நடிகர் விஜய் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவான சச்சின் படம் 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ல் ரிலீஸ் ஆனது. இப்போது சச்சின் படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அப்படத்தை ஏப்ரல் 18ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு. முன்னதாக சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்ட முன்பதிவில் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வம் காட்டி டிக்கெட்டுகளை புக் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திரையரங்குகளில் வெளியாகி விஜய் ரசிகர்களிடம் ஒரு பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது சச்சின்.
படத்தை டிஜிட்டலில் மாஸ்டரிங் செய்து சவுண்டையும் டால்பிக்கு மாற்றியிருக்கிறார்கள். திரையரங்குகளில் பார்க்கும்போது அது ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. 2005-ல் வெளியானபோதே இளமை துள்ளலான பாடல்கள், இளைஞர்களை கவரும் நாயகிகள், ஊட்டி பின்னணியில் கதைக்களம் என ஒரு ஜிலு ஜிலு அனுபவத்தை கொடுத்த படம் தான் சச்சின். ஜீவாவின் ஒளிப்பதிவில் விஜய் மிக மிக அழகாக திரையில் தோன்றிய படம் இது. ஜீவாவின் ஒளிப்பதிவுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தது தேவி ஸ்ரீபிரசாத்தின் இசை. வாடி வாடி, கண் மூடி திறக்கும்போது, வா வா வா என் தலைவா, குண்டு மாங்கா என ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். இப்போது தியேட்டரை ஒரு கான்செர்ட்டாக மாற்றி வருகிறது வாடி வாடி கைப்படாத சிடி பாடல். அந்த பாடல் வரும் எழுந்து ஆடாத ரசிகர்களே இல்லை எனும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
வடிவேலுவின் காமெடி இன்றளவும் கொண்டாடப்படுகிறது. விஜய் வடிவேலு காமெடி காட்சிகளை திரையில் பார்க்கும்போது இந்த மாதிரி காமெடி காட்சிகள் எல்லாம் இப்போது வரும் படங்களில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் உருவாகிறது. சச்சின், ஷாலினி காதல் காட்சிகள் இன்னமும் ரசிக்க வைக்கிறது. விஜய், ஜெனிலியா ஜோடி அந்த கதாபாத்திரங்களாகவே அவ்வளவு இயல்பாக நம் மனதில் பதிகிறார்கள்.
2005 கோடையை குளுமையாக்கி, இளைஞர்களை கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுக்க வைத்தது சச்சின். 20 ஆண்டுகள் கழித்தும் மீண்டும் இந்த தகிக்கும் கோடையை குளுமையாக்கி, இளைஞர்களை தியேட்டரை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது இந்த சச்சின் ரீரிலீஸ். ஒரு ஜாலியான அனுபவத்தை வேண்டினால் ஒரு முறை சச்சின் ஓடும் தியேட்டருக்கு நண்பர்களுடன் அல்லது குடும்பத்துடன் போய் கொண்டாடி விட்டு வாங்க…