தமிழ் சினிமாவில் திருநங்கைகளின் வாழ்க்கையையும், வலியையும், சமுதாயம் அவர்கள் மீது கொண்டுள்ள பார்வையும் குறித்து பேசும் படங்கள் மிகவும் அரிது. ஒரு சில படங்களில் ஏதாவது கதாபாத்திரமாக வந்து போவார்கள். ஒரு ஆண் தன்னுள் பெண்மையை உணர்வது துவங்கி, பெண்ணாக மாற விரும்புவது, அதன் பின் சுற்றத்தாருக்கு அதை வெளிப்படுத்தி அதை கடந்து தன் பாலினத்தை அடைவது வரையிலான போராட்டத்தை பற்றியும், நம் சமுதாயம் எப்படி அவர்களைப் பார்க்கிறது? என்பது பற்றியும், அதை கடந்து அவர்கள் எப்படி இந்த உலகத்தில் இயல்பாக வாழ்கிறார்கள், சாதிக்கிறார்கள் என்பதை பேசும் படமாக உருவாகியுள்ள படம் “நீல நிறச்சூரியன்”.
படத்தின் கதைப்படி, கொங்கு மண்டலத்தில் நடக்கும் இந்த கதையில் சிறு வயதிலிருந்தே தன்னை பெண்ணாக உணர்கிறார் அரவிந்த். பானு என்ற பெயருடன் தனக்குள் ஒரு பெண்ணாகவே வாழ்கிறார். பள்ளியில் ஆசிரியராக பணி புரியும் அவருக்கு திருமண வயது நெருங்க, வீட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். தனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுக்கிறார். ஒரு கட்டத்தில் தான் பெண்ணாக மாறினால் தான் இதை தடுக்க முடியும் என்று அதற்கான முன்னெடுப்பை எடுக்கிறார். அவருக்கு எல்லா சூழலிலும் பள்ளியில் உடன் வேலை செய்யும் தோழி உதவியாக இருக்கிறார். அவர் எடுத்த இந்த பெண்ணாக மாறும் முடிவை வீட்டில், வேலை செய்யும் பள்ளியில், சமூகத்தில் எப்படி எடுத்துக் கொண்டார்கள்? அவர் மனப்போராட்டம் என்ன? என்பதை மிக ஆழமான உணர்வுகளோடு திரையில் சொல்லியிருக்கும் படம் தான் இந்த நீல நிறச் சூரியன்.
தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்திருக்கிறார். இயக்குனராக அவருக்கும் இதுவே முதல் படம். நல்ல ஒரு குழுவின் துணையுடன் நல்ல ஒரு உலக சினிமாவை கொடுத்திருக்கிறார். அடிப்படையில் ஒரு திருநங்கையான சம்யுக்தா, திருநங்கைகளின் வாழ்வியல் குறித்து பேசுவது மிகச்சரியான விஷயம். அவரை விட மிக இயல்பாக இதை யாரால் திரையில் கொண்டு வர முடியும் என்ற உண்மை படம் பார்க்கும்போது நமக்கு தெரிகிறது. அவரே நடித்தும் இருக்கிறார். அவரின் மன ஓட்டத்தை நம்மால் எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். சமூகத்தின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் பல கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கிறது.
கீதா கைலாசம், கிட்டி, கஜராஜ், மசாந்த் நடராஜன், நக்கலைட்ஸ் பிரசன்னா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என தன் சிறந்த உழைப்பை கொடுத்திருக்கிறார். இழையோடும் இசையும், யதார்த்தமான ஒளிப்பதிவும் வாழ்வியலை தத்ரூபமாக கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
97 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படம் நிச்சயம் பாலின மாற்றம் அடைபவர்கள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றும். நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது.