தமிழ் சினிமாவில் நம் மண் சார்ந்த கலைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் வருவது அரிது. அந்த வகையில் தெருக்கூத்து கலையை மையப்படுத்தியும் ஒரு சில சினிமாக்கள் தவிர பெரும்பாலும் சினிமாக்கள் வந்ததே இல்லை என சொல்லலாம். இன்றைய இணைய உலகில் அந்த தெருக்கூத்து கலையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஜமா’. பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் சேத்தன், அம்மு அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளனர். லேர்ன் அண்ட் டீச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். மண் சார்ந்த கலையை களமாக கொண்ட இந்த படம் ஜெயித்ததா? நோக்கத்தை நிறைவேற்றியதா? பார்க்கலாம்.
கதைப்படி, திருவண்ணாமலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் நாயகன் பாரி, ஜமா என்று சொல்லப்படும் ஒரு கூத்துகுழுவில் இணைந்து கூத்தாடி வருகிறார். அந்த குழுவை நடத்தி வருபவர் சேத்தன். அவரது மகள் அம்மு அபிராமி. அவருக்கு பாரி மீது சிறு வயதில் இருந்தே காதல். பாரி தொடர்ந்து திரௌபதி வேஷம் கட்டுவதால் நடை, உடை, பாவனையில் பெண் தன்மை வெளிப்பட, அந்த ஊரில் உள்ள பெரும்பாலானோர் கேலி செய்கிறார்கள். அவரது அம்மா அவருக்கு திருமணம் முடித்து விட வேண்டும் என பல முயற்சிகளை எடுக்கிறார். எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன் வரவில்லை. அம்மு அபிராமியின் சம்மதத்தோடு அவரை பெண் பார்க்க செல்கிறார்கள், அவரின் அப்பா சேத்தன் அவமானப்படுத்து அனுப்பி விடுகிறார். பாரி அர்ஜுனன் வேஷம் கட்ட நினைக்கிறார். தன் விருப்பத்தை வாத்தியார் சேத்தனிடம் சொல்ல, அவர் அவமானப்படுத்தி அனுப்புகிறார். பின் அர்ஜுனன் வேஷம் கட்ட பாரி எடுக்கும் முயற்சிகள் தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் இயக்குனர், ஹீரோ என இரட்டை சவாரி செய்திருக்கிறார் பாரி இளவழகன். இதற்கு முன் பல படங்களில் நடித்திருக்கிறார், இந்த படத்தை இயக்கியும் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யம். கூத்துக் கலைஞனை அப்படியே கண் முன் கொண்டு வந்து சேர்க்கிறார். பெண் தன்மை உடையவராக, கூத்து நடிக்கும் கலைஞனாக, கூத்துக் கலையில் சேற்வதற்கு முன்பு என பல பரிமாணங்களை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
நாயகனுக்கு இணையான இன்னொரு கதாபாத்திரம் சேத்தன் நடித்த தாண்டவன். பொறாமை, சுயநலம், கோபம், கிளைமாக்ஸில் மன்னிப்பு கேட்பது என அத்தனை உணர்வுகளை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகன் என்ற பெயரை வாங்கி விட்டார். விடாது கருப்பு முதல் விடுதலை வரை அவர் திறமையை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம், ஆனாலும் தமிழ் சினிமா இதுவரை இவரை முழுமையாக பயன்படுத்தவில்லையோ என்று தோன்ற வைக்கிறது. பாரியின் பெற்றோர் சிறப்பான தேர்வு. அம்மா மிகவும் எமோஷனலாக்கி விட்டு செல்கிறார். அப்பா கலை மீது வைத்த மரியாதையை மிகச்சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். அம்மு அபிராமி கதாபாத்திரம் படத்துக்கு கூடுதல் பலம்.
ஒளிப்பதிவில் கிராமத்தையும், கூத்துக் கலையையும் அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள். இளையராஜா தரமான படங்களின் முதல் தேர்வாக எப்போதும் இருப்பார் என்பது இந்த படத்தில் ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது. அவரது இசை இப்படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளது. தெருக்கூத்து காட்சிகளிலும், அதை தொடர்ந்து வரும் படத்தில் முதுகெலும்பான காட்சிகளிலும் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் தான்.
சினிமாவை கலையாக நேசித்து எடுக்கப்படும் இது போன்ற படங்கள் வணிக ரீதியான வெற்றியை பெறுவது தான் அந்த கலைக்கு நாம் செய்யும் மரியாதை. கலையை நேசிப்பவர்களுக்கு இப்படம் விருந்தாக அமையும் என்பதை உறுதியாக சொல்லிக் கொள்ளலாம். இதுவரை தெருக்கூத்தை பார்க்காதவர்கள் இப்படத்தைப் பார்த்தால் அச்சு அசல் தெருக்கூத்து அனுபவத்தை உணரலாம். இயக்குனர் பாரி இளவழகன் இந்த படத்தை எடுத்ததற்கே அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். அதை சிறந்த ஒரு படமாக தந்ததற்கு அவருக்கு ராயல் சல்யூட்.