நடிகர் சூர்யாவும், இயக்குநர் பாலாவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த படம் “வணங்கான்”. சில நாட்கள் படப்பிடிப்பு முடித்த பின் என்ன காரணத்தினாலோ படத்தை அப்படியே நிறுத்தி விட்டனர். அதில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க இந்த வணங்கான் உருவாகியிருக்கிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த படம் அப்படியே V House Productions சுரேஷ் காமாட்சியிடம் கைமாறியது. சில ஆண்டுகள் கழித்து வெள்ளித்திரையில் ஒரு பாலா படம், எப்படி இருக்கு? பாலா மீண்டு(ம்) எழுந்து தன் சிம்மாசனத்தில் அமர்ந்தாரா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கன்னியகுமாரியில் வாய் பேச இயலாதவரான நாயகன் அருண் விஜய் தன் ஒரே தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். தங்கையின் மீது அதீத அன்பு வைத்திருக்கிறார் அருண் விஜய். கண்ணுக்கு கண்ணாக பார்த்துக் கொள்கிறார். தன் கண்முன்னே எளியவர்களுக்கு ஏதாவது கொடுமை நடந்தால் அதை எந்த எல்லைக்கும் சென்று தட்டிக் கேட்கும் அருண் விஜய், தொடர்ந்து இது போல பிரச்சினைகளை இழுத்து போட்டுக் கொள்ள, அவரின் தங்கை மற்றும் நலம் விரும்பிகள் சும்மா இருந்தா இப்படி தான் என்று சொல்லி அவரை ஆதரவற்ர மாற்றுத் திறனாளிகள் ஆஸ்ரமத்தில் காவலாளியாக சேர்த்து விடுகிறார். அங்கு நடக்கும் ஒரு கொடுமையான விஷயத்தை தாங்க முடியாமல் கொலையே செய்து விடுகிறார். போலீஸிடமும் சரண் அடைகிறார். அப்படி என்ன பிரச்சினை? கொலை செய்ய காரணம் என்ன? ஜெயிலுக்கு போனாரா? விடுதலை ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அருண் விஜய், இப்படி ஒரு படம் கிடைக்காமல் தான் அவர் கேரியரில் ஏங்கிக் கொண்டிருந்தார். அவரின் நடிப்புத் திறமைக்கு தீனி போடும் வகையில் அவர் ஏற்றுக் கொண்ட அந்த கோட்டி என்ற கதாபாத்திரத்தில் கலக்கி எடுத்திருக்கிறார். வாய் பேச முடியாத, காது கேளாத நபராக அப்படியே நம்மை அசரடிக்கிறார். அத்துடன் முரட்டுத்தனத்திலும் மிரள வைக்கிறார். எமோஷனல் காட்சிகளில் நம்மையும் கலங்க வைக்கிறார். சூர்யாவுக்கு ஒரு நந்தா, விக்ரமுக்கு ஒரு பிதாமகன் போல அருண் விஜய்க்கு இந்த வணங்கான் என்றே சொல்லலாம். தேசிய விருதுக்குரிய நடிப்பு.
நாயகி ரோஷ்ணி பிரகாஷ் அலட்டல் இல்லாத மிகச்சிறந்த நடிப்பு. படம் முழுக்க அப்படி ஒரு எனர்ஜியில் அசத்துகிறார். பல மொழிகளில் பேசுவதாகட்டும், டூரிஸ்ட் கைடாக பல கெட்டப்புகளில் வலம் வருவதாகட்டும், இரண்டாம் பாதியில் எமோஷனல் காடிகளாகட்டும் அவரது உழைப்பு திரையில் தெரிகிறது. நாயகனின் தங்கையாக வரும் ரிதா முதல் ஃபிரேமிலேயே அன்பான தங்கையாக நம் மனதில் பதிகிறார். எமோஷனல் காட்சிகளில் அவர் அழும்போது எல்லாம் நம் மனமும் கலங்கி நிற்பதை தவிர்க்க முடியாது. அருண் விஜயை அடுத்து இந்த இரண்டு பெண் கதாபாத்திரங்களும் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
நீதிபதியாக வரும் மிஷ்கின், வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக வரும் சமுத்திரகனி இருவரும் படத்துக்கு கூடுதல் பலம். அதுவும் மிஷ்கின் வரும் காட்சிகள் எல்லாமே கைதட்டல் அள்ளுகிறது. சாயா தேவி, பால சிவாஜி, சண்முகராஜன், அருள் தாஸ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை நன்றாக செய்திருக்கிறார்கள்.
RB குருதேவ் ஒளிப்பதிவு கன்னியாகுமரியின் மூலை முடுக்குகளையும், கன்னியாகுமரியின் அடையாளமாக திகழும் சின்னங்களையும் அழகாக காட்சிப்படுத்தி இருப்பதோடு, படத்தின் தன்மையை சொல்லும் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்துக்கு பலம். அந்த இறை பாடல் உண்மையில் நம்ம ஆன்மாவை தூய்மையாக்குகிறது. சாம் சி.எஸ் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார்.
இயக்குநர் பாலா தன்னுடைய பாணியில் தான் எடுத்துக் கொண்ட கதைக்களத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறார். படத்தை வளவளவென இழுக்காமல் இரண்டு மணி நேரத்தில் கச்சிதமாக சொல்ல வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் மையக்கதைக்குள் செல்ல கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டாலும் அதுவரையிலும் காதல், காமெடி என போர் அடிக்காமல் நம்மை கொண்டு சென்றிருக்கிறார். இடைவேளை எதிர்பாராத ஒன்று, கிளைமாக்ஸ் காட்சியை சற்று யூகிக்க முடிந்தாலும் அது தரும் அழுத்தம் மனதை ரணமாக்குகிறது. மையப்பிரச்சினையை படமாக்கிய விதத்தை மட்டும் கொஞ்சம் வேறு கோணத்தில் காட்டியிருக்கலாம் என தோன்றுகிறது. மற்றபடி கடந்த சில வருடங்களில் பாலாவுக்கு ஏற்பட்ட சறுக்கலில் இருந்து இந்த வணங்கான் அவரை சில படிகள் மேலே ஏற்றி விட்டிருக்கிறது. அடுத்தடுத்த படங்களில் தன் சிம்மாசனத்தில் நிச்சயம் அமர்வார் என்பது கண்கூடு.