இந்தியா சினிமாவில் அரை நூற்றாண்டுகள் கடந்தும் சினிமா தயாரிப்பில் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டிய நிறுவனங்கள் ஒரு சில மட்டுமே. அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். பொன்விழா ஆண்டை கொண்டாடும் வைஜெயந்தி மூவிஸ் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் நடிக்க, நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் தான் ‘கல்கி 2898 AD’. ‘ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள பான் இந்தியா படம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மகாபாரதக் கதையின் நீட்சி என சொல்லும் அளவுக்கு கிபி 2898-ல் நடக்கும் கதை தான் கல்கி.
படத்தின் கதைப்படி, உலகின் முதல் நகரம் என்று சொல்லப்பட்ட காசி, உலகின் கடைசி நகரமாக இருக்கிறது. உலகமே அழிந்து உருக்குலைந்து போன நேரத்தில் எஞ்சியிருக்கும் ஒரே நகரம் காசி தான். அங்கு இருக்கும் எந்த இயற்கை வளமும் இல்லாமல் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பசி, பஞ்சம் என வறட்சியில் வாழ்கிறார்கள். காசிக்கு மேலே ஆகாயத்தில் காம்ப்ளெக்ஸ் என்ற ஒரு இடத்தை உருவாக்கி அதை ஆண்டு வருகிறார் யாஸ்கின் என்ற கமல்ஹாசன். அங்கு எல்லா வளங்களும் இருக்கிறது, சொர்க்கம் போன்ற ஒரு இடமாக பரந்து விரிந்து இருக்கிறது. காசியில் வாழும் பிரபாஸூக்கு எப்படியாவது அதிகம் சம்பாதித்து காம்ப்ளெக்ஸில் போய் செட்டில் ஆகி விட வேண்டும் என்ற கனவு. பவுண்டி ஹண்டராக வேலை செய்து, எவ்வளவோ முயற்சி செய்தும் சம்பாதிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். ஒரு நாள் காம்ப்ளெக்ஸில் இருந்து தப்பி வந்த தீபிகா படுகோனேவை பிடித்து கொண்டு வருபவர்களுக்கு 1 மில்லியன் யூனிட் என்ற அறிவிப்பு வர அவரை பிடிக்க விரைகிறார். 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் அவரை காப்பது தான் தன் கடமை என அவரை காக்க முயற்சி செய்கிறார் அஸ்வத்தாமாவாக வரும் அமிதாப் பச்சன். சம்பாலா என்ற ரகசிய இடத்தில் இருந்து செயல்படும் போராட்டக் குழுவும் தீபிகாவை காக்க பெரும் முயற்சிகளை எடுக்கிறது. தீபிகாவை காம்ப்ளெக்ஸ் ஆட்களிடம் இருந்து காப்பாற்றினார்களா? பிரபாஸின் நோக்கம் என்ன ஆனது? காம்ப்ளெக்ஸ் போகும் கனவு என்ன ஆனது? தீபிகாவை காக்க ஏன் இவர்கள் எல்லாம் போராடுகிறார்கள்? தீபிகாவை ஏன் வில்லன்கள் தேடுகிறார்கள்? என்பதை 3 மணி நேரம் திரையில் ஒரு விஷூவல் ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.
நாயகன் பிரபாஸ், பாகுபலிக்கு பிறகு அவர் நடித்த எந்த ஒரு படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. சலார் ஓரளவு பரவாயில்லை ரகம். ஆனால் இந்த படம் அவருக்கு கைகொடுக்கும் என்று நம்பலாம். பைரவாவாக அவர் செய்யும் அலப்பறைகள் ஃபேன்ஸூக்கு ட்ரீட். பிரமானந்தம் உடன் அவர் செய்யும் காமெடி, அமிதாப் உடன் ஆக்ஷன், வில்லன்கள் உடன் அதிரடி என ரசிக்க வைக்கிறார். ஆனாலும் ஹீரோவாக இருந்தாலும் அவ்வப்போது வந்து போகிறார்.
அமிதாப் பச்சன், அஸ்வத்தாமாவாக கலக்கியிருக்கிறார். வயதான ஒரு ஹீரோவுக்கு ஒரு மாஸ் கதாபாத்திரம் அமைந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு கதாபாத்திரம். ஆக்ஷன் காட்சிகளில் வில்லன்களை மட்டுமல்ல பிரபாஸையே பந்தாடுகிறார். மஹாபாரதப் போர் காட்சிகளில் காட்டுவதும் சூப்பர்.
கமல்ஹாசன் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். அவரது தோற்றமே பயமுறுத்தும் விதத்தில் இருக்கிறது. இரண்டு காட்சிகள் வந்தாலும் தன் நடிப்பால் அசர வைக்கிறார். தீபிகா படுகோனே கர்ப்பிணி பெண்ணாக கதையின் அடிநாதமான ஒரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். திஷா படானி ஒரு காட்சியில் வந்து காணாமல் போகிறார். பசுபதி, அன்னா பென், ஷோபனா, சாஸ்வதா சாட்டர்ஜி, ராஜேந்திர பிரசாத் என நடித்த அனைத்து நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒரு சில நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் வந்து தியேட்டரை இன்னும் குதூகலிக்க வைக்கிறார்கள்.
செர்பிய நாட்டு ஒளிப்பதிவாளர் படத்தை தன்னுடைய ஒளிப்பதிவால் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார். போர் காட்சிகள், காம்ப்ளெக்ஸ், சம்பாலா, காசி நகரம் என எல்லாவற்றுக்கும் தன் ஒளிப்பதிவால் உயிரூட்டி இருக்கிறார். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக கிராஃபிக்ஸ் காட்சிகள் வியக்க வைக்கிறது.
சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். பாடல்களும் கதைக்கு வலு சேர்க்கிறது. கதையை ஒட்டி அமைந்த பாடல்கள் கூடுதல் பலம்.
நாக் அஸ்வின் முந்தைய படங்களை போலவே தான் எடுத்துக் கொண்ட கதைக்கு நியாயம் சேர்க்க கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படி ஒரு கற்பனை உலகை படைத்திருந்த விதமும், அதனுடன் மஹாபாரத அம்சங்களை, கதாபாத்திரங்களை இணைத்த விதமும் அபாரம். 2898 கால கட்டத்தில் நடக்கும் கதையாக மிக அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார். இப்படி ஒரு படத்தை, கற்பனையை திரையில் ரசிகர்களுக்கு கடத்தியிருக்கும் விதம் அருமை. இத்தனை நட்சத்திரங்களை ஒரே படத்திற்குள் கொண்டு வந்ததும், அவர்களை சிறப்பாக கையாண்ட விதமும் நாக் அஸ்வினின் திறமைக்கு சான்று. இந்திய சினிமாவில் வந்த நல்ல ஒரு சினிமாட்டிக் எக்ஸ்பீரியன்ஸ் திரைப்படமாக கல்கி நிச்சயம் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.