எலக்சன் ஒரு பிரச்சார படமா இருக்காது – நடிகர் விஜய்குமார்

ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க, ‘உறியடி’ விஜய்குமார் நடிப்பில், சேத்துமான் இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘எலக்சன்’. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடும் இந்த படம் வரும் மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் ஆதித்யா பேசும்போது, “எனக்கு சினிமா தயாரிப்பை கற்றுக் கொடுத்தது ஜெகதீஷ் பழனிசாமி, லோகேஷ் கனகராஜ், கார்த்திகேயன் சந்தானம், அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் ஒவ்வொரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் கூட நன்றாக  பேசப்படுவார்கள். விநியோகஸ்தர் சக்திவேலன் உடன் இரண்டு படங்கள் பண்ணியிருக்கிறோம். ஒரு ஒப்பந்தம் கூட போடாமல் இந்த படத்தை கொடுத்திருக்கிறோம், அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை. விஜயகுமாருக்கு சினிமா விட்டால் எதுவும் தெரியாது. எப்போதும் சினிமா பற்றி தான் பேசுவார். இது ஒரு அரசியல் படம், எலக்சன் சீசனில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என நாங்கள் நினைக்கவே இல்லை. தமிழ் மிகச்சிறந்த இயக்குனர், நினைத்ததை சிறப்பாக திரையில் கொண்டு வருபவர்” என்றார்.

ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜூ பேசும்போது, “வேலூர் மாவட்டம் ஆம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த படத்தை படமாக்கி இருக்கிறோம். வேலூர் என்றாலே வறண்ட பூமி என்ற எண்ணன் எல்லோருக்கும் வரும், ஆனால் நிறைய அழகான இடங்கள் நிறைய இருக்கிறது, அதை இந்த படத்தில் காட்டியிருக்கிறோம். ஹீரோ விஜயகுமார் ஒத்துழைப்பும், அர்ப்பணிப்பும் அதிகம். எல்லா விஷயங்களையும் நன்கு கவனிப்பார். 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம், தயாரிப்பாளரின் ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. இது ஒரு அரசியல் படம், அரசியல் எனக்கு எதுக்கு என பலரும் நினைக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது, அரசியலை எல்லோரும் கவனிக்க வேண்டும்” என்றார்.

நடிகர் பாவெல் நவகீதன் பேசும்போது, “ஆம்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த படத்தை எடுத்தோம், கிராமத்தில் எங்கு வேண்டுமானாலும் கேமராவை வைக்கலாம், அவர்கள் வீட்டில் போய் சாப்பிடலாம், அவர்கள் எங்கள் சாப்பாட்டை சாப்பிடுவார்கள். நிஜமான அன்பு எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் கிடைத்தது. இயக்குனர் தமிழ் ஷூட்டிங்க்கு முன்பே 2 ஆண்டுகள் ப்ரீ-ப்ரொடக்‌ஷனுக்காக அந்த ஊரில் சுற்றி, அவர்கள் அன்பை பெற்றார், அந்த அன்பு தான் எங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆனது. கதைக்கு உறுத்தாத விதத்தில் ஒரு சிறந்த ஒளிப்பதிவை கொடுத்துள்ளார் மகேந்திரன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் எடிட்டர் பிரேம்குமார். இயக்குனரை விட அதிக உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் உதவி இயக்குனர்கள். பிரீத்தி அழகு மட்டுமல்ல, மிகத் திறமையான ஒரு நடிகை. அவருக்கு தமிழ் தெரியுமா என்று கூட தெரியவில்லை, ஆனாலும் ஸ்பாட்டில் திடீரென வசனத்தை மாற்றினாலும் தடுமாறாமல் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். விஜய்குமாருக்கும் எனக்குமான உறவு ஒரு மாமா – மாப்பிள்ளை போன்றது. உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்ற அரசியல் புரிதல் எல்லோருக்கும் இருக்க வேண்டும்” என்றார்.

நடிகர் திலீபன் பேசும்போது, “இந்த் எலக்சன் ஸ்கிரிப்டை என்னிடம் கொடுத்து படிக்க சொன்னார் இயக்குனர் தமிழ். உள்ளாட்சி தேர்தல் களத்தில் நடக்கும் அரசியலை சுற்றி நடக்கும் கதை. விஜய்குமார் உடன் நடித்தது மகிழ்ச்சி, அவர் இயக்கத்திலும் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதுவும் ஒரு நாள் நடக்கும் என நம்புகிறேன்” என்றார்.

வினியோகஸ்தர் சக்திவேலன் பேசும்போது, “விஜய்குமாரை வைத்து ஒரு படம் பண்ணப் போகிறேன் என ஒரு நாள் ஃபோனில் சொன்னார், படம் முடித்து விட்டு வந்து சந்திக்கிறேன் என சொல்லி விட்டு என்னை சந்திக்க வந்தார். இரண்டு படங்களை தன் சொந்த பணத்தில் தயாரித்திருக்கிறார் ஆதித்யா. நான் வெறும் பணம் தான் போட்டிருக்கிறேன், அவர்கள் உழைப்பு அபரிமிதமாக இருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்கணும் என சொன்னார். இப்படிப்பட்ட தயாரிப்பாளர்கள் வரும்போது பல நல்ல கலைஞர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைப்பார்கள். எலக்சன் படத்தை பார்த்தேன், மிக நுணுக்கமான கதை சொல்லல், ஒரு தொண்டனின் மகன் அரசியலுக்கு வந்தால் என்னவாகும் என்ற இரு புது சிந்தனையை தொட்டிருக்கிறார் இயக்குனர் தமிழ். விஜய்குமார் அர்ப்பணிப்பு பார்த்து பிரமித்தேன், அவர் இன்னும் பெரிய உயரத்தை தொட வேண்டும்” என்றார்.

நடிகர் விஜய்குமார் பேசும்போது, “இது உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகியிருக்கிற படம். அரசியலை வலிந்து திணிக்காமல் உருவாகியிருக்கிற ஒரு குடும்ப உறவுகளை சுற்றி நகரும் படம். இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பிரச்சாரம் செய்வார்கள், ஆனால் படம் பிரச்சார படமாக இருக்காது. ஒரு அரசியல் தொண்டனின் மகனாக நடித்து இருக்கிறேன். இயக்குனர் தமிழ் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

இயக்குனர் தமிழ் பேசும்போது, “பெயர், புகழ், பணம் இதற்காக நான் சினிமாவுக்கு வரவில்லை. என் முதல் படமான சேத்துமான் படத்துக்கு நீங்கள் கொடுத்த ஆதரவு எனக்கு பெரிய பயத்தை கொடுத்திருக்கிறது. என்னுடைய ஒரு படத்தில் நடித்தவர்கள் அடுத்த படத்தில் நடிக்கவே கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அத்துடன் பெரிய கம்பெனி, நல்ல கம்பெனியில் தான் இனிமே படம் பண்ணனும் என்ற முடிவிலும் இருந்தேன். சூரரைப்போற்று படம் பார்த்த பின் விஜய்குமாரிடம் இந்த ஸ்க்ரிப்டை படிக்க சொல்லி கேட்டேன். கதை பிடித்தால் நீங்க நடிங்க என சொன்னேன். எனக்கு கதை சொல்ல தெரியாது, பவுண்டட் ஸ்க்ரிப்ட் படிக்க கொடுத்து விடுவேன். தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வேண்டிய ஒரு கட்டாயம். கதை எந்த அளவுக்கு சொன்னேன், என்ன நடந்தது என்றெல்லாம் தெரியாது. ஆனால் எனக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இந்த படம் நடக்க முக்கிய காரணமாக இருந்தவர் விஜய்குமார் தான். என்னுடைய பாணி ஒரே வீச்சில் மொத்த படத்தையும் முடித்து விட்டு வருவது தான். அப்படி 65 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த முக்கிய காரணம் தயாரிப்பாளர் ஆதித்யா தான். வேலூரில் அரங்கல் துருகம் என்ற கிராமத்தை எனக்கு காட்டியது எழுத்தாளர் அழகிய பெரியவன் தான். அவர் ஒரு ஆசிரியர் என்பதால் அவரின் அர்ப்பணிப்பு என்னை பிரமிக்க வைத்தது” என்றார்.

இந்த சந்திப்பில் நடிகைகள் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, நாச்சியாள் சுகந்தி, வசனகர்த்தா அழகிய பெரியவன், கலை இயக்குனர் ஏழுமலை, படத்தொகுப்பாளர்
சி.எஸ்.பிரேம்குமார், நடன இயக்குனர் கிரிஷ், சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *