கிழக்கு சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார் போன்ற படங்களை போல கிராமத்தின் குடும்ப உறவுகளை பேசும் மண் சார்ந்த படங்கள் வெளிவருவது அரிதான விஷயமாகி விட்டது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் சொல்லும் படங்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகி இயக்குனர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “வீராயி மக்கள்”. அந்த குறையை போக்கியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, எதிர் எதிர் வீடுகளில் வசிக்கும் வேல.ராமமூர்த்தி குடும்பம், மாரிமுத்து குடும்பம் இரண்டும் தினம் தினம் சண்டையுடனே வாழ்கிறார்கள். இருவரும் அண்ணன் தம்பிகள், ஆனால் பகையுடனே காலத்தை கடத்துகிறார்கள். வேல.ராமமூர்த்தியின் இரண்டாவது மகன் சுரேஷ் நந்தாவுக்கு நம்ம குடும்பம் ஏன் இப்படி சண்டை சச்சரவுடன் இருக்கிறது, எனக்கு உறவுகள் வேண்டும் என நினைக்கிறார். அந்த நேரத்தில் தான் பக்கத்து ஊருக்கு செல்லும்போது தனக்கு ஒரு அத்தை இருப்பது தெரிய வருகிறது. கூடவே வெளியூரில் ஒரு சித்தப்பா இருக்கிறார் என்ற தகவலும் தெரிகிறது. அத்தை மகளை காதலிக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்தில் இந்த குடும்பம் ஏன் இப்படி தனித்தனி தீவுகளாக வாழ்கிறது என்ற உண்மையும் தெரிய வருகிறது. இவற்றை எல்லாம் கடந்து சுரேஷ் நந்தா இந்த பிரச்சனைகளை எல்லாம் எப்படி தீர்த்து உறவுகளை மீண்டும் மலர செய்கிறார் என்பது தான் மீதிக்கதை.
வேல.ராமமூர்த்தி தனக்கே உரிய தோரணையுடன் அந்த வீராயி குடும்பத்தின் மூத்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். கோபத்தில் கொப்பளிப்பதாகட்டும், தன் தம்பி மகளை ஆசிர்வதிக்கும்போது உணர்ச்சிவசப்படுவதாகட்டும், தன் தாய் மீது பாசத்தை காட்டுவதாகட்டும் உண்மையாகவே வாழ்ந்திருக்கிறார். இயல்பான நடிப்பை வழங்கும் மாரிமுத்து இந்த படத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். தீபா ஷங்கர் ஒரு அத்தையாக வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பிறந்த வீடு, புகுந்த வீடு என இரண்டுக்கும் இடையில் சூழ்நிலை கைதியாக மாட்டிக் கொண்டு அன்புக்கு ஏங்கும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். அவரது மகளாக அதாவது நாயகியா வரும் நந்தனா இயல்பான கிராமத்து பெண்ணாக அப்படியே கச்சிதமாக இருக்கிறார்.
வீராயி அம்மா, ரமா, செந்தி குமாரி, மற்ற குடும்ப உறவுகளாக நடித்த அத்தனை பேரும் இயல்பான தேர்வு. இவரை விட்டுட்டீங்கனு கேட்பது புரிகிறது. ஹீரோ சுரேஷ் நந்தாவை எப்படி மறக்க முடியும். நாயகனாக சுரேஷ் நந்தா தன்னால் முடிந்த நடிப்பை வழங்குகிறார். அத்தை மகளை பார்த்த நொடியே காதலில் விழுவது, குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற ஏக்கம், சித்தப்பா மகனை காப்பாற்ற அதிரடி சண்டை என ஓரளவுக்கு நன்றாகவே நடித்திருக்கிறார் சுரேஷ் நந்தா.
தீபன் சக்கரவர்த்தியின் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. கிளைமாக்ஸில் வரும் அம்மா பாடல் படத்துடன் பார்க்கும் போது மனதை வருடுகிறது. பின்னணி இசையும் ஓகே ரகம். சீனிவாசன் ஒளிப்பதிவு கிராமத்தின் இயல்பையும், பஞ்ச காலத்தில் வறட்சியையும், கிராமத்து மனிதர்களின் இயல்பான அழகையும் நன்றாகவே படம் பிடித்திருக்கிறது.
இயக்குனர் நாகராஜ் கருப்பையா குடும்ப உறவுகளின் மேன்மையையும், சேர்ந்து வாழ்தலின் அவசியத்தையும் திரையில் கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் பல காட்சிகள் கொஞ்சம் பழைய படங்களை பார்க்கும் உணர்வை தருவதை மறுக்க முடியாது. குறிப்பாக அத்தை மகளை காதலிக்க பின்னால் சுற்றும் காட்சிகளை சொல்லலாம். இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது. கிளைமாக்ஸில் ஒரு மனநிறைவு ஏற்படுவதையும் மறுப்பதற்கில்லை. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு குடும்பப்படம் தான் இந்த வீராயி மக்கள்.