ரயில் – திரை விமர்சனம்

வெண்ணிலா கபடி குழு, எம் மகன், ‘நான் மகான் அல்ல’ போன்ற பல சிறந்த திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாயிருக்கும் திரைப்படம் “ரயில்”. டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் வேடியப்பன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தலைப்பு மற்றும் ட்ரைலரிலேயே நல்ல ஒரு படம் என கவனத்தை ஈர்த்த இந்த படம் ரசிகர்களை கவருமா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கதையின் நாயகனாக குங்கும ராஜ். எலக்ட்ரிகல் வேலை செய்து வரும் அவர் குடிக்கு அடிமை. மனைவி வைரமாலா, அவரின் தந்தை ஊருக்கே ஃபைனான்ஸ் செய்பவர். தன் மருமகனை நம்பி பணம் கொடுக்க மறுக்கிறார். அதற்கு காரணம் மாமனார் கொடுத்த பணத்தையும், பைக் என எல்லாவற்றையுமே குடித்தே அழிக்கிறார். குடியினால் அவரின் தொழில், குடும்ப வாழ்க்கை என எல்லாமே வீணாய்ப் போகிறது. 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. ஊரில் தன்னை யாரும் மதிப்பதில்லை என்ற வெறுப்பில் இருக்கும் அவருக்கு தன் வீட்டின் எதிர் போர்ஷனில் குடியிருக்கும் வட இந்தியாவை சேர்ந்த பர்வேஸ் மெஹ்ரூ மீது வெறுப்பு. ஆனால் வைரமாலா அவரை தன் சொந்த தம்பியாக நினைத்து பழகுகிறார். ஒரு நாள் பர்வேஸ் ஒரு பையை கொண்டு வந்து வைரமாலாவிடம் கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் விபத்தில் அகால மரணம் அடைகிறார். பர்வேஸ் மனைவி, குழந்தை மற்றும் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வந்து இறுதிச் சடங்கை செய்தார்களா? குங்குமராஜ் வைரமாலா வாழ்க்கை என்னவானது? என்பதை நெஞ்சம் நெகிழும்படி சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி.

கதையின் நாயகனாக குங்குமராஜ், தன் இயலாமையை வேறொருவன் மீது வெறுப்பாக கக்குவது, குடிக்கு அடிமையானது, குழந்தை இல்லாமல் ஏங்குவது, இறந்த சடலத்துடன் இரவை கழிக்க பயந்து நடுங்குவது என கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் நண்பராக வரும் ரமேஷ் வைத்யாவுடன் குடித்து விட்டு செய்யும் அலப்பறை என ரசிக்க வைக்கிறார். ரமேஷ் வைத்யா சிறப்பான தேர்வு. காமெடியில் கலக்குகிறார்.

நாயகியாக வைரமாலா. யதார்த்தமான நம்ம ஊர் பெண்களை அப்படியே பிரதிபலித்து இருக்கிறார். தந்தை வசதியானவர், கணவர் குடிகாரன், இவர்களுக்கு நடுவே வாழும் ஒரு நல்ல கதாபாத்திரம். பர்வேஸிடம் பழகுவது, பையை தொலைத்து விட்டு பரிதவிப்பது, குற்ற உணர்வில் பர்வேஸ் குடும்பத்தை பார்க்க மறுப்பது என சிறந்த நடிப்பு. அவரின் தந்தையும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். பர்வேஸ் தந்தை நம்மை நெகிழ வைக்கிறார். அவரின் மனைவி மற்றும் குழந்தையும் மனதில் நிற்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். ஆரம்ப காட்சியிலேயே நம்மை கட்டிப் போடுகிறார். கிராமத்தின் தெருக்கள், குறுகலான வீடு, முற்றம் என கதை நடக்கும் இடத்துக்கே நம்மை கூட்டிச் சென்றது போன்ற ஒரு உணர்வை தருகிறது அவரின் ஒளிப்பதிவு.  எஸ்.ஜே.ஜனனியின் மனதை வருடும் மெல்லிய இசை படம் முழுக்க ஒரு இயல்பான உணர்வை கொடுக்கிறது. லைவ் ரெக்கார்டிங் முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதும் படத்துக்கு கூடுதல் ஸ்பெஷல். காட்சிகளை மேலும் பரிசுத்தமாக்குகிறது, இன்னும் நெருக்கத்தை தருகிறது.

இயக்குனர் பாஸ்கர் சக்தி. முதல் படம் என்றாலும் நல்ல ஒரு நிறைவான படத்தையே தந்திருக்கிறார். முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை மண் மணம் மாறாமல் எளிய மனிதர்களின் வாழ்வை மிக அழகாக படம் பிடித்து கொடுத்துள்ளார். அவரின் வசனங்களும் பல இடங்களில் கைதட்டலை வாங்குகிறது. இதில் இன்னும் பிழைப்பு தேடி வருவோர், போவோர் பற்றிய ஒரு விஷயத்தை போகிற போக்கில் சொல்லி விட்டு போகிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி. யாராலும் யாரோட வாய்ப்பையும் கெடுக்கவோ பறிக்கவோ முடியாது, நாம சுதாரிப்பா இருந்தா எங்கயும் பிழைக்கலாம் என்ற ஒற்றை வசனம் முக்கியமானது. அயோத்தி படத்தில் பார்த்தது போலவே தமிழர்கள் மற்றும் வட இந்திய குடும்பத்தின் நெகிழ்வான தருணங்களை படம் பிடித்துக் காட்டியிருக்கும் இன்னொரு நல்ல படம். கண்டிப்பாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *