புஜ்ஜி அட் அனுப்பட்டி – திரை விமர்சனம்

ஹாலிவுட்டில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் ஏராளமாக வெளியாகின்றன, இந்தியாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான சினிமாக்களே வருவதில்லை. பெற்றோர் பார்க்கும் அடிதடி ரகளையான மாஸ் ஹீரோக்களின் படங்களையே குழந்தைகளும் பார்த்து ரசிக்கிறார்கள். அவர்களின் பால்யம் முழுவதும் வன்முறை, வெட்டு குத்து படங்களையே பார்த்து கழிக்கிறார்கள். சிலர் டிவிக்களில் வரும் கார்ட்டூன் பார்த்து மகிழ்கிறார்கள். அந்த மாதிரி குழந்தைகள் ரசிக்கும் வகையில், குழந்தைகள் உலகத்தை சுற்றி உருவாகி வெளியான திரைப்படங்கள் பெருவெற்றியை பெற்றிருக்கின்றன. ஆனாலும் அந்த மாதிரி திரைப்படங்களை கொடுக்க பலரும் தயாராக இல்லை. அந்த வகையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ள புஜ்ஜி அட் அனுப்பட்டி.

படத்தின் கதைப்படி, ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோருடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வரும் அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் தான் கதை மாந்தர்கள். பண்ணை உரிமையாளர் சிவா குழந்தைகள் மேல் பிரியம் கொண்டவர், குழந்தைகளின் அப்பாவை விடவும் குழந்தைகள் ஆசைப்படும் எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்பவர். ஒரு நாள் இருவரும் வீட்டுக்கு போகும் வழியில் பிறந்து 20 நாட்களே ஆன ஒரு கருப்பு நிற ஆட்டுக்குட்டி கிடைக்கிறது. துர்கா அதை தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து, அதற்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பிரியமுடன் வளர்க்கிறாள். சில நாட்கள் கழித்து ஆட்டின் உரிமையாளர் அதைத் தேடி வந்து எடுத்து செல்கிறார். இதனால் துர்கா மனமுடைந்து போக, சிவா புஜ்ஜியை தேடிக் கண்டுபிடித்து மீட்டு வந்து  துர்காவிடம் ஒப்படைக்கிறான். மீண்டும் ஒரு அதிர்ச்சியாக குழந்தைகளின் குடிகார அப்பா முருகேசன் குடிப்பதற்கு பணம் இல்லாததால், புஜ்ஜியை விற்று குடித்து விடுகிறார்.  ஆட்டுக்குட்டியை காணாமல் தவிக்கும் தங்கையை சமாதானம் செய்து, அதை கண்டுபிடிக்க இருவரும் கிளம்புகிறார்கள். புஜ்ஜியை தேடிப் புறப்படும் இந்த இருவரின் இரண்டு நாள் பயணமே மீதிக்கதை. அதற்குள் திரில்லர், எமோஷன், மனிதநேயம், மத நல்லிணக்கம் என அத்தனையையும் கதைக்குள் கொண்டு வந்து தான் சொல்ல வந்ததையும் சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.

சரவணன் மற்றும் துர்காவாக நடித்திருக்கும் கார்த்திக் விஜய், பிரணிதி சிவசங்கரன் இருவருமே கவர்கிறார்கள். குழந்தைகளுக்கான அந்த பிடிவாதம், அப்பாவித்தனம், ஏக்கம், எவரையும் நம்பி விடும் குணம் என தங்களால் முடிந்தவரை சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பண்ணை முதலாளியாக வரும் கமல்குமார் தயாள குணம் உடையவராக நல்ல நடிப்பு. போலீஸ் கான்ஸ்டபிளாக வரும் நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, அம்மாவாக வரும் நக்கலைட்ஸ் மீனா, லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், வரதராஜன் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

அருண்மொழி சோழன் ஒளிப்பதிவில் கோயமுத்தூர் கிராமங்களின் யதார்த்தம் நம் கண் முன் தெரிகிறது. கார்த்திக் ராஜா ஜீவனுள்ள இசையை கொடுத்துள்ளார். இயக்குனர் ராம் கந்தசாமி எழுதி இயக்கியதோடு கவிலயா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்தும் இருக்கிறார். குழந்தைகளின் மன ஓட்டத்தையும், அவர்களின் உலகத்தையும் காட்சிகளாக நம் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார். இந்த வாழ்க்கையின் மீதும், உலகத்தின் மீதும் நம்பிக்கை மேலோங்க வேண்டும் என்பது போலவே பல காட்சிகள் படம் முழுக்க வந்து கொண்டே இருக்கிறது. தன் சக்திக்கும் மீறி உதவ வந்த தேவ தூதர்களை போலவே பலரும் உதவிக் கொண்டே இருப்பது இந்த அவசர உலகத்தில் நம்பும்படியாக, ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை, ஆனாலும் இந்த படத்தை பார்க்கும் குழந்தைகளுக்கு இந்த உலகைன் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக இயக்குனர் வைத்ததாக எடுத்துக் கொள்ளலாம். அது குறையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நடிப்பை வாங்கிய விதத்திலும், உருவாக்கத்திலும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் சிறந்த ஒரு படமாகவும் மாறியிருக்கும், பல விருதுகளையும் வாங்கும். ஆனாலும் இந்த கோடையில் குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய் பார்க்க தகுந்த ஒரு பரிசுத்தமான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *