா பென், கிராமத்து பெண்ணாக மிக யதார்த்தமான நடிப்பு. என்ன நினைக்கிறார், மனநிலை என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அவர் முகபாவனைகளிலேயே மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்.

சூரியின் சகோதரிகள், அப்பா, மாமனார், பங்காளிகள், அக்கா மகன், சாமியார் அவ்வளவு ஏன் அந்த சேவல்கள் உட்பட ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர்களும் மிக இயல்பான நடிப்பு. கிராமத்து மனிதர்களை நம் கண்முன் நிறுத்துகிறார்கள்.

சக்திவேல் ஒளிப்பதிவு கிராமத்தை அப்படியே யதார்த்தமாக காட்டியிருக்கிறது. அங்கு நடக்கும் சம்பவங்களை நாமே நேரில் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வை தருகிறது. அந்த சாலைகளினூடே நாமே பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது.

இயக்குனர் வினோத்ராஜ் முந்தைய கூழாங்கல் படத்தை போலவே இந்த படத்திலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார். எளிய மனிதர்கள், அவர்களின் இயல்பான உணர்ச்சிகள், ஆணாதிக்க சிந்தனைகள், பெண்ணடிமை என பலவற்றையும் பேசியிருக்கிறார். கதாபாத்திரங்களின் மனநிலை, அவர்களின் ரியலைசேஷன் என எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். இயக்குனர் வினோத் ராஜின் திரை பயணத்தில் இன்னொரு முக்கியமான படமாக அமைந்துள்ளது இந்த கொட்டுக்காளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *