ஜூன் மாதம் வெளியாகும் ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’!

ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் பேனரில் எம்.எஸ். சரவணன் தயாரிப்பில் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படத்தை E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன் ஜூன் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இது தொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் E5 Entertainment ஜெ.ஜெயகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் குமார், விநியோகஸ்தர் ஜி.என். அழகர்சாமி, ஃபைனான்சியர் பதம், இயக்குநர் திருமலை, தயாரிப்பாளர் ராஜராஜன், ஒளிப்பதிவாளர் பிரமோத், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் படத்தை ஜூன் மாதம் வெளியிடுவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் சரவணன் மற்றும் இயக்குநர் சண்முகம் முத்துசாமி வரவேற்றனர்.

‘அடங்காதே’ ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இன்றைய அரசியலை விறுவிறுப்பாக இப்படம் பேசுகிறது. சுரபி நாயகியாக நடித்துள்ள ‘அடங்காதே’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகை மந்திரா பேடி முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு, தம்பி ராமையா உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பு மூலம் படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

‘அடங்காதே’ குறித்து பேசிய இயக்குநர் சண்முகம் முத்துசாமி, “இது ஒரு அரசியல் திரில்லர் ஆகும். சமகால அரசியல் குறித்து இப்படம் பரபரப்பாக விவரிக்கிறது. இரு சக்கர வாகனங்களை ரிப்பேர் செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், அரசியல் தலைவராக சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரும் மிரட்டியுள்ளனர். கதையில் திருப்பம் ஏற்படுத்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள அண்ணன் சீமான் அவர்களுக்கு மிக்க நன்றி,” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “திருச்சியில் ஆரம்பிக்கும் கதை காசி வரை நீள்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் வகையில் திரைக்கதை அமைந்துள்ளது. தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ள சூழ்நிலையில் வரும் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி,” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *