2023ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படம் தான் வெற்றிமாறனின் விடுதலை. சூரி கதையின் நாயகனாக நடிக்க, பெருமாள் வாத்தியார் என்ற சிறப்புத் தோற்றம் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. முதல் பாகத்தின் இறுதியில் கைது செய்யப்படும் சூரியால் பெருமாள் வாத்தியார் கைது செய்யப்பட, அதன் பின் என்ன நடக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் படத்தை முடித்திருந்தனர், அதன் தொடர்ச்சியும், யார் இந்த பெருமாள் வாத்தியார் என்ற கதையும் தான் இந்த விடுதலை 2.
படத்தின் கதைப்படி, கம்பெனி கேப்பில் பெருமாள் வாத்தியார் விஜய் சேதுபதியை கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியில் தோழர்களால் கசிய விடப்பட இரவோடு இரவாக அவரை அங்கிருந்து இடமாற்றம் செய்ய கிளம்புகிறார்கள். சேத்தன், சூரி, பாலா ஹாசன் மற்றும் சில காவலர்களோடு காட்டுப் பகுதியில் பயணிக்கிறார்கள். இரவானதால் பயணத்தில் சில தடைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் பெருமாள் தோழரை எப்படியாவது மீட்டு செல்ல தோழர்கள் முயற்சி செய்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் இந்த பிரச்சினைகளை ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தலைமைச் செயலாளர் ராஜீவ் மேனன் எப்படி கையாள்கிறார்? அந்த பயணத்தில் ஆசிரியராக இருந்த தான் எப்படி போராளியாக மாறினேன் என்பதை விஜய் சேதுபதி விவரிக்கிறார். இறுதியில் என்ன ஆனது? யாருடைய நோக்கம் வென்றது? அரசு இயந்திரம் எப்படி எல்லாம் இயங்கும் என்பதை உண்மைக்கு நெருக்கமாக வெற்றிமாறன் பதிவு செய்திருக்கும் படமே இந்த விடுதலை 2.
முதல் பாகத்தில் சூரி கதையின் நாயகன், இந்த பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகன். படம் முழுக்க தோழர் கலிய பெருமாளாக வியாபித்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் நிர்வாணப்படுத்தப்பட்டு விசாரிக்கப்படுவதில் துவங்கி, இறுதி காட்சி வரை நம் மனதில் அழுத்தமாக பதிகிறார். அரசுக்கு கட்டுப்பட்ட ஆசிரியராக, அடக்குறைக்கு எதிராக போராடும் தோழராக, மக்கள் படையை வழி நடத்தும் தன்னமற்ற தலைவனாக என பல்வேறு பரிணாமங்களில் படம் முழுக்க அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காட்டு வழி பயணத்தில் அவர் கேட்கும் கேள்விகள் அந்த கதாபாத்திரங்களை தாண்டி படம் பார்க்கும் மக்களையும் கேட்கும் வகையில் இருக்கிறது. அடக்குமுறைகளில் வீழ்ந்து போகும் ஒவ்வொரு முறையில் நம் மனதில் ரணத்தை ஏற்படுத்தி செல்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நிச்சயம் கனத்த இதயத்தோடு நம்மை வெளியில் அனுப்புகிறார்.
மகாலட்சுமியாக மஞ்சு வாரியர். கச்சிதமான தேர்வு. தலை முடியை வெட்டிக் கொண்டு தோழர்களுடன் இணைந்து பயணிக்கும் காட்சிகளாகட்டும், திருமணம் செய்து கொண்டு ஒரு குடும்பத் தலைவியாக வாழும் காட்சிகளாகட்டும் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். சூரி குமரேசனாக முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இதில் பயணித்திருக்கிறார். குற்ற உணர்ச்சியில், எது தன்னுடைய கடமை என்பதில் அடிக்கடி எழும் கேள்விகளோடு ஒருவித குழப்பத்தில் நடமாடும் கதாபாத்திரமாக தன் ஆழ்மன உணர்வுகளை மிக அழகாக நடிப்பில் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.
ராஜீவ் மேனன் தலைமைச் செயலாளராக கன கச்சிதமான தேர்வு. அவருடன் வரும் சரவண சுப்பையா, மற்ற நடிகர்களும் அந்த காட்சியின் அழுத்தத்தை பன்மடங்கு கூட்டுகிறார்கள். அமைச்சராக வரும் இளவரசு ஒரு சில காட்சிகள் வந்தாலும் அவர் பேசும் அந்த ஒரு வசனத்தாலே மனதில் பதிகிறார். சேத்தன் வழக்கம் போல குரூர எண்ணம் கொண்ட காவல்துறை அதிகாரியாக மிரட்டுகிறார். எப்போது என்ன செய்வார் என பதைபதைக்க வைக்கிறார். கிஷோர் கேகே என்ற கம்யூனிஸ்ட் தோழராக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கென் கருணாஸ், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட், வேல்ராஜ், கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், தமிழ், பாவெ; நவகீதன் என பல சிறந்த நடிகர்களும் தங்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். அனுராக் கஷ்யாப்பை ஒரு முக்கியமான கேமியோவாக உபயோகித்ததும் சிறப்பு.
இயக்குனர் வேல்ராஜின் ஒளிப்பதிவு அபாரம், காடு மலைகளில் அவரது கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. பனி மூட்டம் படர்ந்த காட்சிகளை படம் பிடித்த விதமும் அருமை. இரவுக் காட்சிகளில் அந்த பதட்டத்தை தன் ஒளிப்பதிவின் மூலம் அதிகரிக்கிறார். இசைஞானி இளையராஜாவின் இசையில் தினம் தினமும் பாடல், மனசுல பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. பொறுத்தது போதும் பாடல் வரும் காட்சிகளும், பின்னணி இசையிலும் மிகச் சிறப்பான இசையை தந்திருக்கிறார்.
முதல் பாகத்தில் மலை கிராம மக்களின் வாழ்வியலையும், கம்பெனி கேம்ப் செயல்படும் விதத்தையும், தேடுதல் வேட்டை எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் காட்டியிருந்தார் வெற்றிமாறன். இந்த பாகத்தில் போராளிகள் எப்படி உருவாகிறார்கள் என்பதில் துவங்கி இன்னமும் அவர்களின் போராட்டம் சமூகத்துக்கு அவசியமாக இருப்பது வரை பல விஷயங்களை பேசியிருக்கிறார். போராளிகளின் செயல்பாடுகள், தலைமறைவு, கைது, தகவல் பரிமாற்றம், அவர்களின் மரணங்கள், மறுபுறம் அரசு இயந்திரம் அவர்களை எப்படி கையாள்கிறது என்பது வரை இன்றைய இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் எடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ஆனால் இரண்டரை மணி நேரத்துக்குள் எல்லா சமூக அவலங்களையும் சொல்ல அவர் முயற்சிப்பது தெரிகிறது. பல இடங்களில் வாய்ஸ் ஓவர் மூலமாகவே அவற்றை சொல்ல முற்பட்டிருக்கிறார். படத்தின் வசனங்கள் தான் ஆணிவேர். பல வசனங்கள் சவுக்கடியாக அமைந்திருக்கின்றன. முதல் பாதியில் வரும் பெருமாள் வாத்தியாரின் இளமை காலக் காட்சிகள் நன்றாகவே இருந்தாலும் கொஞ்சம் பிரச்சாரமாக அமைவது போல இருக்கிறது. இரண்டாம் பாதியில் வேகமெடுத்து படத்தை அடுத்த தளத்துக்கு நகர்த்தியிருக்கிறது. கிளைமாக்ஸ் காட்சி நிச்சயம் பெரும் தாக்கத்தை உண்டு செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விடுதலை இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசியமான திரை மொழி அரசியல்.