மனிதர்கள் – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் சில சின்ன பட்ஜெட் படங்கள் கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் சில நண்பர்கள் உதவியுடன் Studio Moving Turtle மற்றும் Sri Krish Pictures தயாரிப்பில் அறிமுக இயக்குநர்  ராம் இந்திரா  இயக்கத்தில் முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் “மனிதர்கள்”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஒரு இரவில் ஒன்றாகக் கூடி மது அருந்தும் ஆறு நண்பர்களில் ஒருவர் பாட்டில் குத்தி ரத்தம் சிந்தி சரிந்து கிடக்கிறார். அவர் எப்படி இறந்தார் என்பதில் துவங்கி அவர் இறப்பு நம் எதிர்காலத்தை பாதிக்கும், இந்த பிரச்சினையை யாருக்கும் தெரியாமல் எப்படி மறைத்து தப்பிப்பது என மற்ற ஐந்து நண்பர்களும் அந்த இறந்த நண்பரின் உடலை கார் டிக்கியில் போட்டுக் கொண்டு கிளம்புகிறார்கள். அந்த கார் பயணத்தில் அடுத்த ஆறு மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக கண்முன் விரிகிறது. அந்த பிரச்சினையை எப்படி அவர்கள் கையாண்டார்கள்? அந்த நண்பனின் இறப்பு மற்றவர் மனங்களில் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்குகிறது? அதை சுற்றி மற்றவர்களின் அடுத்தடுத்த நகர்வுகள் என்ன? என்பதை திரில்லர் படமாக தந்திருக்கிறார் இயக்குனர் ராம் இந்திரா.

நடிகர்களை பொறுத்தவரையில் மொத்தமே ஐந்து பேர் தான். அவர்களை மட்டுமே வைத்து 106 நிமிடங்கள் நம்மை அமர வைத்திருக்கிறார் இயக்குனர். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சொல்வதை விட அந்த 5 பேரின் நடிப்புமே அபாரமாக இருந்தது எனலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான குணாதிசயம். அமைதியாக தெளிவான சிந்தனையுடன் மற்ரவர்களை அடக்கி ஆளும் கபில் வேலவன் அதில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். தக்ஷா, அர்ஜுன் தேவ், சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் நடிப்பும் படத்துக்கு பக்க பலம்.

அஜய் ஆப்ரஹாம் ஜார்ஜ் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ஹைலைட். மொத்த படமுமே இருட்டில் நடக்கும் இந்த படத்துக்கு அந்த தன்மையை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். பல காட்சிகளில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். அனிலேஷ் மேத்யூ இசை படத்துக்கு தேவையான வகையில் அமைந்துள்ளது.

அறிமுக இயக்குனர் ராம் இந்திரா ஒரே இரவில் நடக்கும் கதையை எடுத்துக் கொண்டு அதை மிகவும் ஆழ்மன உணர்வுகளை தூண்டும் ஒரு படத்தை தந்துள்ளார். மனிதர்கள் என்பவர்கள் மனம் அந்தந்த சூழலுக்கு ஏற்ப எப்படி தம்மை மாற்றிக் கொள்ளும் அன்பதையும் காட்சிகளின் மூலம் காட்டியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிப்படுத்திய விதம் நம் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிஜம். சின்ன பட்ஜெட்டில் நல்ல ஒரு முயற்சி. இண்டிபெண்டண்ட் சினிமாவில் ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்கும் என்பது நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *