மின்மினி – திரை விமர்சனம்

பூவரசம் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஹலிதா ஷமீம் இயக்கியிருக்கும் திரைப்படம் “மின்மினி”. மற்ற படங்களை விட இந்த படத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் டீனேஜ் சிறுவர்களை வைத்து பாதி படத்தை எடுத்து விட்டு, அதே மாணவர்கள் வளர்ந்த பின் எட்டு ஆண்டுகள் கழித்து மீதி படத்தை அவர்களை வைத்து மீண்டும் எடுத்திருப்பது தான். ஹாலிவுட்டில் பாய்ஹூட் என்ற திரைப்படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது, அந்த வகையில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் பொறுமை காத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஹலிதா ஷமீம். அவரின் நோக்கம் நிறைவேறியதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் கெளரவ் காளை கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்குகிறார். பள்ளியின் பெருமை என அனைவரும் புகழ்கிறார்கள், பள்ளியின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்கிறார். அவருக்கு இமயமலை தொடர்களில் பைக் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிக்கோளாகவும் இருக்கிறது. அந்த பள்ளியில் புதிதாக சேரும் பிரவீன் கிஷோரை அடிக்கடி சீண்டி செல்லமாக தொல்லை கொடுக்கிறார் கெளரவ் காளை. ஒரு கட்டத்தில் நட்பு பாராட்டவும் விரும்புகிறார். பிரவீன் கிஷோர் செஸ் விளையாட்டில் சிறந்தவராக இருக்கிறார்.

ஒரு நாள் மாணவர்கள் பள்ளி சுற்றுலா செல்லும் பள்ளி வாகனம் விபத்தில் சிக்கி விட, சக மாணவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் கெளரவ் காளை, பிரவீன் கிஷோரை காப்பாற்றும்போது பலத்த காயமடைந்து இறந்து விடுகிறார். கௌரவ் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத பிரவீன் கிஷோர் குற்ற உணர்ச்சியில் மூழ்குகிறார். கௌரவ் நண்பர்களாகி விடலாமா என கொடுத்த செய்தி தெரியவர இன்னும் சோகத்தில் மூழ்குகிறார். செஸ், படிப்பை விட்டு விட்டு கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ தொடங்குகிறார். ஸ்போர்ட்ஸில் அதிக கவனம் செலுத்துகிறார்.

அதே நேரம் கெளரவ் காளையின் உடல் உறுப்பு தானத்தால் உயிர் பிழைத்த எஸ்தர் அனில், அதே பள்ளியில் படிக்க விரும்பி அங்கு வருகிறார். அப்போது குற்ற உணர்ச்சியால் கெளரவ் காளையின் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் பிரவீன் கிஷோரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். அவரிடம் பேச முயற்சி செய்ய எதுவுமே கை கூடாமல் போகிறது. சில ஆண்டுகள் கழித்து கௌரவ் காளையின் குறிக்கோளான இமயமலை பயணத்தை எஸ்தர் அனில், பிரவீன் கிஷோர் இருவருமே தங்கள் வழியில் மேற்கொள்கிறார்கள். அந்த பயணத்தில் பிரவீனை எப்படி மீட்டெடுத்தார் எஸ்தர்? அவர்கள் வாழ்க்கை எப்படி மாறியது? எப்படி தங்களை உணர்ந்தார்கள் என்பதே இந்த ‘மின்மினியின் பயணம்.

முதலில் நடிகர்கள் என பார்த்தால் முக்கிய வேடங்களில் நடித்த மூன்று பேர் எஸ்தர் அனில், பிரவீன் கிஷோர், கௌரவ் காளை. மூன்று பேருமே கதைக்கு ஏற்றவாறு நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கௌரவ் காளை பள்ளிக் காட்சிகளில் துறுதுறு நடிப்பு. மற்ற இருவரும் இளைஞர்களாகவும் நடிக்கும் வாய்ப்பு. அந்த இரண்டாம் பாதியை தனி கதையாக பார்த்தாலும் நன்றாகவே இருக்கும். இமயமலை சாலைகளில் பைக் ஓட்டும் வாய்ப்பு கிடைத்ததும் அவர்களுக்கு கிடைத்த பாக்கியம் என்றே சொல்லலாம். இவர்கள் தவிர்த்து ஷாரா, ரேச்சல் என ஒரு சில தெரிந்த முகங்கள் மட்டுமே வந்து போகிறார்கள்.

ஒளிப்பதிவாளரை பற்றி சொல்வதற்கு முன் இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான் பற்றி சொல்லியே தீர வேண்டும். இந்த கதைக்கு ஏற்ற ஒரு நல்ல, உணர்வுப்பூர்வமான பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். படத்துடன் பார்க்கும்போது நமக்குள் உணர்வுகளை கடத்தும் மிக முக்கிய கருவியாக அது இருக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் இமயமலை ஊடே பயணிக்கும்போது இசை நம் மனதை ஆட்கொள்கிறது.

இயக்குனர் ஹலிதா ஷமீம் எடுத்திருக்கும் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரிய முயற்சி. நடிகர், நடிகைகளின் டீனேஜ் பருவத்தை முதலில் படமாக்கி விட்டு, பின் 8 ஆண்டுகள் கழித்து அவர்களை நடிக்க வைத்து படமாக்கி இருப்பது மிகப்பெரிய முயற்சி. அவருக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இமயமலை காட்சிகளை அவர் காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது. நாமே லடாக் போன்ற இடங்களுக்கு சென்று வந்தது போன்ற உணர்வை கொடுக்கிறது. ஒரு பயணத்தை மேற்கொண்டு அங்கிருந்த மக்களை சந்தித்து வந்தது போன்ற உணர்வு நிச்சயம் ஏற்படும். தன் பாணியில் தனக்கு பிடித்த மெல்லிய, மனதிற்கு நெருக்கமான, மனதை வருடும் கதைகளை கொடுக்கும் ஹலிதா ஷமீம் இந்த படத்தையும் அப்படி தான் தந்திருக்கிறார். நல்ல ஃபீல்குட் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *