வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் எப்போதுமே நம் குடும்பத்தின் ஒரு அங்கமாக தான் இருக்கும். அதன் மீது நாம் காட்டுகிற அன்பும், அது நம் மீது காட்டுகிற அன்பும் அதீதமானது. அப்படி செல்லப் பிராணிகளை மையமாக வைத்து வெகு சில படங்களே தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன. நாய்கள் ஜாக்கிரதை, அன்புள்ள கில்லி போன்ற படங்கள் நாயை மைய கதாபாத்திரமாகவே வைத்து உருவாகியுள்லன. அந்த வகையில் சமீப காலத்தில் உருவாகியுள்ள படம் “அலங்கு”. உறுமீன், பயணிகள் கவனிக்கவும் போன்ற படங்களை இயக்கிய சக்திவேல் இயக்கியிருக்கிறார். டாக்டர் ராமதாஸின் பேத்தி சங்கமித்ரா தயாரித்திருக்கிறார். படம் எப்படி இருக்கிறது, பார்க்கலாம்.
படத்தின் தமிழக கேரள எல்லையில் மலைவாழ் கிராமத்தில் மலையை விட்டு கீழே போக மாட்டோம் என சில குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. நாயகன் குணாநிதியின் குடும்பமும் அதில் ஒன்று. வேலைக்குப் போன இடத்தில் ஒரு சீக்கு வந்த கழிவு கோழிகளை சாப்பிட்டதால் நாயை விஷம் வைத்து கொன்று அதை புதைக்க சொல்கிறார் முதலாளி. அதற்கு உயிர் இருப்பது தெரிய வர அதை எடுத்து காளி என பெயர் வைத்து வளர்க்கிறார். எங்கு சென்றாலும் அந்த நாயும் கூடவே செல்லும். வேலைக்காக கேரளா செல்லும் போது காளி என்ற அந்த நாயை தன்னுடன் அழைத்துச் செல்கிறார் குணாநிதி. அவர் வேலை செய்யும் ஊரின் ஒன்றிய தலைவர் தன் மகள் மீது உயிராக இருப்பவர். அந்த பெண் குழந்தையை ஒரு நாய் கடித்து விட, அந்த ஊரில் இருக்கும் எல்லா நாய்களையும் கொல்ல தன் ஆட்களுக்கு உத்தரவிடுகிறார். அதில் இந்த காளி நாயும் அவர்கள் கையில் சிக்கிக் கொள்கிறது. அவர்களிடம் இருந்து நாயை காப்பாற்றினாரா? அவர்களிடம் இருந்து தப்பினாரா? என்பதே மீதிக்கதை.
தர்மன் என்ற கதாபாத்திரத்தில் மூக்கு கடியம் மாட்டிக் கொண்டு பழங்குடி இளைஞராகவே மாறியிருக்கிறார் குணாநிதி, அடிப்படையில் டாக்டரான இவரை அப்படி பார்ப்பதே ஆச்சர்யம். கோபக்கார இளைஞராக, அன்பான மகனாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் உறுத்தல் இல்லாத நடிப்பு.
கதாநாயகியே இல்லாமல் இந்த கதையை எடுத்திருக்கும் இயக்குனரை பாராட்டியே தீர வேண்டும். நாயகனின் மாமாவாக காளி வெங்கட், வழக்கம் போல் யதார்த்தமான நடிப்பின் மூலம் நம் மனதில் நிற்கிறார். வில்லனாக செம்பன் வினோத். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு. அவரின் வலது கரமாக சரத் அப்பானி வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். நாயகனின் அம்மா ஸ்ரீரேகா, தங்கை மற்றும் நண்பர்கள் என எல்லோருமே தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
அஜீஷ் அசோக்கின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாகவே இருக்கிறது. காடுகளின் இயல்பையும், அழகையும்,இரவின் அடர்த்தியையும் மிகச்சிறப்பாகவே படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாண்டிகுமார்.
இயக்குனர் சக்திவேல் இந்த முறை பழங்குடியின மக்களின் வாழ்வியல் பின்னணியில் ஒரு கதையை கையாண்டிருக்கிறார். காடு, மலை பயணம் என தங்கள் கதாபாத்திரத்திற்காக குணாநிதி உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்திருப்பது படத்தில் பிரதிபலித்திருக்கிறது. இரவுக் காட்சிகளை எழுதியதுடன் அதை சிறப்பாக எடுத்திருக்கும் ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். அதே போல நாயை அதன் இயல்பில் வைத்து படத்துக்கு ஏற்றவாறு படம் பிடித்திருப்பதும் நன்றாகவே இருக்கிறது. தலைப்பே நாயை மையமாக வைத்து விட்டு, படத்தில் அதற்கான முக்கியத்துவம் குறைவாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது திரைக்கதை. நாய் கதையை நகர்த்தும் ஒரு முக்கிய புள்ளியாகவே இருந்து மறைந்து போகிறது. காட்டுக்குள் நகரும் கதை என்பதால் யானை, செந்நாய், பாம்பு என வன விலங்குகளையும் திகிலூட்டும் விதத்தில் காட்டியதும் நல்ல முயற்சி. குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தியேட்டரில் சென்று பார்க்கலாம்.