கருப்பையா முருகன் இயக்கத்தில், பிரேம்ஜி அமரன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க உருவாகியுள்ள படம் “வல்லமை”. பெரும்பாலும் காமெடி படங்களில் மட்டுமே நடிக்கும் பிரேம்ஜி இந்த படத்தில் மாறுபட்ட, மிகவும் சென்சிட்டிவான ஒரு கதையில் நாயகனாக, ஒரு மகளுக்காக அப்பாவாக நடித்திருக்கிறார். சிறுமிகளுக்கு நிகழும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, அரியலூரில் இருந்து தன் ஒரே மகளுடன் சென்னைக்கு வரும் ஒரு எளிமையான, அன்பான தந்தை பிரேம்ஜி. தாய் இல்லாத மகளை மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார். போஸ்டர் ஒட்டக் கிளம்பும்போது கூட தன்னுடனே அழைத்து சென்று விடுவார். அப்படிப் பட்ட மகளை ஒருவன் அவளுக்கே தெரியாமல் பாலியம் வன்கொடுமை செய்திருக்க. அதனால் உடைந்து போன பிரேம்ஜி அதன் பின் என்ன முடிவெடுத்தார்? அவளை பாலியல் வன்கொடுமை செய்தது யார்? அவனை கண்டுபிடித்தார்களா? அவனுக்கு தண்டனை அளித்தார்களா? என்பதை சொல்லும் படமே இந்த வல்லமை.
தன் மகளுக்கு நடந்த அநீதிக்கு பழிவாங்கும் பாசமிகு தந்தையாக நடித்திருக்கிறார் பிரேம்ஜி. ஒரு எளிய குடும்பத்து மனிதராக, வலுவற்ற மனிதராக கதாபாத்திரத்துக்கு மிகச் சரியாக பொருந்துகிறார். காமெடி செய்து பழக்கப்பட்ட பிரேம்ஜிக்கு இந்த உணர்ச்சிமிக்க கதைக்களம் சற்றும் கடினமாக இருப்பது தெரிகிறது. நடிப்பிலும் இன்னும் பயிற்சி தேவை என்பது போல இருக்கிறது அவரது நடிப்பு. சண்டைகளில் ஆகட்டும், யாரையாவது அடிக்கும்போதாகட்டும் ஏதோ சிறு குழந்தை அடித்து விளையாடுவது போல இருக்கிறது.
அவரது மகளாக வரும் பேபி திவ்யதர்ஷினி நல்ல நடிப்பு, நம் மனதில் பதிகிறார். அந்த கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியாக நம்மை கலங்க வைக்கிறார். தொழிலதிபர் சக்ரவர்த்தி, அவரது ட்ரைவர், பள்ளியின் பியூன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், கான்ஸ்டபிள் சுப்ரமணி என மற்ற நடிகர்களும் ஓரளவு நல்ல நடிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்குநரின் எளிமையான கதைசொல்லல், அலட்டல் இல்லாத ஒளிப்பதிவு என மிகவும் எளிமையான கதையாக சொல்லியிருப்பது பலம். கதையின் தீவிரத்தை உயர்த்தும் பின்னணி இசை, காட்சிகளுக்கு உணர்வுப் பூர்வமான தாக்கத்தை அளிக்கிறது. ஆனாலும் கதையில் புதுமை என எதுவும் இல்லாதது ஒரு பெரும் குறை. அதே போல படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது எல்லாமே எளிதில் யூகிக்கும்படி இருப்பது நம்மை கொஞ்சம் திரையை விட்டு விலக வைக்கிறது. சில காட்சிகள் நீளமாக இழுத்தது போல் தோன்ற வைக்கிறது. காமெடி நடிகராக இருந்த பிரேம்ஜி அமரனின் புதிய முகத்தைக் காட்டும் ஒரு படமாக அமைந்துள்ளது. சில விஷயங்களை ரொம்பவே சிம்பிளாக முடித்து விட்டது போன்ற உணர்வை தருகிறது. மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்.