தென் சென்னை – விமர்சனம்

சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக வடசென்னையை மையப்படுத்தியும் பல கதைகள் வந்திருக்கின்றன, காலத்துக்கும் பேசப்படும் படங்களாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் தென் சென்னையை மையமாக கொண்ட படம் என எதுவும் தனியாக சொல்லப்பட்டதில்லை. அப்படிப்பட்ட தென் சென்னையை மையமாகக் கொண்டு பரபர திரைக்கதையில் வித்தியாசமான கதையம்சத்தில் புதுமுகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’தென் சென்னை’. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை தயாரித்தி இயக்கியும் இருக்கிறார் நாயகனாக நடித்த ரங்கா.

படத்தின் கதைப்படி, மனைவியின் மறைவுக்கு பிறகு பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து தனக்கு தெரிந்த ஹோட்டல் தொழிலில் தன் திறமை மற்றும் கடின உழைப்பால் தன் மகன் மற்றும் மகளுடன் உழைத்து ஒரு பெரும் ஸ்தாபனத்தை உருவாக்குகிறார் தேவராஜன். மதுரைக்கு சென்ற சமயத்தில் அங்கு சந்திக்கும் ஒரு அண்ணன் தங்கையை தன்னுடன் அழைத்து வந்து அவர்களையும் தன் குடும்பமாக வளர்த்து, தொழிலையும் சேர்த்து வளர்க்கிறார். அவர்களை தன் வாரிசுகளுக்கு திருமணமும் செய்து வைக்கிறார். அவர் மறைவுக்கு பிறகு அந்த ஸ்தாபனத்தை நிர்வகிக்கிறார் அவரின் பேரன், நாயகன் ரங்கா. பெட்டிங் தொழில் செய்யும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த மனிதரின் கட்டுப்பாட்டில் அந்த ஹோட்டல் இயங்க வேண்டிய சூழல். அந்த நேரத்தில் சந்திக்கும் ஒரு பெண், ரோட்டில் போடப்பட்ட ஒரு குழந்தை என கதை நகர்கிறது. அது யாருடைய குழந்தை? ஹோட்டல் தொழில் என்ன ஆனது? என்பதை சொல்லியிருக்கும் படமே தென் சென்னை.

நாயகனாக ரங்கா. முதல் படம் என்பதால் நடிப்பில் ஒரு அனுபவமின்மை தெரிகிறது. சில காட்சிகளில் அளவான நடிப்பையே வழங்கியிருந்தாலும் பல நேரங்களில் அவரின் நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை என தோன்றுகிறது. நாயகி ரியா, அழகாக இருக்கிறார். ஒரு மருத்துவராக, அன்பு காட்டும் ஒரு பெண்ணாக நல்ல நடிப்பு. முன்னாள் ராணுவ அதிகாரி இந்நாள் செக்யூரிட்டி ஏஜன்ஸி நடத்தில் நிதின் மேத்தா தோற்றத்திலேயே பாதி வெற்றி. தேர்ந்த நடிப்பின் மூலம் மீதியை சிறப்பாக செய்திருக்கிறார். இளங்கோ குமரன், வத்சன் நடராஜன், சுமா, ஆறு பாலா, திலீபன், தாரனி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

’டாடா’, பிளடி பெக்கர் படங்களுக்கு இசையமைத்த ஜென் மார்டின் பின்னணி இசை இந்த படத்திற்கு பக்கபலம். சிவ பத்மயன் இசையில், நரேஷ் ஐயர் குரலில் “புது வானம் புது பூமி” பாடல் நல்ல ஒரு இனிமையான மெலடி. சரத்குமார் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளும் நன்றாகவே வந்திருக்கிறது. பட்ஜெட்டில் படமாக்கப்பட்டிருப்பது பல இடங்களில் தெரிந்தாலும் தன்னால் முடிந்த அளவுக்கு உழைப்பை கொடுத்திருக்கிறார். தண்ணீருக்கு அடியில் எடுக்கப்பட்டிருக்கும் சில காட்சிகள் படத்திற்கு தேவையா? இல்லையா என்பதை தாண்டி பார்க்க நன்றாகவே இருக்கிறது.

அறிமுக இயக்குநர் ரங்கா ஒரு வித்தியாசமான களத்தை ரசிகர்களுக்கு சொல்ல ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார். ஆனாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒரு ஹோட்டல், அதை சுற்றி நடக்கும் கதை, இதற்கிடையில் லாக் டவுன் காலகட்டம் என அவை கதைக்கு எந்தவித தாக்கத்தையும் உருவாக்கவில்லை. சண்டைக்காட்சிகள் மிக யதார்த்தமாக படமாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. கதாபாத்திரங்களின் உரையாடல் ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வை தராமல் கொஞ்சம் ஒட்டாமலேயே இருப்பதும் ஒரு மைனஸ். இரண்டு மணி நேர படத்தை முழுக்க அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்களை வைத்து கொடுத்திருக்கும் இயக்குனரின் துணிச்சலை பாராட்டியே ஆக வேண்டும். அடுத்தடுத்த படங்களில் திரைக்கதை, உருவாக்கம், நடிப்பு ஆகியவற்றிலும் மேம்படுவார் ரங்கா என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *