எம்புரான் – விமர்சனம்!

2019-ஆம் ஆண்டு மலையாளப் படமாக மட்டுமே வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறிய படம் மோகன்லால் நடிக்க, பிரித்விராஜ் இயக்கிய லூசிஃபர். முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகி இருந்த்து. ஸ்டீபன் நெடும்பள்ளியாக படம் முழுக்க கலக்கிய மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற கதாபாத்திரத்தில் கிளைமாக்ஸில் என்ட்ரி கொடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இன்னும் பிரமாண்டமாக பான் இந்திய படமாக உருவாகியுள்ள படம் தான் “எம்புரான்”. லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் பாகத்தை போலவே சிறப்பான படமாக அமைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கேரள அரசியலில் டொவினோ தாமஸை முதல்வராக அமர்த்தி விட்டு எங்கேயோ கண் காணாத இடத்துக்கு செல்கிறார் மோகன்லால். 5 ஆண்டுகள் ஆட்சியில் அவர் மீது பல அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள். அத்தோடு IUF கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி துவங்கி, மதவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு கட்சியை கேரளாவுக்குள் கொண்டு வரும் வேலையையும் பார்க்கிறார். இந்நிலையில் கேரளாவை காப்பாற்ற ஸ்டீஃபன் நெடும்பள்ளி வரணும் என சிலர் விரும்புகிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து கேரளாவையும், கேரள அரசியலையும் மோகன்லால் காப்பாற்றினாரா? குரேஷி அப்ராம் யார்? அவர் பின்னணி என்ன என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.

மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் @ ஸ்டீபன் நெடும்பள்ளி என்ற கதாப்பாத்திரத்தில் வழக்கம் போல மாஸ் காட்டுகிறார். அவர் திரையில் வரும் நேரம் ரொம்பவே குறைவு தான் என்றாலும் கதை அவரை நோக்கியே, அவரை சுற்றியே அமைந்துள்ளது. அவர் வரும் காட்சிகள் எல்லாம் மரண மாஸ். அதுவும் அவரின் அறிமுக காட்சி அதகளம். பிரித்விராஜ் சுகுமாரன் சையத் மசூத் கதாபாத்திரத்தில் மோகன்லாலின் தளபதியாக ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்க விடுகிறார். அவரின் பின்னணியை சொன்ன விதமும் நன்றாகவே இருந்தது. அத்துடன் அவரின் பழிவாங்கல் கதையும் மையக்கதையுடன் சேர்ந்தே பயணிக்கிறது. டோவினோ தாமஸ் முந்தைய படத்தில் நல்லவராக இருந்து இந்த படத்தில் அவரின் வில்லத்தனமான கதாபாத்திரம் வெளிப்படுகிறது.

அபிமன்யு சிங்கின் கதாபாத்திரம் மதவாதிகளின் அசல் முகத்தை கோர முகத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. மஞ்சு வாரியருக்கு முந்தைய படத்தை விட இந்த படத்தில் கூடுதல் கனம். அவரும் அதை சிறப்பாக செய்துள்ளார். மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, கிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இருப்பதால் எல்லோருமே ஒரு சில காட்சிகளில் தலையை காட்டி விட்டு போகிறார்கள்.

சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். பல நாடுகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் மிகச்சிறப்பாக, வெளிநாட்டு படத்தை பார்க்கும் உணர்வை தருகிறது. சண்டைக் காட்சிகளை படமாக்கிய விதமும் அருமை. தீபக் தேவ் இசையில் எம்புரானே பாடல் படத்துடன் பார்க்கும்போது அந்த உணர்வை தருகிறது. சண்டா பிர் என்ற பாடலும் கிளைமாக்ஸுக்கு வலு சேர்க்கிறது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார்.

முரளி கோபியின் கதை, திரைக்கதையை மிகச்சிறப்பாக இயக்கி இருக்கிறார் பிரித்விராஜ் சுகுமாரன். படத்தின் கதையை விட படமாக்கப்பட்ட விதம் தான் நம்மை 3 மணி நேரம் சீட்டில் உட்கார வைக்கிறது. ஏகப்பட்ட கதாபாத்திரங்கள், அதற்கு நடுவில் ஹீரோ மோகன்லாலை கச்சிதமாக கொண்டு வரவேண்டும், படத்தையும் எந்தவித தொய்வும் இன்றி தர வேண்டும் என்ற சவாலை மிக கவனமாக கையாண்டிருக்கிறார். ஒரு சில காட்சிகளை மட்டும் தூக்கியிருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மற்றபடி முதல் பாகம் பார்க்காதவர்களும் இந்த படத்தை பார்த்து ரசிக்கலாம். அந்த வகையில் எம்புரான் நல்ல ஒரு தியேட்டர் அனுபவம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *