B ஸ்டுடியோஸ் தயாரிப்பில் லோக பத்மநாபன் எழுதி, இயக்கி, இசையமைத்திருக்கும் திரைப்படம் “செம்பியன் மாதேவி”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டு, படக்குழுவை வாழ்த்திப் பேசினார்.
அப்போது பேசிய இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசும்போது, ” மேடையில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் வைத்து பார்க்கும்போது இது பெரிய படம் என்று புரிகிறது. திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார் என்றபோதே கண்டிப்பாக படத்தில் முக்கிய விஷயம் இருக்கிறது என்று புரிகிறது. காதலுக்கு ஜாதி, மதம் எதுவும் கிடையாது. ட்ரைலர் பார்க்கும்போதே இது ஒரு உத்தமமான ஒரு காதல் கதை என்பது புரிகிறது. திரைத்துறையில், திரையரங்கில் ஜாதி, மதம் எதுவுமே கிடையாது. மிகப்பெரிய புரட்சிகளை எல்லாம் உருவாக்கியது சினிமா தான். நல்ல சினிமாவை உருவாக்கிய இயக்குனர் லோக பத்மநாபன், நல்ல இசையமைப்பாளராகவும் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. ஏழைகளின் நாயகனாகவே நடித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இன்றைய நடிகர்கள் கையில் சிகரெட், சரக்கு, துப்பாக்கினு தான் வராங்க. இந்த படத்தில் நாயகன் மிக இயல்பாக நடித்திருக்கிறார். ஆரம்ப கால விஜயகாந்தை மீண்டும் திரையில் பார்த்தது போல இருக்கிறது. நல்ல படைப்புகள் மக்களை சென்று சேர நம்ம தலைவர்கள் அரசுடன் பேசி உதவி செய்ய வேண்டும். தியேட்டர்களை நம்பி மட்டுமே சிறு முதலீட்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. அவர்களை காப்பாற்ற அரசு திரையரங்குகளை கட்டி இந்த மாதிரி திரைப்படங்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும்” என்றார்.
இயக்குனர் கோபி நயினார் பேசும்போது, “மனித சமுதாயத்துக்கு இடையறாத வேலை காதல் செய்வது தான். காதல் செய்வதும், அதற்கு ஏதாவது பிரச்சினை வரும்போது புரட்சி செய்வதும் தான் வேலை. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்” என்றார்.
இயக்குனர் லோக பத்மநாபன் பேசும்போது, “2010ஆம் ஆண்டு உதவி இயக்குனராக, ஒரு பாடல் எழுதியவராக மேடை ஏறினேன். ஒரு இயக்குனராக இந்த மேடைக்கு வர 14 வருடங்கள் ஆகியிருக்கிறது. இயக்கம், இசை, பாடல்கள் என எல்லாத்தையும் நானே செய்ததற்கு காரணம் பல வருடம் வாய்ப்பு தேடி அலைந்தது தான். சில நண்பர்கள் உதவியுடன் இந்த படம் துவங்கி இருக்கிறது. நடிகர்கள் பலரும் எங்களுக்காக வந்து நடித்துக் கொடுத்தார்கள். விரைவில் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது” என்றார்.
சிறப்பு விருந்தினர் தொல். திருமாவளவன் பேசும்போது, “இன்று வெற்றிமாறன் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில், கோபி நயினார் இயக்கிய ‘மனுஷி’ என்ற திரைப்பட முன்னோட்டத்தை பார்த்து விட்டு வந்தோம். அதனால் தான் இங்கு வர தாமதமாகி விட்டது. இந்த இடத்தை எட்டுவதற்கு இயக்குனர் லோக பத்மநாபன் அவர்களுக்கு 14 ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்ற போராட்டத்தை அவர் இங்கு பகிர்ந்து கொண்டார். தகுதி, ஆற்றல், பட்டப்படிப்பு இருந்தும் அவர் போராட வேண்டி இருந்தது என்பதை அவர் பேச்சில் புரிந்து கொள்ள முடிந்தது. அரசியல் ஆதாயத்துக்கு காதலை பயன்படுத்துவது அரசியலில் காண முடிகிறது. அரசியல்வாதிகளை தூக்கி சாப்பிட்டு விடுகிறார்கள் சில சினிமாக்காரர்கள். நாடகக் காதல் என சொல்லி அதில் என்னை வைத்தும் படம் எடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். காதல் என்பது எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது, உயிரினங்களிடையே அது ஒரு பொதுவான உணர்வு. காதல் என்பது தன்னியல்பான ஒன்று. திட்டமிட்டு அதை செய்யவே முடியாது. டீ சர்ட், கூலிங் கிளாஸ் போட்டு நாடகக் காதல் செய்து எல்லாம் யாரும் யாரையும் ஏமாற்றி விட முடியாது. ஒரு தனி நபரை அவதூறாக சித்தரித்த செய்யப்படும் அரசியல் என சொன்னாலும், அது நம் வீட்டு பெண் பிள்ளைகளை கொச்சைப்படுத்தும் செயல். காதலுக்கு எதிர்ப்பு எல்லா நாடுகளிலும் இருக்கிறது. சாதி தூய்மைவாதம் என்பது எல்லா சாதிகளிலும் இருக்கிறது. எந்த ஒரு படைப்பாளியும் பிற்போக்கான கருத்துகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அறம் இயக்குனர் கோபி நயினார் என்னுடன் இணைந்து அரசியலில் பணியாற்றுகிறார், ஆனாலும் சினிமாவில் என் தாக்கம் எதுவுமே இருக்காது. அது தான் அவரின் ஆளுமை, சுதந்திரம். அதில் பாடல், காதல், டூயட், ஃபைட் என எதுவும் கிடையாது. உரையாடல் தான் படம் முழுக்க இருக்கிறது. ஆண்ட பரம்பரை என சொல்லிக் கொடுக்காதே, அறிவியலை சொல்லிக் கொடு என்று சொல்லியிருக்கிறார் அவர். கற்பிதங்களுக்குள் சிக்கி கொண்டிருக்கும் மானுடத்தை மீட்பது தான் படைப்பாளிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். தன்மானம் தான் உண்மையான கௌரவம். திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை பேசும்போது தான் அதற்கு தீர்வு கிடைக்கிறது. மனிதன் பிறந்ததில் இருந்து சாகும் வரை அவனை அறியாமல் அவனை வழி நடத்துவது சாதி தான். 2000 ஆண்டுகள் முன்பே அய்யன் திருவள்ளுவர் காதலை வாழ்க என சொல்கிறார், சாதியை ஒழிக என்கிறார். சமத்துவமின்மையை எதிர்க்கிறார் புத்தர். ஆயிரம் ஆண்டுகளாக பேசி வரும் அரசியல் தான், இன்னும் நாம் உரையாடலை தொடர வேண்டும். அதற்கான தேவை இங்கு இன்னும் இருக்கிறது. இது மோதலுக்காக அல்ல, தீர்வுக்காக. உரையாடல் தான் தீர்வைத் தரும். உரையாடலை உருவாக்குகிற படைப்பாக இந்த செம்பியன் மாதேவியை தந்திருக்கிறார் லோக பத்மநாபன். அது மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும்” என்றார்.
இந்த விழாவில் கவிஞர் காசி முத்து மாணிக்கம், இயக்குனர் ராசு ஆனந்த், எழுத்தாளர் ஓவியா மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.