மெய்யழகன் – திரை விமர்சனம்

96 என்ற காதல் காவியத்தை தந்த இயக்குனர் பிரேம் குமார் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கழித்து தமிழில் இயக்கியிருக்கும் 2வது திரைப்படம் “மெய்யழகன்”. தன்னுடைய மென்மையான, மனதை வருடும் கதை சொல்லும் படத்தில் விஜய் சேதுபதியை வைத்து வெற்றியை தந்த பிரேம்குமார் இந்த இரண்டாவது படத்தில் ஆக்ஷன் ஹீரோவான கார்த்தியை வைத்து முழுக்க முழுக்க ட்ராமா படமான இந்த மெய்யழகனை தந்திருக்கிறார். கார்த்தி, அரவிந்த்சாமி என இரண்டு நட்சத்திரங்களை வைத்து உறவுகளை பேசும் அழகான கதையை தந்திருக்கிறார், 96 போல இந்த படமும் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிப்பதுடன், வணிக ரீதியிலான வெற்றியை பெறுமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சொந்தங்களால் சொத்தை இழந்து இரவோடு இரவாக தஞ்சாவூரை காலி செய்து விட்டு கிளம்புகிறார் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர். சென்னையில் குடியேறிய பின் 20 ஆண்டுகள் ஊர்ப்பக்கமே செல்லாமல் இருக்கிறார்கள். தங்கை (சித்தப்பா மகள்) திருமணத்திற்காக தான் மட்டும் சென்று விட்டு அன்றே திரும்பி விடும் எண்ணத்தில் அரவிந்த்சாமி தஞ்சாவூர் கிளம்புகிறார். வழியில் ஊரை பார்த்து பழைய நினைவுகளை அசைபோடும் அரவிந்த்சாமி, தான் வாழ்ந்த அந்த வீட்டையும் வாசலில் நின்று ஏக்கத்துடன் பார்க்கிறார். தங்கை மீது பாசம் இருந்தாலும், வேண்டா வெறுப்பாகவே திருமண மண்டபத்தில் சென்று நிற்கிறார் அரவிந்த்சாமி. அப்போது அவரை விழுந்து விழுந்து கவனிக்கிறார் கார்த்தி, அன்பு மழை பொழிகிறார். அரவிந்த்சாமியை பற்றி சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார் கார்த்தி. ஆனால் அரவிந்த்சாமிக்கு கார்த்தி எந்த விதத்தில் உறவு, அவர் பெயர் என்ன? என்பது கூட தெரியாமல் இருக்கிறது. தெரிந்து கொள்ள பல முயற்சிகள் எடுத்தும் அவரை பற்றி தெரிந்து கொள்ள முடியாமலே போகிறது. ஒரு கட்டத்தில் அந்த அதீத அன்பால் குற்ற உணர்வுக்கே ஆளாகும் அரவிந்த்சாமி என்ன செய்தார்? என்பதை ஒரு இரவில் நடக்கும் கதையாக, உரையாடல்கள் மூலமாகவே, மிகவும் யதார்த்தமாக உணர்வுப்பூர்வமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார்.

தஞ்சை, திருவாரூர் பகுதி மண்ணின் மைந்தனாகவே மாறியிருக்கிறார் கார்த்தி. பேச்சு வழக்கு, உடல் மொழி, அப்பாவித்தனம், தூய அன்பு என அத்தனை உணர்வுகளையும் காட்டி தன் அசாத்திய நடிப்பால் நம்மை அந்த உலகுக்குள் கூட்டி செல்கிறார். மிகவும் வெள்ளந்தியான அன்பால் எல்லா உயிர்களுக்கும் அன்பு காட்டும் மெய்யழகனாக மிளிர்கிறார் கார்த்தி. அவரின் நடிப்பு கேரியரில் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக மெய்யழகன் மாறியிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. சில இடங்களில் சிரிக்க வைத்து, சில இடங்களில் அழ வைக்கும் கார்த்தி நம்மை நம் வாழ்வில் இருக்கும் உறவுகளை பற்றி சில நிமிடம் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

