ஹரா – திரை விமர்சனம்

தாதா 87, பவுடர் படங்களை தொடர்ந்து இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இயக்கியுள்ள திரைப்படம் ஹரா. 1980-களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த வெள்ளி விழா நாயகன் என்ற அடைமொழியோடு வலம் வந்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கிறார். 90களில் அவர் ஓரிரண்டு படங்களில் நடித்திருந்தார், அதன் பிறகு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சினிமாவை விட்டு விலகியே இருந்தார். 2008-ல் வெளியான ‘சுட்ட பழம்’ என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடிக்க பல முக்கிய இயக்குனர்கள் அழைத்தும் நடித்தால் ஹீரோ தான் என்ற உறுதியோடு இருந்த அவர் தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்த “ஹரா” திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவ்வளவு காலம் நடிக்காமல் விலகி இருந்த மோகன் இந்த படத்தின் கதையை கேட்டு நடித்திருக்கிறார் என்றால் அப்படி என்ன சிறப்பு இந்த படத்தில் இருக்கிறது? எது அவரை நடிக்க ஈர்த்தது? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் மோகன் மனைவி அனுமோல் மற்றும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் வருகிறார். ஒரு நாள் மகள் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அப்பாவிடம் ஃபோனில் தெரிவித்து விட்டு போகிறார். ஃபோன் கட் ஆக, தவித்துப் போன மோகன் இரவு முழுக்க தேடி அலைகிரார். இறுதியில் மகள் இறந்து விட்டாள் என்ற தகவல் கிடைக்க, வாழ்க்கையே இனி இல்லை என தம்பதியினர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். அந்த நேரத்தில் சிங்கம் புலி வந்து அதை தடுத்து மகள் சாவுக்கு காரணம் யார் என்பதை கண்டுபிடி என்று சொல்லி அவர் மனதை மாற்றுகிறார். அதன் பிறகு இப்ராஹிம் என்று பெயரை மாற்றிக்கொண்டு கோவையில் ஒரு அபார்ட்மெண்டில் வந்து தங்குகிறார். மகளுக்கு என்ன ஆனது, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன பிரச்சினை? அவளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு விடை தேடி பயணம் செய்கிறார் மோகன். இதற்கிடையில் மோகனை ஒரு போலீஸ் படை தேடுகிறது. அவர்களையும் சமாளித்து அவர் மகள் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடித்தாரா? அவர்களை பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

1980-களில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்த இரண்டு நடிகர்கள் ஒருவர் ராமராஜன், மற்றொருவர் மோகன். அவர் படத்தில் பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. மைக்கை கையில் பிடித்து அவரே பாடுவது போல தோன்றும் அளவுக்கு அற்புதமாக இருக்கும். அவர் இடையில் பல தசாப்தங்களை கடந்து மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். வயதானாலும் பேண்ட் சர்ட்டில் தாடி வைத்து, கண்ணாடி அணிந்து ஸ்லிம்மாக உடலை மெயிண்டயின் செய்து மிகவும் ஹேண்ட்சமாக தோன்றுகிறார். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அலட்டல் இல்லாமல், ஓவர் பில்ட் அப் இல்லாமல் நன்றாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் நன்றாகவே செய்துள்ளார். எமோஷன் காட்சிகளிலும் நம்மை கனெக்ட் செய்ய முயற்சி செய்கிறார். அவர் நடிப்பில் குறையில்லை, ஆனாலும் கதையும், திரைக்கதையும் அதற்கு ஒத்துழைக்கவில்லை.

ராமராஜனின் மனைவியாக அனுமோல், மிகச்சிறந்த நடிகையான அவருக்கு இந்த கதாபாத்திரத்தில் அவ்வளவாக ஸ்கோப் இல்லை, வெறுமனே அம்மாவாக வந்து சோக சீன்களில் நடித்து விட்டுப் போகிறார். அவரது மகளாக அவ்வப்போது வந்து விட்டுப் போனாலும் அவரது அப்பாவியான முகம் நம்மை பரிதவிக்க வைக்கிறது. யோகிபாபு வழக்கறிஞராக ஒரு காட்சியில் வந்து விட்டுப் போகிறார், ஏன் வந்தார்? எதற்கு வந்தார்? எதற்கும் பதில் இல்லை. சுரேஷ் மேனன், பழ கருப்பையா, வனிதா விஜயகுமார் ஆகியோர் வில்லன்களாக வந்தாலும் இந்த அரசியல் கதையை அப்பா, மகள் கதையை இணைத்தது ஒரு கொத்து பரோட்டா போட்ட உணர்வையே தருகிறது.

ஒளிப்பதிவு, இசை எல்லாம் ரொம்பவே ஆவரேஜ். மோகன், அவருக்கும் உதவும் இளைஞர் குழுவை நடக்க விட்டு அவ்வப்போது பிஜிஎம் ஒலிக்க விடுவது படம் முழுக்க வருவதும் சலிப்பூட்டுகிறது. இயக்குனர் விஜய் ஸ்ரீஜி தன்னுடைய முதல் படத்தில் ஒரு வித்தியாசமான காதல் கதையை, காதல் ஜோடியை ஃபீல்குட் படமாக மாற்றி கொடுத்திருந்தார். அவர் தான் இந்த படத்தை இயக்கினாரா? என்பதும் கூட தெரியவில்லை. ஆனால் ஒரு பழிவாங்கும் கதையை ஒரு சமூகப் பிரச்சினையாக மக்கள் பிரச்சினையாக மாற்றிய விதம் அருமை. படத்தில் அவர் பேசிய கருத்துக்கள் பலவற்றிலும் தெளிவில்லாமல் இருப்பதாகவே தோன்றியது. கோவை குண்டுவெடிப்பு, இந்து முஸ்லீம், மும்பை தாதா என பழ விஷயங்கள் ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என்ற உணர்வையே கொடுக்கின்றன. மோகன் 16 ஆண்டிகளுக்கு பின் நடிக்க வருகிறார், அவரே இந்த கதையை தேர்ந்தெடுத்திருக்கிறாரே? ஏதோ விஷயம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் போனால் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *