பவர் பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து இயக்குனராக தனுஷ் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”. முந்தைய இரண்டு படங்களுமே முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வித்தியாசமான படங்கள். இந்த படமும் அந்த படங்களில் இருந்து வேறுபட்டு ஒரு 2கே இளைஞர்களின் காதல் கதையை பேசும் படமாக உருவாகியிருக்கிறது. இயக்குனராக ஹாட்ரிக் அடித்தாரா தனுஷ்? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, காதலில் தோல்வி அடைந்து சூப் பாயாக சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் பவிஷ்க்கு பிரியா பிரகாஷ் வாரியரை திருமண சம்பந்தம் பேசுகிறார்கள் அவரது பெற்றோர் நரேன் மற்றும் சரண்யா பொன்வண்ணன். பிரியா ஏற்கனவே பவிஷ் உடன் படித்தவர் தான் என்பதால் லைஃப் பார்ட்னராக நினைத்துப் பார்க்க முடியவில்லை. கொஞ்சம் பேசி முடிவெடுத்து சொல்கிறோம் என சொல்ல, அப்படி சந்திக்கும்போது பவிஷ் காதல் கதையை பிரியா கேட்டுத் தெரிந்து கொள்கிறார். பவிஷ், அனிகா சுரேந்திரன் இருவரும் காதலர்களாக இருந்து ஒரு கட்டத்தில் ஒரு சூழலில் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில் அனிகா திருமணத்துக்கு அழைக்க, நண்பர்களுடன் திருமணத்துக்கு செல்கிறார் பவிஷ். அங்கு என்ன நடந்தது? பழைய காதல் எட்டிப் பார்த்ததா? அவர்கள் பிரிய காரணம் என்ன? மீண்டும் சேர்ந்தார்களா? என்பதை கலகல ஜாலி படமாக சொல்லியிருக்கும் படம் தான் இந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.
அறிமுக நாயகன் பவிஷ். பார்க்க நன்றாகவே இருக்கிறார். தனுஷ் போலவே குரல் இருக்க, தனுஷ் சொல்லிக் கொடுத்த நடிப்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்பது பார்க்கும்போது தெரிகிறது. பல காட்சிகளில் தனுஷை கண் முன் நிறுத்துகிறார். முதல் படத்தில் நல்ல ஒரு அறிமுகம். நாயகியாக அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழக்கப்பட்ட நமக்கு அவரை நாயகியாக ஏற்றுக் கொள்ள கொஞ்சம் நேறம் தேவைப்படுகிறது என்றாலும் அவர் தன் நடிப்பில் சிறப்பான பங்களிப்பையே கொடுத்திருக்கிறார்.
நாயகனின் நண்பனாக படம் முழுக்க வரும் மேத்யூ தாமஸ் பட்டையை கிளப்புகிறார். அவரின் காமெடியும், முக பாவனைகளும் படம் முழுக்க ரசிக்க வைக்கிறது. பல இடங்களில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார். பிரியா வாரியர் ஒரு சின்ன கெஸ்ட் ரோல் போன்ற ரோலில் வந்து போகிறார். ரபியா கதூண், வெங்கடேஷ் மேனன், ரம்யா ரங்கநாதன் ஆகியோருக்கு அறிமுகப் படம் என்பதை மறக்க வைக்கும் அளவுக்கு நல்ல நடிப்பு. இவர்களுக்கு துணையாக சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் போன்ற அனுபவமிக்க நடிகர்களின் நடிப்பும் படத்துக்கு கூடுதல் பலம். பிரியங்கா மோகன் ஒரு பாடலுக்கு வந்து ரசிக்க வைத்திருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய பலம். கோல்டன் ஸ்பாரோ திரையரங்கை கொண்டாட்டமாக மாற்றுகிறது. பின்னனி இசையும் பிரமாதம், குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் மிகச்சிறப்பு. லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு காதல் படத்துக்கு ஏற்றார்போல கலர்ஃபுல். தொழில்நுட்ப ரீதியில் படத்தில் எல்லாமே சிறப்பு.
இயக்குநர் தனுஷ், இன்றைய இளசுகளின் காதலை மிக அழகாக அவர்களின் வைபில் கொடுக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். இந்த காலத்து இளைஞர்களை கவரும் வகையில் காட்சிகளும், கதையும் அமைந்திருக்கிறது. முதல் பாதியில் காதலும், இரண்டாவது பாதியில் கல்யாண விழாவில் நடக்கும் சம்பவங்களையும் மிக அழகாக, நகைச்சுவை கலந்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். காமெடியில் தெறிக்க விட்டிருக்கிறார். இரண்டாம் பாகத்துக்கு ஏற்ற ஒரு முடிவை தந்து ஒரு எதிர்பார்ப்புடனே ரசிகர்களை அனுப்பி வைக்கிறார் தனுஷ்.