பாலா அண்ணன் இல்லைனா இந்த சூர்யா இல்ல – சூர்யா நெகிழ்ச்சி!

சீயான் விக்ரம் நடிப்பில் 1999ல் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் பாலா. தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிய இயக்குநர் பாலாவின் நடிப்பில் ஒரு படமாவது நடித்து விட மாட்டோமா என ஏங்காத நடிகர்களே கிடையாது. 25 ஆண்டுகளை கடந்தும் தமிழ் சினிமாவில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் பாலா, தற்போது வணங்கான் படத்தை இயக்கியிருக்கிறார். அருண் விஜய் நடித்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு மற்றும் பாலாவின் 25 ஆண்டுகளை கொண்டாடும் விழாவும் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. சூர்யா, சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி. ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன்,

நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர். கே.கிரண் ( ஆர்ட் டைரக்டர்),

தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன்,

நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “ஒருமுறை தான் சிவகுமார் சாரை சந்தித்தேன். அவர் ஓர் அற்புதமான மனிதர். நாம் பலரையும் இழந்து விட்டோம். சிவகுமார் அவர்கள் தான் தமிழ் சினிமாவுக்கே தந்தையாக இருந்து வருகிறார். 25 ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று பாலாவிடம் கேட்டேன். நான் என்ன செய்து விட்டேன். எனக்கு ஏன் விழா எடுக்கிறீர்கள் என்றார். நிச்சயமாக விழா எடுத்தே தீரவேண்டும் என்று அப்போது உறுதியாக நினைத்தேன். சினிமாவில் சாதனை படைத்த பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரையா போன்றவர்களை நாம் பாராட்டவில்லை. இனிமேலாவது நாம் எல்லோருக்கும் விழா எடுத்துப் பாராட்டத் தொடங்கவேண்டும்” என்றார்.

பாலாவின் அன்புத்தம்பியாக விழாவிற்கு வந்த நடிகர் சூர்யா பேசும்போது, “அண்ணன் பாலாவின் ‘சேது’ திரைப்படம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நடிகரால் இப்படியெல்லாம் நடிக்க முடியுமா? ஒரு இயக்குநரால் இப்படி ஒரு படத்தை இயக்கமுடியுமா என்று நினைத்தேன். பல நாட்கள் சேதுவின் தாக்கம் இருந்தது. அடுத்த படம் உன்னை வைத்து இயக்குகிறேன் என பாலா சொன்ன ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மாற்றி விட்டது. 2000 ஆம் ஆண்டு எனக்கு அந்த தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் எனக்கு இந்த வாழ்க்கையே இருந்திருக்காது. ‘நந்தா’ படம் பார்த்துவிட்டு தான் கவுதம் வாசுதேவ் மேனன் ‘காக்க காக்க’ படத்தில் நடிக்க அழைத்தார். அதன்பிறகு இயக்குநர் முருகதாஸ் அழைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் இயக்குநர் பாலா தான். பாலா அண்ணன் என்கிற ஒரு வார்த்தை வெறும் வார்த்தையல்ல. நிரந்தரமான உறவு” என்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியானபோது நெகடிவ் க்ளைமாக்ஸ், ஓடுமா என பலரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல ஒரு தீபாவளிக்கு வெளியாகி நெகடிவ் கிளைமாக்ஸ் வைத்தும் ஹிட் அடித்தது. அவருடைய அவன் இவன் பட விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் என் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் தம்பி என கூப்பிட்டார். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன்” என்றார்.

இயக்குனர் மிஷ்கின் பேசும்போது, “ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படம் சரியாக போகாத நிலையில் சோர்வுடன் அண்ணன் பாலா ஆபீஸ் இருந்த தெரு வழியாக வந்து கொண்டிருந்தேன் அப்போது என்னை பார்த்து பாலா உள்ளே அழைத்து ஆறுதல் படுத்தினார். கண்ணீரும் விட்டார். அடுத்து உடனே என்னிடம் நான் தயாரிக்கும் படத்தை நீ இயக்குகிறாயா என்று ஒரே வார்த்தை தான் கேட்டார். அப்படி அவர் எனக்கு மறுவாழ்வு கொடுத்த படம் தான் பிசாசு. தோல்வியால் என் மீது எனக்கே நம்பிக்கை குறைந்திருந்த நிலையில் என்னை உற்சாகப்படுத்தி மேலே அழைத்து வந்தவர் அண்ணன் பாலா தான்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *