பாய்ஸ் படத்தில் அறிமுகமான நகுல் உடல் எடையை குறைத்து தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பிஸியான நடிகராக அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். காதலில் விழுந்தேன் படமும் சரி, பாடல்களும் சரி மிகப்பெரிய வெற்றியை பெற்று நகுலை பிஸியான நடிகராகவே வைத்திருந்தது. அவரும் வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற நல்ல படங்களையும் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் சமீப காலங்களில் அவர் படங்கள் வெளியாவதே குறைந்து விட்டது, அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் “வாஸ்கோடகாமா”. ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நகுலுக்கு வெற்றியை கொடுத்ததா? பார்க்கலாம்.
படத்தி கதைப்படி, யுகங்கள் கடந்த பின்னர் கெட்டவர்கள் மட்டுமே அதிகம் வாழும் உலகம், அதை சகித்துக் கொள்ள முடியாத நல்லவர்கள் குறைவாகவும் வாழும் ஒரு கற்பனை உலகம் தான் படத்தின் கதைக்களம். வாசுதேவன் , கோவர்தன், கப்பர், மார்கோ ஆகியோர் பெயரில் இருந்து உருவானது தான் வாஸ்கோடகாமா தலைப்பு. நாயகன் நகுல் தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் 4 பேரை பிடித்துக் கொடுத்த காரணத்துக்காக ‘லாக் அப்’பில் வைக்கப்படுகிறார். இப்படி எப்போதெல்லாம் போலீஸில் மாட்டுகிறாரோ அப்போதெல்லாம் ஜாமீனில் எடுக்க அவருடைய அண்ணன் பிரேம் வருகிறார். இப்படி நல்லவனாக இருந்தால் பொழைக்க முடியாது என எல்லோரும் அட்வைஸ் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது அண்ணன் கொலை செய்யப்பட சொந்த ஊரிலிருந்து நகரத்துக்கு வருகிறார் நகுல்.
‘அயோக்கிய வாசிகள்’ குடியிருப்பில் ‘இவன் கெட்டவன்’ என சொல்லி, தோற்றத்தை மாற்றி வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கிறார் அவருடைய சித்தப்பா முனீஸ்காந்த். வீட்டின் உரிமையாளர் ஆனந்தராஜ் மகளுடன் காதல் ஏற்பட்டு, திருமணம் வரை வந்து விடுகிறார்கள். தாலி கட்டும் நேரத்தில் நகுல் ஒரு யோக்கியன் என்பது தெரிந்து விட, திருமணம் நின்று, அவரும் ‘வாஸ்கோடகாமா’ சிறைக்கு சென்று விடுகிறார். முழுக்க நல்லவர்கள் இருக்கும் அந்த சிறையில் யாரை சந்தித்தார்? என்ன பிர்ச்சினைகளை சமாளித்தார்? என்பதே மீதிக்கதை.
நகுல், வாசுதேவனாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார். நாயகியாக அர்த்தனா பினு, ஆங்காங்கே வந்து போகிறார். கே.எஸ்.ரவிகுமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இரண்டாம் பாதி முழுக்க அவரை சுற்றி தான் கதையே என்பது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். ஆனந்தராஜ், மதன் பாப், முனீஸ்காந்த், ஆர்.எஸ்.சிவாஜி என பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு மற்றும் இசை இரண்டுமே சுமார் ரகம் தான். அருமையான கதைக்களத்தை பிடித்த இயக்குனர் திரைக்கதையில் மெனக்கெடாமல் விட்டு விட்டாரோ என நினைக்க வைக்கிறது படம். படம் எதை நோக்கி செல்கிறது என்பதே தெரியாத வகையில் தான் பயணிக்கிறது. அயோக்கியர்கள் வாழும் உலகம், சிறையில் வாழும் நல்லவர்கள், அவர்களை அடக்கி ஆளும் சிறை நிர்வாகம் என எடுத்துக் கொண்ட விஷயங்கள் சிறப்பு. ஆனால் பல இடங்களில் சுவாரஸ்யம் இன்றி நகர்ந்து நம்மை டயர்ட் ஆக்குகிறது. இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய படம் சாதாரண படமாக முடிந்து விடுகிறது.