தீபாவளி என்ற உடனே மக்கள் அனைவருக்கும், குறிப்பாக குடும்பஸ்தர்கள் அனைவருக்கும் மனதில் வரும் முதல் விஷயம் “தீபாவளி போனஸ்”. வருடத்தில் ஒரு முறை குறிப்பாக தீபாவளிக்கோ அல்லது பொங்கலுக்கோ வழங்கப்படும் அந்த போனஸ் தொகையை வைத்து தான் அந்த பண்டிகைக்கு புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் என வாங்கி கொண்டாடுவார்கள். அப்படி தீபாவளி போனஸ் உழைக்கும் வர்க்கத்துக்கு எவ்வளவு இன்றியமையாததாக இருக்கிறது என்பதை மனதோடு ஒன்றும் வகையில் காட்டியிருக்கும் திரைப்படம் தான் “தீபாவளி போனஸ்”.
படத்தின் கதைப்படி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நிலையூர் என்ற கிராமத்தில் மனைவி ரித்விகா மற்றும் 6,7 வயது மகனுடன் வாழ்ந்து வரும் நாயகன் விக்ராந்த், ஒரு தனியார் கொரியர் நிறுவனத்தில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார். ரித்விகா பக்கத்து ஊரில் ஒரு விட்டில் வீட்டு வேலை செய்கிறார். தீபாவளி நெருங்கிய நிலையில் அந்த நிறுவனத்திடம் போனஸ் கேட்டு நொந்து போயிருக்கிறார்கள் மொத்த ஊழியர்களும். மகன் போலீஸ் யூனிஃபார்ம் போன்ற உடையை கேட்டு ஏங்கிப் போய் இருக்கிறான். விதார்த் வண்டி ஓட்ட ஒரு நல்ல ஹெல்மெட் வாங்கி விட வேண்டும் எனவும் திட்டமிடுகிறார்கள். ஆனால் தீபாவளிக்கு முந்தைய நாள் வரை போனஸ் தராமல் இழுத்தடிக்கிறது அந்த கம்பெனி. குடும்பத்தின் தேவைக்காக வேறு சில முயற்சிகளில் ஈடுபடுகிறார் விக்ராந்த். அதனால் என்ன சிக்கலில் சிக்கினார்? அதிலிருந்து மீண்டாரா? குடும்பத்துடன் ஆசைப்பட்ட மாதிரி தீபாவளியை கொண்டாடினாரா? என்பதே மீதிக்கதை.
இந்த மாதிரி எளிய மனிதராக, மிடில் கிளாஸ் இளைஞர் கதாபாத்திரங்கள் என்றாலே நாயகன் விக்ராந்த்துக்கு அல்வா சாப்பிடுவது போல. வறுமை, இயலாமை, வலி என அத்தனையையும் தன் பாடி லாங்குவேஜ் மற்றும் தோற்றத்தின் மூலமே மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி விடுகிறார். ஒரு சில காட்சிகளில் நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார். பக்ரீத் படத்துக்கு பின் விக்ராந்த் தனித்து தெரியும் படமாக இது நிச்சயம் இருக்கும்.
விக்ராந்த் மனைவியாக ரித்விகா, வழக்கம் போல நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். கணவரை காணாமல் தவித்துப் போகும் காட்சி, ஹெல்மெட் வாங்க வேதனைப்படும் காட்சி என தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ் நல்ல தேர்வு. பள்ளியில் அவன் முகவாட்டம், ஏக்கம், மகிழ்ச்சி என நல்ல ஒரு தேர்ந்த நடிப்பு. ரொம்ப கியூட்டான கதாபாத்திரம்.
ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் ஒளிப்பதிவு கதைக்கு தேவையானவற்றை மிக இயல்பாக காட்டியிருக்கிறது. திருப்பரங்குன்றம் கோவில், ரயில்வே என அவற்றை பருந்து பார்வையில் காட்டிய விதமும் சிறப்பு. மிக நுண்ணிய உணர்வுகளை காட்டும் காட்சிகளிலும் நல்ல உழைப்பு. இசையமைப்பாளர் மரியா ஜெரால்டு இசையில் பாடல்கள் படத்தோடு ஒன்றி வலு சேர்க்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
வருடம் முழுவதும் உழைத்தாலும் பண்டிகை நாட்களுக்கு ரொம்பவே சிரமப்படுவது தான் எளிய மக்களின் வாழ்க்கை என்பதை மிகவும் அழுத்தமாகவும், மிகவும் நெருக்கமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெயபால். கதாபாத்திரங்களின் தேர்விலேயே பாதி வெற்றியை பெற்றிருக்கிறார். திரைக்கதை மற்றும் இயல்புக்கு மாறாத தன்மையில் அதை சொன்ன விதம் என முழு படத்துடன் நம்மை ஒன்ற வைத்திருக்கிறார். நடுத்தர மக்கள் கஷ்டத்திலும் சிறு சேமிப்பை வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் சொல்லாமல் நமக்கு சொல்லியிருக்கிறார். அத்துடன் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருப்பதை விட நம் திறமையை வைத்து அடுத்த கட்டத்துக்கு செல்ல முயற்சிக்கலாம் என்பதையும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் சொல்லி முடிக்கிறார். கண்டிப்பாக நம் தீபாவளி அனுபவங்களை கண் முன் நிறுத்தும் இந்த படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.