சாமானியன் – திரை விமர்சனம்

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில், இயக்குநர் R.ராகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள  படம் ‘சாமானியன். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்குமாம் குறிஞ்சிப்பூ, அந்த மாதிரி கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு “மக்கள் நாயகன்” ராமராஜன் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார், அதுவும் அவர் ஆசைப்பட்டது போலவே கதாநாயகனாகவே. நக்ஸா சரண், ஸ்மிருதி வெங்கட், அபர்ணதி, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், KS ரவிக்குமர், லியோ சிவகுமார், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 23 வருடங்களுக்கு பிறகு இசைஞானி இளையராஜா உடன் இணைந்திருக்கிறார் ராமராஜன் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இந்த படம், பழைய மேஜிக்கை மீண்டும் நிகழ்த்தியதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கிராமத்தில் இருந்து ராமராஜனும், எம்எஸ் பாஸ்கரும் சென்னைக்கு வருகிறார்கள், வந்து தன் நண்பன் ராதாரவி வீட்டில் தங்குகிறார்கள். அடுத்த நாளே வங்கிக்கு போய் பணம் எடுக்கணும் என சொல்லி, ராதாரவியின் பக்கத்து வீட்டுக்காரர் மகனையும் அழைத்துக் கொண்டு ராமராஜன் கிளம்புகிறார்.  பாஸ்கர் இன்னொரு ஆட்டோவில் வேறு ஒரு இடத்துக்கு கிளம்புகிறார். வங்கிக்கு ராமராஜன் பணம் எடுக்க அல்ல, வங்கியை ஹைஜாக் செய்வது தான் ராமராஜனின் திட்டம் என்பது புரிகிறது. பாஸ்கர், ராதாரவியும் அவர்கள் பங்குக்கு இரண்டு நபர்களின் குடும்பங்களை பணய கைதியாக சிறைபிடிக்கிறார்கள். அங்கு வரும் போலீஸிடம் மூன்று கோரிக்கைகள் வைக்கிறார் ராமராஜன். அவர் யார்? எதற்கு வங்கிக்குள் நுழைந்தார்? அவரின் பின்னணி என்ன? என்பதை பழிவாங்கும் கதை போல சொல்ல ஆரம்பித்து, பின் சமூகத்துக்கு செய்யும் சேவையாக முடிகிறது படம்.

ராமராஜன் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார். இது அவருக்கு 45வது படம். அவரின் அறிமுக காட்சியில் மிகப்பிரபலமான காட்சியில் பஸ்ஸில் இருந்து இறங்கும் காட்சியில் ரசிக்க வைக்கிறார். அது தொடங்கி ஆங்காங்கே இளையராஜா, ராமராஜன் பாடல்களை பின்னணியில் ஒலிக்க விட்டது அருமையான நோஸ்டால்ஜியா. வயது ஆனது அவரின் நடிப்பில் அப்படியே பிரதிபலிக்கிறது. அதை மனதில் வைத்தே வேஷ்டி சட்டையில் அவரை படம் முழுக்க வர வைத்தது நல்ல முடிவு. ஆரம்ப காட்சியிலேயே ஹைவே மோட்டல் அக்கிரமங்களை பேசி அதிரடி காட்டுகிறார். அவர் பேசும் சமூக கருத்துக்கள்  நச்.

அவரின் நண்பர்களாக வரும் ராதாரவியும், எம்எஸ் பாஸ்கரும் படத்துக்கு பக்க பலம். ஃபிளாஷ்பேக்கில் வரும் நக்ஷா சரண், லியோ சிவா இருவரும் மனதில் பதிகிறார்கள். கேஎஸ் ரவிக்குமார் காவல்துறை உயரதிகாரியாக வந்து ஸ்கோர் செய்கிறார். மைம் கோபி வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் வழக்கம் போல வந்து செல்கிறார். போஸ் வெங்கட் வங்கி மேலாளராக, தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து விட்டு போகிறார். ஸ்மிருதி வெங்கட் கர்ப்பிணி பெண்ணாக ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார். அபர்னதி டிவி சேனல் நிருபராக அதிரடி கேள்விகளை கேட்டு தன் பங்கை சிறப்பாக செய்கிறார்.

இசைஞானி இளையராஜா, ராமராஜன் காம்போ என்ற எதிர்பார்ப்பில் போய் உட்காந்ர்தால் ஏமாற்றமே நமக்கு மிச்சம். ஏனெனில் அவர்கள் வரலாறு அப்படி. காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை கொடுத்த அவர்கள் இந்த படத்துக்கு தந்த பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. இளையராஜாவே பாடிய தத்தி வா தத்தி வா பாடல் ஒரு ஆறுதல். பின்னணி இசையும் ஓகே ரகம். அருள்செல்வன் ஒளிப்பதிவு ஓகே ரகம். படத்துக்கு தேவையான வகையில் படம் பிடித்து தந்திருக்கிறார். ராமராஜன் வயதுக்கு ஏற்ப சண்டைக்காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார்.

கார்த்திக் குமார் எழுதிய கதை இன்றைய காலகட்டத்துக்கு அவசியமான ஒரு கதை. அதற்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராகேஷ். கடனே வாங்காம வாழ்க்கையை வாழ கத்துக்கணும் என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். வங்கிகள் எப்படி நம்மை கடன் வாங்க வைக்கும், எப்படி அதை வசூல் செய்யும், எப்படி எல்லாம் பணத்தை கறக்கும் என்பதை கச்சிதமாக திரையில் காட்டியிருக்கிறார். எல்லா மக்களும் ஏதோ ஒரு விதத்தில் தங்களை பொருத்திப் பார்த்துக் கொள்வார்கள் என்பது நிதர்சனம். இது போன்ற பல திரைப்படங்கள் வந்து போகின்றன, கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு படம் கூட இதே போன்ற ஒரு படம் தான். அப்படியும் இந்த படத்தை மக்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என தந்திருக்கிறார் இயக்குனர். மக்கள் விழிப்புணர்வை கொடுக்கக் கூடிய படம், நிச்சயம் ஒரு தடவை பார்க்கலாம், இளையராஜா பாடல்களும் சிறப்பாக வந்திருந்தால் இன்னும் ஒரு சிறப்பான படமாக இருந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *