ரெட்ரோ லாபத்தில் 10 கோடியை அகரம் ஃபவுண்டேஷனுக்கு வழங்கிய சூர்யா!

சூர்யா என்றாலே நடிகர் என்பதையும் தாண்டி அவர் செய்து வரும் நற்பணிகள் தான் முதலில் நம் நினைவுக்கு வரும். அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமை சூர்யாவையே சாரும். எவ்வளவு பணிகளுக்கு மத்தியிலும் அகரம் நற்பணிகளையும், மாணவர்களை சந்தித்து அவர்கள் குறை கேட்பதையும் அவர் எப்போதுமே செய்து வருகிறார்.

தற்போது ரெட்ரோ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று, சூர்யாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது. படத்தின் மூலம் கணிசமான லாபமும் கிடைத்திருக்கிறது. அந்த லாபத்தின் ஒரு பகுதியை நல்ல காரியங்களுக்கு செலவு செய்யும் நோக்கில் சூர்யா செய்துள்ள விஷயம் ரசிகர்களையும், தமிழக மக்களையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ரெட்ரோ வெற்றிக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது..

அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்..

பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது.

 

‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும் போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொது மக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும்.

 

அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாய்-ஐ இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

விரைவில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், உயர்கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம்.. கல்வியே கேடயம்.

 

அன்புடன்,
சூர்யா

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. லாபத்தை பரிசு, பார்ட்டி என செலவு செய்பவர்கள் மத்தியில் 10 கோடியை கல்விக்காக சூர்யா வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. என்றும் தொடரட்டும் இந்த கல்விக் கொடை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *