போகுமிடம் வெகுதூரமில்லை – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது மிகச்சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு மிக முக்கிய ஹீரோ விமல். கடைசியாக விலங்கு என்ற தமிழ்ன் மிகச்சிறந்த வெப் சீரீஸை கொடுத்திருந்தார். தற்போது மைக்கேல் கே.ராஜா என்பவர் இயக்கத்தில் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். விமல் உடன் கருணாஸ், மேரி ரிக்கெட்ஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், சார்லஸ் வினோத், தீபா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ரகுநந்தன் இசையமைத்துள்ளார். விமலுக்கு மீண்டும் ஒரு நல்ல படமாக அமைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஆம்புலன்ஸ் டிரைவரான விமல் மனிதாபிமானம் உடையவர், அப்படி ஒரு சூழலில் ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு உதவப் போய் அவரே வாழ்க்கைத் துணையாகவும் அமைகிறார். மனைவியை பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு பணத்தேவைக்காக அலைகிறார். அந்த நேரத்தில் மிகப்பெரிய மனிதர் ஒருவர் இறந்து விட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் களக்காடை நோக்கி கிளம்புகிறார் விமல். இறந்தவருக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் மகன்கள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது.

வழியில் தெருக்கூத்து கலைஞரான கருணாஸ் லிஃப்ட் கேட்டு வண்டியில் ஏறுகிறார். மனைவி பிரசவம், பணத்தேவை என டென்ஷனில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்டு கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வர, டென்ஷனாகிறார் விமல். சிகரெட் பிடிப்பது, குடிப்பது என அவர் இம்சை செய்வதோடு, வழியில் ஒரு இளம் ஜோடிக்கு உதவியை செய்யவும் சொல்கிறார். அதனால் பின் விளைவுகள் ஏற்பட, ஒரு கட்டத்தில் அந்த பெரிய மனிதரின் பிணம் காணாமல் போகிறது. பிணத்தை கண்டுபிடித்தார்களா? சரியான நேரத்தில் திருநெல்வேலிக்கு சென்று சடலத்தை ஒப்படைத்தாரா? விமல் மனைவி பிரசவம் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

விமல், வழக்கம் போல கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். குமார் என்ற ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தியின் ட்ரைவராக மிக இயல்பான நடிப்பு. ஆரம்பத்தில் கருணாஸ் மீது ஒரு வெறுப்புடனே பயணிப்பது, பயணத்தின் இடையில் கருணாஸ் மீதான அபிப்ராயம் மாறுவது, முக்கிய பிரச்சினையில் மாட்டி உடைந்து போவது என நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். கருணாஸ் தோல்வியடைந்த தெருக்கூத்து கலைஞராக நளினமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். ஆரம்பத்தில் விமல் போலவே நமக்கும் கருணாஸ் செய்யும் சேட்டைகளால் எரிச்சல் ஏற்படுவது உண்மை தான். ஆனால் போகப்போக அந்த கதாபாத்திரத்தின் வலியை நமக்குள் கடத்தி விடுகிறார். கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மிகப்பெரிய பலம்.

நாயகி மேரி ரிக்கெட்ஸ் சில காட்சிகளே வந்தாலும் நம்மை எமோஷனலாக ஒன்ற வைக்கிறார். ஆடுகளம் நரேன், பவன் ஆகியோரின் போட்டா போட்டி படத்தை பரபரவென வைத்திருக்கும் முக்கியமான அமசம். தீபா சங்கர் இத்தனை காலம் அவமானத்தை சுமந்திருக்கிறோம், எங்களுக்கு தான் உரிமை என அந்த கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். அருள் தாஸ், சார்லஸ் வினோத், மனோஜ்குமார், விமலின் தாத்தாவாக நடித்தவர் என அவரவர் தங்கள் கதாபாத்திரங்கலை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவில் நாமும் அந்த நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் உணர்வு எழாமல் இல்லை. ரகுநந்தன் இசையில் பாடல்களும், இழையொடும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

இயக்குனர் மைக்கேல் கே ராஜா எடுத்துக்கொண்ட கதையை மிகச்சிறப்பாக திரைக்கதை அமைத்து திரையில் கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் முழுமை பெறாத கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை இரண்டாம் பாதியில் அழகாக முழுமையாக்கியிருக்கிறார். மனிதநேயம், கருணை, பிறருக்கு உதவும் குணம் என நல்ல ஒரு கருத்தை கதையினூடே சிறப்பாக சொல்லியிருக்கிறார். வசனங்களும் ஆங்காங்கே கைதட்டல் பெறுகின்றன. தெருக்கூத்துக் கலை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை முக்கிய கதாபாத்திர படைப்பின் மூலம் கலைஞனின் வலியை யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். அயோத்தி போல இந்த படமும் நல்ல ஒரு ஃபீல் குட் திரைப்படமாக மனிதநேயத்தை பேசும் படமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *