வாழை – திரை விமர்சனம்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படங்களுக்கு பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவதாக உருவாகியிருக்கும் திரைப்படம் வாழை. Navvi Studios  நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar, Farmer’s Master Plan Production வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. பொன்வேல், ராகுல் என இரண்டு சிறுவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட திரைப்படம் என்ற அறிவிப்புடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை அடிப்படையாக கொண்டது.

படத்தின் கதைப்படி, 90’களில் நடக்கும் கதையில் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் வாழைத் தோப்புகளில் அன்றாடக் கூலியாக பணி புரியும் அடித்தட்டு மக்களின் வாழ்வியலையும், அதில் ஒரு அங்கமாக இருக்கும் சிறுவன் சிவனைந்தன் என்ற சிறுவனின் வாழ்க்கையையும் பற்றியது. பள்ளியில் நன்றாக படிக்கும் முதல் மானவனாக திகழும் சிவனைந்தனின் அம்மா, வியாபாரியிடம் அட்வான்ஸ் தொகை வாங்கிக் கொண்டு தான் மற்றும் மகள் உடன் தன் மகனும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்கும் பணிக்கு வருவான் என உறுதி அளிக்கிறார். காடு, வயல், வரப்பு எல்லாம் வாழைத்தாரை தலையில் சுமந்து செல்லும் அந்த வேலையை அவன் அறவே வெறுக்கிறான். வாங்கிய கடனுக்காக அந்த வேலையை செய்தாக வேண்டிய கட்டாயம் அவன் குடும்பத்துக்கு. அதில் இருந்து மீண்டானா? அவர்கள் குடும்பம் மீண்டதா? என்பதே மீதிக்கதை.

கதையின் நாயகர்கள் பொன்வேல், ராகுல் என்ற அந்த இரண்டு சிறுவர்கள் தான். முதல் காட்சியில் ரஜினி, கமல் சண்டையில் துவங்கி இறுதி காட்சி வரை நம்மை அவர்களை ரசிக்க வைக்கிறார்கள். முள் குத்தியதாக பொய் சொல்லும் காட்சி, சட்டை கிழிக்கும் காட்சி, ரஜினி, கமல் பற்றிய அவர்கள் அடிக்கும் கவுண்டர்கள் என கலகலப்பான காட்சிகள் ஒருபுறம், வாழைத்தார் சுமக்கும் மனதை கனக்க வைக்கும் காட்சிகள், அவர்களின் எளிமையான வறுமை சூழ்ந்த வாழ்க்கை மறும்புறம் என இருவரும் விருது வாங்கத் தகுதியான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

நிகிலா விமல் பள்ளி ஆசிரியையாக மிகச்சிறந்த தேர்வு. நடிகை தேர்விலேயே 50% வெற்றி பெற்று விட்டார் மாரி செல்வராஜ். இளம் ஆசிரியை எப்படி இருப்பார், மாணவர்களுடன் அவர் பேசும் காட்சிகள் என அவ்வளவு யதார்த்தம். திவ்யா துரைசாமி, கலையரசன் இருவருமே கூலி வேலை செய்பவர்கள் தானோ என என்னுமளவுக்கு அந்த காலத்து, கிராமத்து மனிதர்களாகவே மாறியிருக்கிறார்கள். அதுவும் கலையரசன் அந்த 4 தார் வழையை சுமந்து செல்வதும், மற்றவர்கள் வரிசையாக தோப்பில் இருந்து லாரி வரை வரிசையாக சுமந்து செல்லும் காட்சிகளில் நம் கால்கள் வலிக்கின்றன. அந்த அளவுக்கு அந்த தொழிலாளர்களின் வலியை உணர வைத்திருக்கிறார் இயக்குனர். புரோக்கராக வரும் பத்மன், சிறுவனின் அம்மாவாக வரும் ஜானகி, வியாபாரியாக வரும் ஜே சதீஷ்குமார் என அத்தனை பேரும் கச்சிதமான தேர்வு.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மிக அற்புதம். தென் கிழக்கு பாடல் உட்பட பல இடங்களில் கவிதை போன்ற அழகியலான காட்சிப் பதிவுகளும், தொழிலாளர்களின் வலியை சொல்லும் காட்சிகளில் இடத்தின் தன்மையை பிரதிபலிக்கும் அச்சு அசலான அந்த பகுதிகளை ராவாக காட்டி நம்மை உணர வைக்கிறார். ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் மெல்லிய சாரல் போல அமைந்த தென் கிழக்கு பாடல், இதயத்தை உறிஞ்சி எடுக்கும் பாதவத்தி பாடல், வாழைத்தார் சுமக்கும் தொழிலாளர்களின் அன்றாடத்தை காட்டும் ஒரு சட்டி சோறு பாடல் மற்றும் ஒரு ஊருல ஒரு ராஜா பாடல் என எல்லாமே படத்துடன் நம்மை ஒன்ற வைக்கிறது. பின்னணி இசை நம் மனதை ஆட்கொள்கிறது. படத்தின் சவுண்ட் டிசைனும் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கலை இயக்குனரின் பணி மிகவும் அபாரமானது. செட் தானா என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சில வீடுகளை செட் போட்டிருக்கிறார்கள்.

மாரி செல்வராஜ் இயக்கிய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயங்களை பேசியிருக்கிறது. இந்த படத்தில் அவர் வாழ்வில் நடந்த ஒரு சின்ன துண்டுப் பகுதியை படமாக்கியிருக்கிறார் என்றே சொல்லலாம். முதல் பாதி முழுக்க மிகவும் கலகலப்பான ரசிக்கும்படியான படமாகவே செல்கிறது. பல பாப் கல்ச்சர் ரெஃபரன்ஸ் நம்மை அந்த காலத்தை நினைவு கூர வைக்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் சீரியஸ் ஆகும் படம் கிளைமாக்ஸில் வேறு ஒரு பரிமாணத்தை எடுக்கிறது. மாரி செல்வராஜின் திரை மொழியில் இந்த படத்தை பெரிய திரையில் பார்ப்பது தான் தகுந்ததாக இருக்கும். மீண்டும் ஒரு நல்ல சினிமாவை கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். வாழை அவர் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *