தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்கள் சிலர் இருப்பர், அதில் இவர் எப்போடா அடுத்த படம் பண்ணுவார் என ரசிகர்களை அதிகம் ஏங்க வைத்த, அதிகம் பேசப்பட்ட ஒருவர் தான் ‘மௌன குரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார். எட்டு ஆண்டுகள் கழித்து அவர் இயக்கிய ’மகாமுனி’ மௌனகுரு அளவுக்கு பேசப்படவில்லை என்றாலும் தற்போது அவர் இயக்கியிருக்கும் ரசவாதி படம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்திருக்கிறது. கிரியேட்டிவிட்டியில் எந்த குறையும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த சாந்தகுமார் இந்த படத்தை அவரே தயாரித்திருக்கிறார். அர்ஜூன் தாஸ், தான்யா, சுஜித் ஷங்கர், ரேஷ்மா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கடலூரில் ஒரு கொலை வழக்கில் இருந்து தப்பிக்க தன் உயர் அதிகாரியை சுஜித் ஷங்கர் கொலை செய்வதில் ஆரம்பிக்கிறது படம். அர்ஜூன் தாஸ் ஒரு சித்த மருத்துவராக சதாசிவ பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கொடைக்கானலில் கிளினிக் வைத்திருக்கும் அவர் ஒரு கட்டத்தில் அங்குள்ள ஹோட்டலுக்கு மேனேஜராக வரும் நாயகி தன்யாவை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர, அந்த நேரத்தில் அங்கு மாற்றலாகி வரும் இன்ஸ்பெக்டர் சுஜித் ஷங்கருக்கு அர்ஜூன் தாஸ் சந்தோஷமாக இருப்பது உறுத்தலாக இருக்கிறது. அர்ஜூன் தாஸையும், தன்யாவையும் பிரிக்க முயற்சியும் எடுக்கிறார். அவர் உள்நோக்கத்துக்கான பின்னணி என்ன? அவரின் சூழ்ச்சியை மீறி நாயகன், நாயகி இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அர்ஜூன் தாஸ், முந்தைய படங்களை போல அல்லாமால் அமைதியான, தெளிந்த நீரோடை போன்ற மனம் படைத்த ஒரு கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். கால் ஊன்றி ஊன்றி நடக்கும் அவர், படம் முழுக்க அதை மிக யதார்த்தமாக நடிப்பில் கொண்டு வந்துள்ளார். தன்யாவுடன் காதல், ரேஷ்மாவுடனான காதல் என ரொமான்ஸிலும் தன் வேறு ஒரு முகத்தை காட்டியிருக்கிறார். அவர் கேரியரில் நல்ல ஒரு இடத்தை பிடிக்கும் இந்த ரசவாதி.
அவருக்கு வில்லனாக வரும் சுஜித் ஷங்கர் நடிப்பு மிரட்டல். ஆரம்ப காட்சியில் ஆகட்டும், ஹோட்டலில் மோர் குழம்பு தான் வேணும் என அதட்டும் இடமாகட்டும், போலீஸ் கான்ஸ்டபிள்களை கேவலமாக நடத்தும் இடமாகட்டும், தன் மனைவியை நடத்தும் விதமாகட்டும் ஒரு கொடூரமானவனை கண்முன் நிறுத்துகிறார். நடிப்பில் மிரட்டும் இன்னொரு வில்லன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ளார்.
தன்யா ரவிச்சந்திரன் தன் யதார்த்த நடிப்பால் வலு சேர்க்கிறார். அவருக்குள் ஏதோ காயம் இருப்பதை தன் நடிப்பால் ரசிகர்களுக்கு தெரிய வைக்கிறார். காதல் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். ரேஷ்மா கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். பரத நாட்டியத்தால் நம்மை வசீகரிக்கிறார். வில்லனிடம் சிக்கி கஷ்டப்படும் காட்சிகளில் நம்மை பரிதாபம் கொள்ள வைக்கிறார். ஜி.எம்.சுந்தர், விஜே ரம்யா, ரிஷிகாந்த் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்கள்.
சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில் மீண்டும் ஒரு பாலு மகேந்திரா படம் பார்த்த உணர்வு. கோடையின் குளுமையை படம் பார்க்கும் நமக்கு கடத்துகிறார். தமன் பின்னணி இசை சிறப்பு. அவர் இசையில் வரும் கர்நாடக சங்கீதம் ஃபியூஷன் இசை ரசிக்க வைக்கிறது. திரையில் அது ஒரு புதி முயற்சி.
சின்ன சின்ன உயிரினங்களுக்கும் நல்லது நினைக்கும் ஹீரோவுக்கும், மனிதனாவது, விலங்காவது என அனைத்துக்கும் கெடுதல் நினைக்கும் குரூர மனம் படைத்த வில்லன் இவர்கள் இருவரும் ஒரு புள்ளியில் இணைகிறார்கள். அதை சுற்றி நிகழும் ஒரு பழிவாங்கல் கதை தான் இந்த ரசவாதி. அர்ஜூன் தாஸ் நல்லவர், வில்லன் ஒரு குரூர மனம் கொண்ட சைக்கோ என்பதை காட்ட ஏகப்பட்ட காட்சிகள் வருவது சலிப்பை ஏற்படுத்துகிறது. சுஜித் – விஜே ரம்யா இடையிலான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன, ஆனாலும் கதையின் தன்மையில் இருந்து விலகி சில்லியாக இருக்கிறது.
சிறுவயதில் குடும்ப வன்முறை சூழலில் வளரும் குழந்தையின் வாழ்க்கையை சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார். படம் நெடுகிலும் தமிழ்நாடு எல்லைக்குள் கேரளா கழிவுகளை கொட்டும் அவலம், சைக்காலாஜிஸ்ட் சினிமா விமர்சனம் செய்வது போன்ற விஷயங்களை பகடி செய்திருக்கிறார். அத்துடன் சித்த மருத்துவம் பற்றியும், மலையை தோண்டும் விஷயங்களையும் சீரியஸாகவே பேசியிருக்கிறார் சாந்தகுமார். சுவாரஸ்யமான ஒன்லைன், ஆனால் பலவீனமான திரைக்கதையால் நம்மை கொஞ்சம் விலக வைக்கிறது. ஆனால் ஸ்லோபர்னர் படங்களை விரும்பும் ரசிகர்கள் தாராளமாக ரசிக்கலாம்.