ராம் படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கு – சித்தார்த் புகழாரம்!

ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “ராமுடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. ‘பறந்து போ’ படத்தில் வேறு ஒரு ராம் சாரைப் பார்த்தேன். இந்தப் படத்திற்கு மொத்தம் 25 பாடல்கள் எழுதினேன். அதில் 19 பாடல்கள் படத்தில் அமைந்துள்ளது. நடிகர் சித்தார்த்தும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அண்ணன், மனைவி, மகன் என மூன்று உலகங்களுக்குள் நடக்கும் இணைப்பு- போராட்டம்தான் இந்தக் கதை. மெல்லிய சிரிப்பு இந்தப் படம் முழுக்க இருக்கும். என்னுடைய 1000 ஆவது பாடல் இந்தப் படத்தில் எழுதியிருக்கிறேன்” என்றார்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “ராம் சாருடன் படம் என்றம் கொஞ்சம் பயம் இருக்கதான் செய்தது. ’நானே இதுவரை செய்யாத படம் இது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்’ என்று ஸ்கிரிப்ட் கொடுத்தார். உடனே ஒத்துக் கொண்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநராக மட்டுமில்லாமல் எல்லா வேலைகளும் அவர் எடுத்துப் போட்டு செய்தார். அவர் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர்” என்றார்.

நடிகர் சித்தார்த் பேசும்போது, ”ராம் மிகச்சிறந்த படைப்பாளி. அவரது படைப்புகளில் உண்மையும் நேர்மையும் இருக்கு. அவரது படைப்புகளில் எனது பங்களிப்பு எதாவது ஒரு வகையில் இருக்கும் என்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் பாடியிருக்கும் பாட்டு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ். ரொம்ப ஜாலியான, அழகான படம் இது. ராம் சின்ன பசங்களிடம் நன்றாக வேலை வாங்குவார். மிதுனும் நன்றாக நடித்திருக்கிறார். சிவா முன்பிருந்தே எனக்கு பழக்கம். சிவாவுக்கு ஒரு நடிகராக இந்தப் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கு. கிரேஸூடைய நடிப்பு சென்சேஷனலாக இருந்தது. ராம்-சிவா- கிரேஸ் மூன்று பேருடைய கூட்டணி நன்றாக வந்திருக்கிறது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். ஜூலை 4 எங்களுக்கு முக்கியமான நாள். நான் நடித்திருக்கும் ‘3 BHK’ மற்றும் ‘பறந்து போ’ இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவது மகிழ்ச்சி” என்றார்.

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசும்போது, “’வீட்டுக்கு வெளியே ஒரு உலகம் உண்டு. அதைத்தெரிந்து கொள்ள நீங்கள் பயணம் செய்ய வேண்டும்’ என ஜெயமோகனின் ஒரு வரி உண்டு. அதை ராம் சாரின் படங்களில் பார்க்கலாம். மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் பார்க்கும்படியான படம் இது. படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “என் திரைப்பயணத்தில் மாரி செல்வராஜ், ராமுடன் பணியாற்றிய நாட்கள் மிக மகிழ்ச்சியான நாட்கள் என்பேன். ‘பேரன்பு’ பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் நான் தூங்காமல் இருந்தேன். எனக்கு மிகப்பிடித்த படம் இது. ‘பறந்து போ’ எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும். இந்தப் படத்தில் சிவா மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். கிரேஸ், சந்தோஷ் தயாநிதி, மதன் கார்க்கி எனப் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் மீரா கதிரவன் பேசும்போது, “இந்தப் படம் பார்த்ததும் என் குழந்தைகளையும் பயணம் அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனக்கு மட்டுமல்ல, எல்லா பெற்றோருக்கும் இந்தப் படம் பார்த்ததும் அந்த எண்ணம் தோன்றும். வீட்டுக்குள் அடைந்திருப்பது பெரும் சாபம். அதுவும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு குழந்தைகளின் உளவியல் சிதைந்து போயிருக்கிறது. குழந்தைகளுக்காக தான் நாம் வாழ்க்கையில் ஓடுகிறோம். ஆனால், குழந்தைகளை அவர்களின் உலகத்துடன் வைத்துக் கொள்கிறோமா என்பது கேள்விதான். இது அனைவரையும் மாற்றும் படமாக இருக்கும். நிச்சயம் பாருங்கள்” என்றார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசும்போது, “‘பறந்து போ’ படம் எனக்கு மிகவும் பிடித்தது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று போய் பார்க்க முடியாதது எனக்கு வருத்தம். காமெடி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை பலமுறை பார்த்து நினைவில் வைத்து பேசி மகிழ்ந்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையை மாற்றிய தருணம் ஈழப்பிரச்சினை தான். அதில் இருந்துதான் படத்திலும் தீவிரமாக பேச ஆரம்பித்தோம். இல்லை என்றால் நான் ‘களவாணி’ போன்ற கமர்ஷியல் கிராமத்துப் படங்களைக் கொடுத்திருப்போம். சின்ன வயதில் நான் வாழாத வாழ்க்கையை இந்த படம் சொல்லி இருக்கிறது. தான் உருவாக்கும் கதாபாத்திரங்களில் பொய் இருக்கக் கூடாது என்று நினைப்பவர் ராம். இந்தப் படம் எங்கள் குடும்பத்தின் திருவிழா. ‘வாழை’ படத்தைக் கொண்டாடியது போலவே ரசிகர்கள் நிச்சயம் ‘பறந்து போ’ படத்தையும் கொண்டாடுவார்கள்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, ” இயக்குநர் ராம் இந்த கதை சொன்னதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போனது. ஒரு நாளைக்கு படவிழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்து ஐந்து முதல் ஆறு ஃபோன் கால்கள் வருகிறது. இது போன்ற விழாவுக்கு என்னை அழைத்தால் இனிமேல் அதற்கான தொகையாக குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் கொடுத்து விடுங்கள். சீக்கிரம் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சினிமாவில் அவ்வளவு சந்தோஷமாக நான் இல்லை. மிகவும் சந்தோஷமாக படங்கள் செய்த காலம் போய்விட்டது. இப்போது அதிக போட்டி இருக்கிறது. ராம் படங்களை பார்க்கும் பொழுது எப்போதுமே அதிசயம் போல தான் இருக்கும். ‘பறந்து போ’ படமும் நிச்சயம் குடும்பங்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். அழகான படம்” என்றார்.

இயக்குநர் ராம் பேசும்போது, ” எல்லோரையும் போல நிறை குறைகள் இருக்கக்கூடிய சாதாரண மனிதன் நான். முதலில் இந்த படத்திற்கு யுவன் தான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால், அவருடைய ஷெட்யூல் அடுத்தடுத்து பிஸியாக இருந்தது. படத்திற்கும் 20 பாடல்கள் தேவைப்பட்டதால் யுவனால் அந்த ஷெட்யூலில் செய்து தர முடியாததால் தான் சந்தோஷ் உள்ளே வந்தார். ஜியோ ஹாட்ஸ்டார் எனக்கு வேலை செய்வதற்கு மிகவும் இலகுவான இடம். பிரதீப்பை பார்த்தாலே தனி எனர்ஜி வரும். சிவா,கிரேஸ் போன்ற திறமையான நடிகர்களை என் படத்தில் பயன்படுத்திக் கொண்டது மகிழ்ச்சி. தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் சிறப்பாக வேலை செய்திருக்கின்றனர் இந்த செட்டில் தான் நாம் ரிலாக்ஸாக இருந்தேன். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இந்தப் படத்தை முதலில் பார்த்து வாழ்த்து சொன்னார். அவர் படம் பார்த்து வாழ்த்தியதுடன் உலக அளவில் வெளியிடுவது எங்களின் பெரும் பலம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *