விமல், சாயா தேவி நடிக்க இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பரமசிவன் பாத்திமா’. சர்ச்சையான விஷயங்களுக்காக ‘A’ சான்றிதழ் பெற்றிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சுப்ரமணியபுரம், யோகோப்புரம், சுல்தான்பேட்டை என மூன்று கிராமங்கள் அருகருகே இருக்கின்றன. முழுக்க முழுக்க ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் சுப்ரமணியபுரம் மற்றும் கிருஸ்தவர்கள் மற்றும் கிருஸ்தவர்களாக மதம் மாறிய மக்களும் வசிக்கின்றனர். இரு கிராமங்களுக்கு இடையில் அடிக்கடி மோதல் நிகழ்கின்றது. அந்த கிராமங்களில் திருமணம் நடக்கும்போது மாப்பிள்ளை பலியாகிறார்கள். போலீஸ் விசாரணையில் இறங்குகிறது. விசாரணையின் நடுவில் அந்த கொலையாளியை கண்டுபிடிக்க அந்த ஊரில் இல்ல இரண்டு ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க போலீஸ் முடிவு செய்து ஏற்பாடுகள் செய்கிறார்கள். அப்போது அவர்களை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. அதை துரத்தி செல்லும் போலீஸூக்கு திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. உண்மையில் இந்த கொலைகளை செய்தது யார்? நாயகன் விமல், நாயகி சாயா தேவி இருவருக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக் கதை.
விமல் வழக்கம் போல தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார். அவரும் நாயகியும் வரும் காட்சிகள் எல்லாமே கொஞ்சம் யூகிக்கும்படியாக உள்ளது. இருப்பினும் நாயகியின் நல்ல நடிப்பால் அந்த காட்சிகள் அனைத்தும் நன்றாகவே இருக்கின்றன. எம் எஸ் பாஸ்கர், இசக்கி கார்வண்ணன், நடிகராக மாறியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுகுமார், கூல் சுரேஷ், ஸ்ரீரஞ்சனி, மனோஜ்குமார், ஆதிரா, காதல் சுகுமார், வீரசமர், ஆறு பாலா என எல்லா துணை நடிகர்களுமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவில் கிராமத்து அழகை இயல்பாக படம் பிடித்திருக்கிறார்கள். பாடல்களும் ஓரளவுக்கு கேட்கும் ரகம் தான். படத்தின் நீளத்தை எடிட்டர் இன்னும் சற்று குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை.
பரமசிவன் ஃபாத்திமா என்ற தலைப்பே சென்சிட்டிவான தலைப்பு தான். அதை துணிச்சலுடன் வைத்திருக்கும் இயக்குனர் படத்தில் சில கேள்விகளையும் நம் மனதில் எழுப்புகிறார். நாயகி படம் முழுக்க தன்னை இந்துவாகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார். ஆனாலும் படத்துக்கு பரமசிவன் பாத்திமா என்ற தலைப்பை ஏன் வைத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. முதல் பாதி முழுக்கவே கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமலே நகர்கிறது. இடைவேளை ட்விஸ்ட் முதல் காட்சியிலேயே தெரிந்து விடுகிறது. ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. சுமாரான முதல் பாதியை அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஈடு கட்டுகிறது. மொத்தத்தில் கொஞ்சம் சர்ச்சையான ஒரு விஷயத்தை கையாண்டிருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதை விரைவில் தெரிந்து கொள்வோம்.