Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் விகாஸ் படிஸா பேசும்போது, ‘எனக்குத் தமிழில் திரையரங்கில் வெளிவரும் முதல் படம், இதற்கு முன் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ் செய்திருந்தேன், எனக்கு முதல் வாய்ப்பளித்த அறிவழகன் சாருக்கு நன்றி. இப்படத்தில் எல்லோருமே கலக்கியிருக்கிறார்கள். இயக்குனர் கௌதம் சார் படத்தை வேற லெவலில் செய்துள்ளார். நிறைய உழைத்துள்ளார். தர்ஷன் இதில் கலக்கியிருக்கிறார். படம் பார்த்து அவரா இது என ஆச்சரியப்பட்டேன். என் மியூசிக் குழுவிற்கு நன்றி. ஆகஸ்ட் 1 அன்று படம் வெளியாகிறது” என்றார்.
கலை இயக்குநர் மனோஜ் பேசும்போது, “இது என் மூன்றாவது படம், அறிவழகன் சார் தான் என்னை அறிமுகப்படுத்தினார், அவரது அஸிஸ்டெண்ட் கௌதம் சார் இப்படத்தில் வாய்ப்பு தந்துள்ளார். செட் எல்லாம் ரியலாக இருக்க வேண்டும் என முதலிலேயே சொல்லி விட்டார். அப்படித்தான் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். படம் மிக நன்றாக வந்துள்ளது” என்றார்.
நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, “தயாரிப்பாளர் அமெரிக்காவிலிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். தயாரிப்பாளர் குமாருக்கு வாழ்த்துகள். இயக்குனர் கௌதம், ஈரம் அன்பழகனிடமிருந்து வந்து இப்படத்தை எடுத்துள்ளார். மிக அற்புதமாக இப்படத்தை எடுத்துள்ளார். செட் எல்லாம் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. தர்ஷன் அருமையாக நடித்துள்ளார். இந்த மாதிரி புதியவர்களை ஊக்குவிக்கும் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரி படங்கள் மட்டுமே வருகிறது அது மக்களுக்கு போரடிக்கிறது. அவர்களுக்கு வித்தியாசமான படங்களைக் கலைஞர்கள் தர வேண்டும். அதே மாதிரியான படமாக சரண்டர் சரியான நேரத்திற்கு வருகிறது” என்றார்.
நடிகை பாடினி குமார் பேசும்போது, “எனக்கு வாய்ப்பளித்த கௌதம் சாருக்கு நன்றி. சரண்டர் படம் ஹார்ட் ஒர்க், விடாமுயற்சி எல்லாம் சேர்ந்தது தான் இப்படம். கேமராவுக்கு முன்னும் பின்னும் எல்லா கலைஞர்களும் மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். ஆகஸ்ட் 1 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது” என்றார்.
எடிட்டர் சாபு ஜோசப் பேசும்போது, “என்னோட அஸிஸ்டெண்ட் ரேணு கோபால் படம் செய்துள்ளார். மகிழ்ச்சி. இயக்குநர் கெளதமை முதலில் பார்க்கும் போதே அவர் ஒரு இயக்குனர் போலத் தான் இருந்தார். அவரிடம் நிறையக் கதைகள் இருந்தது. கோடம்பாக்கத்தில் முதல் படம் செய்துவிடக் கனவுகளோடு பலர் காத்திருக்கின்றனர். அந்த வகையில் கௌதம் இப்படம் செய்துள்ளது மகிழ்ச்சி. இப்படத்தில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தந்துள்ள தயாரிப்பாளர் குமார் அவர்களுக்கு நன்றி. அஸிஸ்டெண்ட் ரேணு கோபால் 6 வருடம் என்னுடன் வேலை செய்தவர். சினிமாவில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர் பெரிய அளவில் வருவார். இந்த டீமில் எல்லாருமே என் நண்பர்கள் தான்” என்றார்.
இயக்குனர் கௌதம் கணபதி பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை, என் குரு அறிவழகன் சார் இங்கு வந்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. இப்படத்தை மிக நேர்மையாக எடுத்துள்ளோம். படத்தில் பாட்டு இல்லை, தேவைப்படவில்லை, தர்ஷனும் எனக்கு இது மாதிரி வேண்டும் என எதையுமே கேட்கவில்லை. கேமராமேன், எடிட்டர், இசை என எல்லாமே அறிவழகன் சாரிடமிருந்து வந்தவர்கள் தான். ஒரு டீமாக எல்லோரும் உழைத்துள்ளோம்” என்றார்.
இயக்குனர் அறிவழகன் பேசும்போது, ‘ என்னுடைய உதவி இயக்குனர் கௌதம் இயக்கியுள்ள படம் சரண்டர். இந்த மொத்த குழுவும் என்னுடன் வேலை செய்தவர்கள் தான், இவர்களுக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் குமார் அவர்களுக்கு நன்றி. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. மனோஜ் சப்தம் படம் செய்தவர். இப்படத்தில் மிக நேர்த்தியாகச் செய்துள்ளார். எடிட்டர் ரேணு என் எடிட்டர் சாபுவின் அஸிஸ்டெண்ட். மிக நுணுக்கமாகப் படத்திற்கு என்ன தேவையோ அதைச் சிறப்பாகச் செய்பவர். இப்படத்திலும் சிறப்பாகச் செய்துள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் சிறப்பாகச் செய்துள்ளார். இசையமைப்பாளர் விகாஷ் படிஸா தமிழ் ராக்கர்ஸ் செய்தார். அவர் என்னிடம் அறிமுகமானபோது, முதலில் ஒரு டிராக் செய்யுங்கள் எனக் கேட்டேன், அதிலேயே அசத்திவிட்டார். மிகத்திறமைசாலி. படத்திற்கான முழு உழைப்பை எப்போதும் தந்துவிடுவார். தர்ஷன் அவர் வந்த பிக்பாஸ் தான் நான் முழுமையாகப் பார்த்தது. நான் லவ் சப்ஜெக்ட் எடுத்தால் அவரை ஹீரோவாக போட வேண்டும் என நினைத்தேன். கௌதம் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தது மகிழ்ச்சி. கௌதம் மிகச்சிறப்பான ஒரு படத்தைத் தந்துள்ளார்” என்றார்.
நடிகர் தர்ஷன் பேசும்போது,
‘கௌதம் எப்போதும் என்னை மிகப்பெரிய ஹீரோ போல தான் நடத்தினார். எனக்காக என்னுடன் எப்போதும் நிற்கிறார். தயாரிப்பாளர் குமார் சார் ஒரு கதையை நம்பி, புது டீமை நம்பி, இவ்வளவு செலவு செய்து படம் செய்துள்ளார். அவருக்கு நன்றி. நாங்கள் ஷூட்டில் எவ்வளவு டிஸ்கஸ் செய்தாலும் ரேணுவிடமும் கேட்டுக் கொள்வோம் என்று சொல்வார்கள். அவர் நாங்கள் என்ன எடுத்தாலும் பெரிதாகப் பாராட்ட மாட்டார். ஓகே என்று தான் சொல்வார். எனக்கு இப்போது புதிதாக கதை சொல்ல வந்தவர்கள் அவர் தான் என்னை ரெஃபர் செய்ததாகச் சொன்னார்கள் நன்றி சார். என்னை அழகாகக் காட்டிய கேமராமேனனுக்கு நன்றி. மன்சூர் அலிகான் போல ஒரு சீனியர் ஆக்டருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். படத்தில் எல்லோரும் கடின உழைப்பைத் தந்துள்ளனர்” என்றார்.
இப்படத்தில் தர்ஷன் நாயகனாக நடித்துள்ளார், பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மன்சூர் அலிகான், லால், சுஜித் ஷங்கர், முனிஷ் காந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.