கதையின் இன்னொரு நாயகனாக அரவிந்த்சாமி. சொல்லப்போனால் கதையே இவரின் கதாபாத்திரத்தை சுற்றித் தான் நகர்கிறது. இவரின் பயணத்தின் வழி தான் கதையே நம் கண் முன் விரிகிறது. அவரின் பார்வை போல தான் நாமும். அவரின் கதாபாத்திரத்தை போல தான் நம்மில் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகிறோம். அரவிந்த்சாமி நினைக்கும் விஷயங்களை, அனுபவிக்கும் உணர்வுகளை, குற்ற உணர்வை, ஏக்கத்தை நாமும் அனுபவிப்பதே அந்த கதாபாத்திரத்தின் வெற்றி. ஸ்ரீதிவ்யாவிடம் பேசும் காட்சியில் அவர்  வெளிப்படுத்தும் உணர்வுகள் நிச்சயம் பார்ப்போர் கண் கலங்கும். குற்ற உணர்வில் சொல்லிக் கொள்ளாமல் ஓடும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

கார்த்தியின் மனைவியாக ஸ்ரீ திவ்யா சில காட்சிகளே வந்தாலும் நம் மனதில் நிற்கிறார். அரவிந்த்சாமியின் மனைவியாக தேவதர்ஷினி, ராஜ்கிரண், ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன், ஸ்ரீரஞ்சனி, ரேச்சல், மைக்கேல் என பலரும் ஒரு சில காட்சிகளே வந்தாலும் தங்கள் நடிப்பால் மனதில் நிற்கிறார்கள்.

96 படத்தை போலவே பெரும்பாலான காட்சிகள் இரவில் நப்பவை தான். அதை ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜின் கேமரா மிகச்சிறப்பாக படம் பிடித்திருக்கிறது. டெல்டாவின் இரவையும், கதாபாத்திரங்களின் நுண்ணிய உணர்வுகளையும் மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் உயிரை உருக்குகின்றன. அதில் கமல் பாடும் போறேன் நான் போறேன் பாடலை கேட்டாலே கண்ணீர் வந்து விடுகிறது. பின்னணி இசையும் எந்தவித இரைச்சலும் இன்றி கதைக்கு ஏற்றபடி மிக மென்மையாக நம்மை வருடிக் கொடுக்கிறது.

‘96’ படத்தில் ஒரு இரவில் காதலர்களுக்கு இடையே நிகழும் உரையாடலின் மூலம் நம்மை நெகிழ வைத்த இயக்குநர் பிரேம்குமார், இந்த படத்தில் குடும்ப உறவுகளின் மேன்மையை பற்றி பேசியிருக்கிறார். அன்பே சிவம் படத்தை போலவே இரண்டு பேர் இடையே நடக்கும் உரையாடலில் அன்பை, மனிதத்தை, தன்னை உணர்தலை பற்றி மிக அழகாக திரையில் தந்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாதியில் மையக்கதையை விட்டு விலகி சில உரையாடல்கள் வருவது நம்மை கொஞ்சம் கதையை விட்டு அந்நியமாக்குகிறது. ஆனாலும் இத்தகைய உறவுகளை பற்றி பேசும் கதையை இயக்குனர் கையாண்டிருக்கும் விதம் அசாத்தியமானது. உணர்வுப்பூர்வமான திரைக்கதையை அதுவும் 3 மணி நேர படமாக கொடுத்திருக்கும் இயக்குனரின் தைரியத்துக்கு சல்யூட். 3 மணி நேரமும் நம்மை பார்க்கவும் வைக்கிறார், கதையுடன் ஒன்றிப் போகவும் செய்கிறார். கண்ணீர் விடவும் வைக்கிறார். படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்து விட்ட திருப்தியையும் தருகிறார். இந்த மாதிரியான கதைகளை கையாளும் இயக்குனர்களும் இன்றைய தமிழ் சினிமாவின் தேவை. அந்த வகையில் மெய்யழகன் நிச்சயம் ஒரு மிக முக்கியமான படமாக அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *