தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களை வழக்கமான கமெர்சியல் பாணி படங்களில் பார்ப்பது ஒரு வகை என்றால், அந்த கமெர்சியல் இலக்கணங்களை உடைத்தெறிந்து, கதையம்சம் கொண்ட யதார்த்தமான களங்களில் நடக்கும் கதைகளில் காட்சிகளினூடே மாஸ் காட்சிகளை அமைத்து புது பாணியிலான கமெர்சியல் படங்களை படைப்பது இன்னொரு வகை. அந்த வகையில் பரீட்சார்த்த முயற்சிகளுக்கு எப்போதும் தோள் கொடுக்கும் சீயான் விக்ரம் நடிக்க அருண்குமார் இயக்கியிருக்கும் படம் “வீர தீர சூரன் பார்ட் 2”. HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ரியா ஷிபு தயாரிக்க, சீயான் விக்ரம் உடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படம் எப்படி இருக்க், பார்க்கலாம்.
படத்தின் முழுக்கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியது. பெரியவர் என்று அழைக்கப்படும் மாருது பிருத்விராஜ் மகன் சுராஜை ஒரு என்கவுண்டரில் போட்டுத் தள்ள திட்டம் தீட்டுகிறார் போலீஸ் எஸ்.பி. அருணகிரி. இதனால் கண்ணனை அந்த இரவு மட்டும் காப்பாற்றி விட்டால் அடுத்த நாள் கோர்ட்டில் சரணடைய வைத்து விடலாம் என கணக்கு போடுகிறார் பெரியவர். ஒரு கட்டத்தில் அவரிடம் விசுவாசியாக இருந்த காளி என்ற சீயான் விக்ரமிடம் ஒரு உதவியை செய்து தரக் கேட்கிறார் பெரியவர். காளி, அருணகிரி, பெரியவர், கண்ணன் ஆகியோரிடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் மீதிக்கதை.
சீயான் விக்ரம், காளி என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நம்மில் ஒருவர் போல அறிமுகமாகிறார். குடும்பஸ்தன் எப்படி இருப்பான் என்பதை கண்முன் நிறுத்துகிறார். அதே நேரம் அவருடைய மற்ற பரிமாணங்கள் வெளிப்படும் இடங்களில் எல்லாம் அடித்து ஸ்கோர் செய்கிறார். போலீஸ் ஸ்டேஷன் காட்சியில், கிளைமாக்ஸ் காட்சியில் எல்லாம் தெறிக்க விடுகிறார். அதே சமயம் மாஸ் ஹீரோ படங்களில் வரும் ஹீரோயிஸ காட்சிகளாக மட்டுமே அவை முடியாமல் அதற்கு பின் இருக்கும் உளவியல் விஷயங்களையும் காட்டி அந்த காட்சிகளின் தன்மையையும் மாற்றி விடுகிறார் இயக்குனர் அருண் குமார். கிட்டத்தட்ட 60 வயது ஹீரோ என்றே நம்ப முடியாத உடற்கட்டுடன் பல காட்சிகளில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.
போலீஸ் எஸ்பி அருணகிரியாக எஸ்ஜே சூர்யா. பழிவாங்கும் எண்ணம், நய வஞ்சகமாக பேசி காரியத்தை சாதிக்கும் குணம், எல்லா கதாபாத்திரங்களுடனும் ஏற்கனவே இருக்கும் தொடர்பு, அவர்களை அவர் எப்படி பார்க்கிறார் என்பதையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். இதே மாதிரி குணாதிசயங்கள் சுராஜ் மற்றும் பிருத்விராஜ் கதாபாத்திரங்களுக்கும் அப்படியே பொருந்தும். இதில் யார் நல்லவர், கெட்டவர் என எதையும் முடிவு செய்ய முடியாத வகையில் இவர்கள் கதாபாத்திரங்கள் எல்லாமே ஒரு வகையாக கிரே கதாபாத்திரங்கள் தான். துஷாரா விஜயன் மிகச்சிறந்த ஒரு நடிப்பை வழங்கியுள்ளார். அவரது கேரியரில் இந்த படமும் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதௌ உறுதியாக சொல்லலாம். சீயான், துஷாரா இருவருக்குமான அந்த கணவன் மனைவி உறவு அவ்வளவு பொருத்தம். குடும்பத்தினராக நடித்தவர்கள், கேங்கில் இருக்கும் நடிகர்கள் என அத்தனை நடிகர்களும் பொருத்தமான தேர்வு, அந்த மண்ணின் முகங்களாக இருக்கிறார்கள்.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம். இரவில், அதுவும் இருட்டில், குறைந்த வெளிச்சத்தில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு சிங்கிள் ஷாட் காட்சியும் படத்தின் சிறப்பம்சம். படத்தொகுப்பாளர் ஜிகே பிரசன்னாவின் எடிட்டிங்கும் இந்த படத்துக்கு கூடுதல் பலம். ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. அதை விட பின்னணி இசையில் மீண்டும் ஒரு முறை தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார்.
இயக்கும்ர் அருண்குமார். சித்தா போன்ற மிக அழுத்தமான ஒரு கதையை முடித்த கையோடு ஒரு மாஸ் ஹீரோவை இயக்கியுள்ள படம் என்பதாலேயே எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனாலும் தன்னுடைய பாணியில் இருந்து விலகாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்து ராவாக ஒரு படத்தை தந்திருக்கிறார். பல நேரங்களில் நம் ஊரில் நாமும் அந்த கதாபாத்திரங்களை பின் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை பார்த்த உணர்வை தருகிறது அந்த யதார்த்தமான படமாக்கல். சினிமாத்தனத்தை விட்டு விலகி, ரியலிஸ்டிக்கான ஒரு படத்தை தர முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சேதுபதி படத்தை போலவே, ஒரு ஹீரோ படமாக இருந்தாலும் மாஸ் இருக்கணும், ஆக்ஷன் இருக்கணும், வில்லன் டெரரா இருக்கணும் போன்ற இலக்கணங்களுக்குள் செல்லாமல் எல்லாரையும் கதாபாத்திரங்களாக உலவ விட்டிருப்பது இந்த படத்தை தனித்து தெரிய வைக்கிறது. லாக் அப் மரணம் போன்ற விஷயத்தையும் காட்சியாக சொல்லாமல் கதையின் முக்கிய மையப்புள்ளியாக பயன்படுத்திதிருப்பதும் நன்று. மொத்தத்தில் அருண்குமார் படங்களின் வரிசையில் இந்த வீர தீர சூரன் பார்ட் 2 படத்துக்கு நிச்சயம் முக்கியமான இடம் உண்டு.