மஹாராஜா – திரை விமர்சனம்

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் “மஹாராஜா”. இது விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருக்கும் 50வது படம். அனுராக் காஷ்யாப், நட்டி, மம்தா மோகன்தாஸ், அபிராமி, சிங்கம் புலி, முனீஷ்காந்த், SS ஸ்டான்லி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்துக்கு காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். Passion studios சுதன் மற்றும் The route ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். பெரும்பாலான ஹீரோக்கள் தங்கள் 50வது படத்தில் தோல்வியையே சந்தித்திருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி வெற்றியை சந்தித்தாரா இந்த மஹாராஜாவில்? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சென்னையில் சலூன் கடை வைத்திருக்கும் மஹாராஜா என்ற விஜய் சேதுபதி தன் மகள் ஜோதியுடன் வாழ்ந்து வருகிறார். ஜோதிக்கு படிப்பை விட விளையாட்டில் தான் ஆர்வம் அதிகம். தன் மகள் தான் அவருக்கு உலகமே. தன் மகள் குழந்தையாக இருந்தபோது நடந்த ஒரு விபத்தில் விஜய் சேதுபதியின் மனைவி இறந்து விட, அவர் குழந்தையை காப்பாற்றுகிறது ஒரு இரும்பு குப்பைத் தொட்டி. அதற்கு லக்ஷ்மி என்ற பெயர் வைத்து வீட்டில் இன்னொரு ஜீவனாகவே வைத்திருக்கிறார்கள். ஒரு நாள் விஜய் சேதுபதியின் மகள் வெளியூரில் நடக்கும் ஒரு ஸ்போர்ட்ஸ் கேம்பிற்கு செல்கிறாள். அந்த நேரத்தில் விஜய் சேதுபதியின் வீட்டில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் நுழைந்திருக்க, வீட்டில் படுகாயங்களுடன் விஜய் சேதுபதி கிடக்கிறார். அடுத்த நாள் காவல் நிலையத்துக்கு சென்று என் லக்ஷ்மியை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள், வழக்கு பதிவு செய்யுங்கள் என கேட்கிறார் விஜய் சேதுபதி. அவர்கள் அதை கண்டு கொள்ளாததால், லக்ஷ்மியை கண்டுபிடித்து தந்தால் 5 லட்சம் பணம் தருகிறேன் என சொல்ல, அதை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் நட்டி. லக்ஷ்மியை கண்டுபிடித்தார்களா? வீட்டிற்குள் நுழைந்த அந்த கும்பல் யார்? விஜய் சேதுபதி நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகனாக விஜய் சேதுபதியின் 50வது படம். ஒரு மசாலா படமாக இல்லாமல் நல்ல ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கே அவருக்கு முதல் பாராட்டுக்கள். அவர் கேரியரில் இன்னும் ஒரு தனித்துவமான கதாபாத்திரமாக அமைந்துள்ளது. மகளுக்காக எதையும் செய்யும் கேரக்டர், போலீஸ் ஸ்டேஷனில் எவ்வளவு அவமானப்பட்டாலும் எதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அங்கேயே இருப்பது, இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சி என நடிப்பில் இன்னொரு பரிமாணம் எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யாப், அவர் திரையில் தோன்றும்போதே ஒரு இமேஜ் செட் ஆகி விடுகிறது. வட இந்தியராக இருந்து கொண்டு இந்த தமிழ் கதாபாத்திரத்தில் பார்க்கும்பொழுது தான் கொஞ்சம் ஒன்ற முடியவில்லை. மற்றபடி நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். நட்டி இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். தனக்கே உரிய எனர்ஜியுடன் படம் முழுக்க அலப்பறை கிளப்புகிறார். பண ஆசை பிடித்த போலீஸாக தோன்றினாலும் ஒரு முக்கியமான காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார். அபிராமி சின்ன கேரக்டரில் வந்து போனாலும் மனதில் நிற்கிறார். மம்தா மோகன்தாஸ் கதாபாத்திரத்திற்கு கதையில் பெரிதாக ஸ்கோப் இல்லை. பாரதிராஜா கதாபாத்திரத்திரம் எதற்கு என என்ன வைக்கிறது. சச்சனா நமிதாஸ், சிங்கம் புலி, முனீஷ்காந்த், அருள் தாஸ், வினோத் சாகர், எஸ் எஸ் ஸ்டான்லி, கல்கி என மற்ற நடிகர்கள் அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அஜனீஷ் லோக்நாத் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் இசை நம்மை கட்டிப் போடுகிறது. தாயே தாயே என்ற அந்த ஒரு பாடல் படத்துடன் ஒன்ற வைக்கிறது. தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு சென்னையின் இரண்டு முகங்களையும், இருண்ட முகங்களையும் அழகாக காட்டியிருக்கிறது. எடிட்டர் ஃபிலோமின்ராஜ் இந்த படத்தின் இன்னொரு மிக முக்கிய பக்க பலம். நித்திலன் திரைக்கதையை திரையில் அழகாக கொண்டு வந்த பங்கு அவரையே சாரும். நான் லீனியர் எடிட்டிங்கில் முன் பின்னாக காட்சிகளை கோர்த்த விதம் கதையை மேலும் விறுவிறுப்பாக்கி உள்ளது.

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் தன் முதல் படத்தை போலவே இந்த படத்திலும் இறங்கி அடித்திருக்கிறார். சாதாரண மனிதர்களின் வாழ்வியல் உடன் இணைந்த கதைகளை தன் நேர்த்தியான திரைக்கதையால் விறுவிறுப்பாக சொல்ல முடியும் என்பதை சாதித்து காட்டியிருக்கிறார். இந்த கதையை இந்த வகையிலும் சொல்ல முடியுமா? என ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சி, இன்ஸ்பெக்டர் பேசும் ஒரு வசனம், திருடனை தயார் செய்யும் காட்சி என பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார். வெளிநாட்டு படங்களை அதிகம் பார்க்கும் ரசிகராக இருந்தால் படத்தில் பல இடங்களை எளிதில் யூகித்து விட முடிகிறது. சாமானிய ரசிகர்களுக்கும், நல்ல திரில்லர் படங்களை ரசிக்கும் ரசிகர்களுக்கும் இந்த படம் நிச்சயம் ஒரு தியேட்டர் அனுபவமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்த படத்தை கொடுக்க உழைத்த ஒட்டு மொட்த குழுவுக்குமே ஒரு ஹாட்ஸ் ஆஃப் சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *