கருத்து வேணாம், கமெர்சியல் தான் என் ரூட் – ரஜினிகாந்த் சுவாரஸ்ய பேச்சு!

லைகா ப்ரொடக்ஷன்ஸ் பிரமாண்ட தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேட்டையன். த.செ.ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அனிருத் லைவ் பெர்ஃபார்மன்ஸ் உட்பட பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சு அவரது ஸ்டைலில் வழக்கம் போல ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது. அவர் பேச்சின் சில சாராம்சங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

* ஜெயிலர் படத்திற்கு பிறகு பல இயக்குனர்களிடம் கதை கேட்டேன். ஒரு கட்டத்தில் கதை கேட்பதை கூட நிறுத்தி விட்டேன். அப்போது என் இளைய மகள் சௌந்தர்யா எனக்கு போன் செய்து இயக்குனர் ஞானவேல் ஒரு லைன் கதை சொன்னார், பிடித்து இருந்தது, அதை கேளுங்க என கூறினார். அவர் எடுத்தது சமூக படம், கருத்து சொல்ற படங்கள். நமக்கு செட் ஆகாது என நினைத்தேன். லைன் கேட்டேன், பிடித்தது, கமெர்சியலா இருந்தா படம் பண்ணலாம் என சொன்னேன். நல்ல திரைக்கதையோடு ஞானவேல் வந்தார்.

* அதன் பிறகு தான் தெரிந்தது ஞானவேலுக்கு ஜெய்பீம் இரண்டாவது படம், யாரிடமும் அசிஸ்டென்ட் ஆக வேலை செய்யவில்லை, பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராக வந்திருக்கிறார் என்று. அதன் பிறகு அந்த கண்ணோட்டத்தில் ஜெய் பீம் படத்தை மீண்டும் பார்த்தேன்.

* தனக்கு வேண்டிய டெக்னீஷியன்கள் பெயர்களை கூறி, அவர்கள் எல்லாம் வேண்டும் என கூறினார். அதன் பின் 100% அனிருத் தான் வேண்டும் என அவர் கூறினார். நான் 1000% அனிருத் தான் வேண்டும் என்று கூறினேன்.

* இன்றைய 2கே கிட்ஸ்க்கு அமிதாப் பற்றி எல்லாம் பெரிதாக தெரியாது என்று சொல்லி அவரை பற்றிய பல அம்சங்களை ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசினார் ரஜினி. அமிதாப் உடன் 33 ஆண்டுகள் கழித்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்பதையும் பகிர்ந்து கொண்டார்.

* அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸ் என்பதை படத்துக்கு பூஜை போடும்போதே உறுதி செய்து விட்டோம். ஆனால் லைகா பல பெரிய படங்களை தயாரித்து வந்ததால் தேதியை அறிவிக்காமல் விட்டு விட்டனர்.

* 20-30 வருடங்களுக்கு முன்பு எல்லாம் என் முதல் கேள்வி யாரு ஹீரோயின் என்பதாக இருக்கும். இப்போ அப்படி கேட்க முடியாதல்லவா. இந்த படத்தில் மஞ்சு வாரியர் உங்களுக்கு ஜோடி என்று சொன்னார் ஞானவேல். அசுரனில் அவர் நடித்ததை பார்த்து வயதான தோற்றம், நமக்கு சரியா இருக்கும் என ஓகே சொல்லி விட்டேன். ஆனால் ஷூட்டிங்கில் வந்து இறங்கிய போது மிக இளமையாக இருந்தார்.

* ஞானவேல் தளபதி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படங்களில் என் நடிப்பு பற்றி எல்லாம் சிலாகித்து பேசினார். அந்த மாதிரி நடிப்பு வேண்டும் என்றார். அதெல்லாம் அந்தந்த நேரத்துல அந்த இயக்குனர்கள் படுத்திய பாடு, அதை அப்படியே பிரதிபலித்தேன். அதுக்கு எவ்ளோ டேக் எடுத்தேன்னு எனக்கு தான் தெரியும். ஆனால் இந்த படத்திலும் முடிந்தவரை நடித்திருக்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *