செம்பியன் மாதேவி – திரை விமர்சனம்

அறிமுக இயக்குனர் லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நடித்திருக்கும் திரைப்படம் செம்பியன் மாதேவி. சாதி ஆனவக் கொலைகள் நம் சமூகத்தில் எந்த அளவு ஊடுருவி இருந்திருக்கிறது, இன்றும் இருக்கிறது, மாற வேண்டியது மக்கள் மனநிலை தான் என்பதை சொல்லும் படமாக, ஒரு நல்ல நோக்கத்துடன் உருவாகி இருக்கிறது இந்த படம். அந்த நோக்கம் நிறைவேறியதா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, வட தமிழகத்தில் உள்ள செம்பியன் என்ற கிராமத்தில் 2004 ஆம் ஆண்டு தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார். ஆரம்பத்தில் சாதி பாகுபாட்டுக்கு பயந்து நாயகனின் காதலை ஏற்க மறுக்கும் நாயகி, ஒரு கட்டத்தில் நாயகன் மீது நம்பிக்கை ஏற்பட்டு அவரை காதலிக்க தொடங்குகிறார். காதலர்களிடையே நெருக்கம் அதிகரிக்க, இருவரும் உடல் ரீதியாக ஒன்றினைந்து விடுகிறார்கள். இதனால், நாயகி கர்ப்பமடைந்து விடுகிறார். கர்ப்பமடைந்த நாயகி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நாயகனிடம் கேட்க, அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதோடு, தனது சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கேட்கிறார். ஆனால், நண்பனின் பிரச்சனையாக பார்ப்பதை விட்டுவிட்டு தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைக்கும் சாதி வெறிப்பிடித்தவர்கள், நண்பனின் காதலியை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகி தப்பித்தாரா?, அவர்களது காதல் வெற்றி பெற்றதா? எஎன்பது தான் ‘செம்பியன் மாதேவி’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன், எந்த இடத்தில் தான் ஒரு ஹீரோ என்ற பில்டப்பை காட்டாமல், கதையின் நாயகனாக மட்டுமே பயணித்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சக மனிதர்களிடம் எந்தவித பாகுபாடும் காட்டாமல் சமமாக பழகுவது, சாதி வெறியர்களால் தனது காதலிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொந்தளிப்பது என உணர்வுப்பூர்வமாக நடித்து கைதட்டல் பெறுகிறார். கிளைமாக்ஸ் காட்சியிலும் மனதை உருக்கும் நடிப்பை தந்திருக்கிறார்.

நாயகியாக அம்சரேகா. கல்லூரிக்கு போகும் மாணவியாக கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். பருத்தி வீரன் காட்சி போன்ற அந்த கிளைமாக்ஸ் காட்சியில் நம்மை கலங்க வைக்கிறார். ஜெய்பீம் மொசக்குட்டி லீலைகள் ட்ராக் காமெடியாக வந்து போவதும் ஆறுதல். கள்ளக்காதல் மட்டுமே காட்டி நிறையவே முகம் சுழிக்க வைக்கிறது. மணிமாறன், ரெஜினா, ஆதிக்க சாதி மனநிலை கொண்ட இளைஞர்கள் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே இருக்கிறார்கள்.

லோக பத்மநாபன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் தேமே என ஓடிக் கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் கேமரா வறண்ட வட மாவட்டங்களையும், கோழிப்பண்ணை போன்ற காட்சிகளையும் எளிமையாக, இயல்பாக நம் கண்முன் நிறுத்தியிருக்கிறது.

டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் பாணியில் தானே நடிப்பு, இயக்கம், இசை மற்றும் தயாரிப்பு என பல களங்களில் பயணித்திருக்ககிறார் லோக பத்மநாபன். முதல் படத்திலேயே சாதிய வன்கொடுமைகள் பற்றி தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதன் பின்னணியில் இருக்கும் அரசியலையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக சாதிய வன்கொடுமையில் காதலர்கள் நிலை என்ன? என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் லோக பத்மநாபன், மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *