தங்கலான் – திரை விமர்சனம்

ஸ்டுடியோகிரீன் ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ரஞ்சித் இதுவரை எடுத்துக் கொண்ட கதைக்களங்களை மிக ஆழமான புரிதலுடன், யதார்த்தமாகவும், அற்புதமாகவும் திரையில் கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் சீயான் விக்ரம் என்ற மிகச்சிறந்த கலைஞர் கிடைத்திருப்பதால் தங்கலான் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எகிறி உள்ளது. இந்த முறை கேஜிஎஃப் என்ற கோலார் தங்க வயலை மையப்படுத்திய கதையில் பல வரலாற்று உண்மைகளை திரையில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அவரின் முயற்சி வெற்றி அடைந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 17-ஆம் நூற்றாண்டில் தொடங்கும் இந்த கதையில், வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கி கொண்டது போக எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவனாக சீயான் விக்ரம், மனைவி பார்வதி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். தன் குழந்தைகள் கதை கேட்க பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தற்போதைய கோலார் பகுதியில் தங்கள் மூதாதையர்கள் தங்கம் எடுத்து கொண்டிருந்தனர் என்றும், பொன் மீது பேராசை கொண்ட சிற்றரசன் ஒருவன் தனக்கு நிறைய பொன் வேண்டும், பதிலுக்கு அவர்கள் கேட்ட நிலங்களை வழங்கவும் ஒப்புக் கொள்கிறார். அங்கு காவல் தேவதையாக விளங்கும் மாளவிகா மோகனன் அவர்களை தடுத்து நிறுத்தியது வரையிலான கதையை தன் குழந்தைகளுக்கு சொல்கிறார்.

நிகழ்கால கதையில் ஜமீன்தார் ஒருவர் சீயான் விக்ரம் விவசாயம் செய்து வந்த எஞ்சிய நிலத்தையும் அபகரித்து அவர்களை பண்ணை அடிமை முறையில் வேலை வாங்குகிறார். அந்த நேரத்தில் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர் தங்கத்தை தேடி செல்ல வருமாறும், கூலி கொடுப்பதாகவும் சொல்லி அழைத்து செல்கிறார். சீயான் விக்ரம் நிலத்தை மீட்க அது உதவும் என்பதால் கூட்டத்தில் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். அப்படி தங்கத்தை தேடி செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சீயான் விக்ரம், தங்கலான், காடையன் என தன் நடிப்பில் வேறொரு பரிமாணத்தை காட்டி மிரட்டுகிறார். அவரின் மனப்போராட்டம், ஹல்லுசினேஷன் போன்ற விஷயம், 18ஆம் நூற்றாண்டு மனிதராக வாழ்ந்த விதம் எல்லாமே பிரமாதம். எத்தனையோ படங்களில் சீயான் விக்ரம் அசுர நடிப்பை பார்த்திருந்தாலும், இந்த படம் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கிறது. நிச்சயம் பல விருதுகளை வாங்கும் அளவுக்கான அசாதாரண நடிப்பு. தோற்றத்தில், முக பாவனைகளில் என வேற லெவல் நடிப்பு.

பார்வதி, கங்கம்மா என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பான நடிப்பு. 5 குழந்தைகளின் அம்மாவாக, கணவன் மீதான அன்பை, பரிதவிப்பை காட்டும் விதமாகட்டும், ஜாக்கெட் அணிந்த அனுபவத்தை வெளிக்காட்டும் விதமாகட்டும் மிகச்சிறந்த நடிப்பு. எந்த கதாபாத்திரமாகவும் நடிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

மாளவிகா மோகனன், ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்கிறார். லைவ் சவுண்டில் அத்தனை தமிழ் வரிகளையும் பேசி அசாதாரண நடிப்பு.

பசுபதியின் நடிப்பில் இன்னொரு பரிமாணம், டேனியல் லட்சியத்தை சுமந்து, ஏமாற்றம் அடைந்து வாழும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு. முத்துக்குமார் அதிகம் ஸ்கோப் இல்லாத கதாபாத்திரம். மற்ற துணை நடிகர்கள் உட்பட எல்லோருமே தங்கள் பங்கை செய்ய மிகக் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

மூர்த்தியின் செட் ஒவ்வொன்றும் நம்பகத்தன்மையுடன் சிறப்பாகவே இருக்கிறது. முழுக்க ரியல் லொகேஷன்களில் எடுக்கப்பட்ட இந்த படத்திலும் அவரின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.

கிஷோர் குமார் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃபிரேமும் தரம். ஒவ்வொரு காலகட்டத்தையும் அவர் படம் பிடித்த விதமும் அருமை. கிளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவு அபாரம்.

ஜிவி பிரகாஷூக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு அவருக்கு தீனி போடும் வகையில் அமைந்த ஒரு படம். பின்னணி இசையில் மிரட்டுகிறார். பல காட்சிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவதில் முக்கிய பங்கு அவருடையது.

பா.ரஞ்சித் படங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய களத்தை எடுத்துக் கொண்டாலும் அவர் பேசும் அரசியலை தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்திருக்கிறார். இந்த படத்திலும் எளிய மக்களின் வாழ்க்கை, எப்படி அவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள், அவர்களின் உரிமையை பிடுங்குகிறார்கள், எப்படி ஒடுக்கப்பட்டார்கள் என்பதை கதையோட்டத்தின் போக்கில் ஒவ்வொன்றாக சிறப்பாக சொல்லிக் கொண்டே இருக்கிறார். புத்த மதம் எப்படி இருந்தது? சைவம், வைணவம் எப்படி உள்ளே வந்தது? என்பது போன்ற விஷயங்களையும் ஆங்காங்கே சொல்லியிருக்கிறார். முதல் பாதியில் தங்கத்தை தேடி செல்வது, அதில் சந்திக்கும் பிரச்சினைகள் என சுவாரஸ்யமாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ஒரே இடத்தில் நின்றது போன்ற உணர்வை தருகிறது. குறிப்பாக காவல் நாயகி ஆரத்தியுடன் சண்டை என அதை சுற்றி ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கிறது. அதே போல எமோஷன் காட்சிகள் பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. இரண்டாம் பாதி திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் சிறப்பான படமாக கூட அமையும் வாய்ப்பு இருந்தும் அதை ரஞ்சித் தவற விட்டு விட்டார் என்று தான் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *