நாயகி ரூபா 35 நாட்கள் டெட்பாடியாக நடித்த அர்ப்பணிப்பு பிரமிக்க வைத்தது – கீதா கைலாசம்!

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த விழாவில் வசனகர்த்தா ராஜேந்திரன் பேசும்போது, “இப்படத்தின் கதையை முதன் முதலில் பெப்பின் ஜார்ஜ் சொன்ன போது, யார் ஹீரோ? என்ன மாதிரி கதை? என்று கேட்டேன். அவர் இது பெண்ணின் மீது பயணமாகும் கதை என்றார், அதுவும் நாயகி பிணமாக நடிக்க உள்ளார் என்றார், எப்படி நாயகியைப் பிணமாக வைத்து, இந்தக் கதையைச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதைச் சிறப்பாக ஒரு திரைக்கதை ஆக்கித் தந்தார். வெகு திறமையாளரான பெப்பின் ஜார்ஜ் அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. அவர் இன்னும் சிறப்பான படங்கள் செய்ய வேண்டும்” என்றார்.

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் பேசும்போது, “ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு என் கோடான கோடி நன்றி. என்னிடம் ஏன் சின்ன படங்கள் செய்கிறாய்? பெரிய படங்கள் செய்துவிட்டு ஏன் அறிமுக நடிகர்களின் படங்கள் செய்கிறாய்? என்கிற கேள்வி கேட்பார்கள். அதற்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான், என்னைப் பொறுத்தவரைச் சின்ன படம், பெரிய படம் என்று ஏதுமில்லை, எனக்குப் பணம் முக்கியம் இல்லை, நல்ல தரமான படைப்பு தான் முக்கியம். ஜார்ஜ் மிகத் திறமையான ஒரு இயக்குநர். அவரும் நானும் சேர்ந்து முன்பே சில படங்கள் செய்வதற்காகப் பேசிக் கொண்டிருந்தோம், அது சில காரணங்களால் நடைபெறவில்லை, இந்தக் கதை அவர் சொன்ன போது மிகவும் பிடித்திருந்தது. இதில் நிறையப் புதிதான விஷயங்கள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது இது முழுப்படமாக வந்ததற்கு உழைத்திட்ட அனைவருக்கும் நன்றி. இப்படத்தின் கதையை புரிந்துகொண்டு தயாரித்த ஸ்ரீனிவாசராவ் ஜலகம் மற்றும் கணபதி ரெட்டி இருவருக்கும் நன்றி. இப்படத்தை எங்கு எடுக்கலாம் எனப் பேசியபோது, பெப்பின் அவரது சொந்த ஊரான தஞ்சைக்குக் கூட்டிப் போனார். அந்த வீடு பார்த்த உடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்தப்படத்தில் பிணமாக நடிக்க நடிகையைத் தேடிய போது ரூபா நடித்த படம் பார்த்தோம், அவர் டான்ஸர் என்பதால் எங்களுக்கு இன்னும் சாதகமாக இருந்தது. அவரும் மிரட்டலாக நடித்துள்ளார். பெப்பின் ஒரு நல்ல ரைட்டர், இப்போது மிகச்சிறந்த இயக்குநரும் ஆகிவிட்டார். நரேந்திர பிரசாத் மிக அட்டகாசமாக நடித்துள்ளார். இப்படம் தியேட்டரில் மிக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார்.

நடிகை கீதா கைலாசம் பேசும்போது, “பெப்பின் இந்தக்கதையை சொன்னபோதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டயலாக் ஒரு இடத்தில் மட்டுமே இருந்தாலும், படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. இந்த கேரக்டரை என்னை நம்பி தந்ததற்கு பெப்பினுக்கு நன்றி. ஒரு கிராமத்தில் கிட்டதட்ட 45 பேரும் ஒன்றாக இருந்தது மிக இனிமையான நினைவுகள், அந்த ஊர் மக்கள் எல்லோரும் நண்பர்களாகிவிட்டனர். 35 நாட்கள் ரூபா டெட்பாடியாக நடித்தார் அவரது அர்ப்பணிப்பு பிரமிப்பாக இருந்தது. இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம். இப்படத்தில் உழைத்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய படம் என்று தான் எனக்கு தோன்றுகிறது. இப்படம் எப்போது ரிலீஸ் என மிகுந்த ஆவலுடன் இருந்தோம். இப்படம் மூலம் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கும். இது பெப்பினின் முதல் படம் போலவே இல்லை, மிக நன்றாக எடுத்துள்ளார்” என்றார்.

நடிகர் நரேந்திர பிரசாத் பேசும்போது, “மிகவும் மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. எமகாதகி மனதுக்கு மிக நெருக்கமான படம், இப்படத்திற்கு அன்பைத் தந்த அனைவருக்கும் நன்றி. இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் இப்படத்தின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னை அடையாளப் படுத்திய பிளாக் ஷிப்பிற்கு நன்றி. இனி நல்ல படங்கள் செய்வேன் என நம்புகிறேன்” என்றார்.

நடிகை ரூபா கொடவாயூர் பேசும்போது, “இப்படத்தை எங்கள் குழுவைத் தாண்டி முதல் முதலில் உங்களுக்குத் தான் காட்டினோம், மூன்றாவதாகப் படத்தை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று ஆவலாக இருந்தோம். நீங்கள் கொடுத்த வரவேற்பு மிகப்பெரியதாக இருந்தது. பலர் என்னை அழைத்து இண்டர்வியூ எடுத்தார்கள், நீங்கள் தந்த ஆதரவு அனைத்துக்கும் மிக்க நன்றி. என் முதல் படம் இது, இப்படி ஒரு நல்ல திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. பெப்பின் சார் கதை சொன்ன போது எனக்குப் பல விசயங்கள் புரியவில்லை ஆனால் ஸ்ரீனிவாசராவ் ஜலகம் சார் எனக்குப் புரிய வைத்தார். இதை மிஸ் செய்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். பெப்பின் சார் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு மிக்க நன்றி. ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் சார், பெரிய பெரிய படங்கள் செய்பவர் ஆனால் அவர் அவருக்குப் பிடித்த சின்னப்படங்களும் செய்வது மகிழ்ச்சி. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களும் மிகக் கடினமான உழைப்பைத் தந்தனர். சவுண்ட் மிக அற்புதமாக இருந்தது. சச்சின், அரவிந்த் மேனன் இருவருக்கும் நன்றி. என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவரும் எனக்குப் பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள். நரேந்திர பிரசாத்திற்கு நிறையப் பெண் ரசிகைகள் உள்ளனர், அவர் மிக அட்டகாசமாக நடித்துள்ளார். கீதா மேடம் அமரனுக்கு அப்புறம் இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் கணபதி ரெட்டி பேசும்போது, “எனக்கு தமிழ்த் திரையுலகம் மிகவும் பிடிக்கும் இங்குள்ள கலைஞர்கள் திரைப்படங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள். பெப்பின் மிகத் திறமையானவர். இப்படத்தை மிக அட்டகாசமாக எடுத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சுஜித் எங்கள் பட்ஜெட்டுக்குள் மிக அட்டகாசமாகப் படத்தை எடுத்துத் தந்தார். சவுண்ட் டிசைன் பிரமாதமாகச் செய்த, சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி. ராகுலுடன் இனி எல்லாப் படத்திலும் இணைந்து செயல்படுவேன். எங்கள் தெலுங்கு நடிகை ரூபா கலக்கியுள்ளார்” என்றார்.

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் பேசும்போது, “எமகாதகி எங்களுக்கு மிகவும் முக்கியமான படைப்பு. இப்படம் முழுமையாக வந்ததற்கு இம்மேடையில் இருப்பவர்கள் தான் காரணம், அதே போல் இப்படம் மக்களிடம் சென்று சேர்ந்ததற்குப் பத்திரிக்கையாளர்களாகிய நீங்கள் தான் காரணம். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள். ராகுல் மற்றும் ஸ்ரீனிவாசராவ் சார் இருவரிடமும் இந்த கதையை ஒரு ஐடியாவாக தான் சொன்னேன், அவர்கள் உடனே இதை டெவலப் செய்யுங்கள் கண்டிப்பாகச் செய்யலாம் என்றனர், பின் ஒளிப்பதிவாளர் சுஜித்திடம் இதே கதையைச் சொன்ன போது, அவரும் ஊக்கம் தந்தார். இப்படித்தான் இந்த திரைப்படம் ஆரம்பமானது. சுஜித் நட்பு ரீதியாக மிக நெருங்கிய பழக்கம், அவர் பெரிய பட்ஜெட் படங்கள் செய்து தன்னை நிரூபித்து விட்டார், எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால் மிகவும் ஊக்கம் தந்தார், இப்போது வரை அவர் தந்து வரும் ஆதரவிற்கு நன்றி. பல காட்சிகளை எப்படி எடுக்கப் போகிறேன் எனப் பயந்தேன். சுஜித் அதை மிகச்சுலபமாகச் சாதித்து விட்டார். இப்படத்தில் நிறைய கேரக்டர்கள், 36 குடும்பங்களாகப் பிரித்து வைத்துத் தான் வேலை பார்த்தோம் அனைவரும் மிகப்பெரும் ஒத்துழைப்புத் தந்தனர். எடிட்டிங்கில் ஸ்ரீஜித் சாரங் பல ஆச்சரியங்களைச் செய்து காட்டினார். இசையமைப்பாளர் ஜெசின் மிக அட்டகாசமாகச் செய்துள்ளார். அவருக்கு நன்றி. சவுண்டில் மிரட்டிய சச்சின், அரவிந்த் இருவருக்கும் நன்றி. உங்களுக்குத் திரையிட்டவுடனே இப்படத்தின் தலையெழுத்து மாறிவிட்டது. நல்ல படங்களைத் தொடர்ந்து தருவேன்” என்றார்.

தயாரிப்பாளர் ராகுல் வெங்கட் பேசும்போது, “இப்படத்தின் கதையை பெப்பின் சொல்லி 3 வருடம் ஆகிவிட்டது. இப்படம் உருவாக என் அம்மாவும் அப்பாவும் தந்த ஆதரவு மிக முக்கியம். அவர்களுக்கு சினிமா பிடிக்கும் என்பதால் எனக்கு ஆதரவு தந்தார்கள். எனக்குப் பணம் முக்கியமில்லை, பணத்துக்காக இப்படத்தைத் தயாரிக்கவில்லை. பெப்பின் இந்த படத்தில் 36 ஆர்டிஸ்டுகளை அறிமுகப் படுத்தியுள்ளார். இந்தப்படம் குழுவாக எங்களுக்கு முக்கியமான படம். சுஜித், ஸ்ரீஜித் இருவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளனர். எல்லோருமே மிக அர்ப்பணிப்புடன் உழைத்தனர். எங்களுக்கு நிறையப் பதட்டம் இருந்தது. ஆனால் இப்படத்தை நீங்கள் பார்த்த பிறகு தான் மிகப்பெரிய நிம்மதி வந்தது. நீங்கள் தந்த பாராட்டில் தான் மக்களிடம் இப்படம் சென்று சேர்ந்துள்ளது. திரையரங்குகள் அதிகரிக்கக் காரணம் நீங்கள் தான் அனைவருக்கும் என் நன்றிகள். கீதா மேடம், ரூபா, நரேந்திர பிரசாத் எல்லோரும் மிகப்பெரிய ஆதரவைத் தந்தனர். இன்னும் இது போல் நிறைய நல்ல படங்கள் செய்வோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *