ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து உரையாடினர்.
படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் பேசுகையில், “தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் சிறு முதலீட்டு படங்களை வெளியிடும் நிறுவனம் என்றும், குறைந்த திரையரங்கம் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நிறுவனம் என்று தான் இதுவரை இருந்தது. ஊடகங்கள் கொடுத்த ஊக்கம் மற்றும் ஆதரவால், ‘தீபாவளி போனஸ்’ படம் மூலம் நல்ல கமர்ஷியல் படம் மற்றும் வணிக ரீதியாக பெரிய வருமாணம் ஈட்டக்கூடிய படத்தை கையாளும் நிறுவனமாக உயர்ந்திருக்கிறது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் எங்களிடம் வருவதற்கு ஒரு நீண்ட பயணம் தேவைப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு இந்த படம் வர வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் இயக்குநர் தவம் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு படத்தை வெளியிடும் போதும், இந்த படத்தின் இயக்குநரிடம் இருந்து கனமான பதிவு வரும். நம்ம படம் எப்போது வரும், என்று உருக்கமாக கேட்பார். அதில் இருந்தே அவருடைய ஏக்க, தவிப்பு தெரியும். அதேபோல், இந்த படத்தின் தயாரிப்பாளர் இதுவரை எந்த விசயத்திலும் தலையிடவில்லை. கதையை கேட்டு அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டார். அவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நம்பிக்கை வீண் போகாத அளவுக்கு அனைவரும் உண்மையாக உழைத்து இப்படி ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதில் பெருமையான விசயம் என்னவென்றால், இதுபோன்ற பணிகளை செய்ய தமிழ் சினிமாவில் ஐம்பது பேர் இருப்பார்கள், அவர்களைப் பற்றி விசாரித்து நான் தான் வேண்டும் என்று கேட்டு, ஆக்ஷன் ரியாக்ஷன் மூலம் தான் படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் தான் நாங்களும் இந்த அளவுக்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 100 திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் ஆடியோ உரிமையை நல்ல விலைக்கு விற்பனை செய்து கொடுத்திருக்கிறோம். அதேபோல் வெளிநாட்டு திரையிடலும் இன்று உறுதியாகியுள்ளது. அதை இப்போது தான் இயக்குநரிடம் தெரிவிக்கிறேன். அதேபோல், இரண்டு முன்னணி ஒடிடி தளங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அதுவும் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். தீபாவளிக்கு ஒருவாரம் முன்பு வெளியாகும் போது சிலர் சில கருத்துக்களை சொன்னார்கள். குறிப்பாக தீபாவளியன்று வெளியிடலாமே, என்றார்கள். அதற்கு நாங்கள் ரெடி தான், ஆனால் தற்போதைய சூழல் என்னவென்று உங்களுக்கே தெரியும். தீபாவளிக்கு முன்பு வெளியிடுவது, தீபாவளி கொண்டாட்டத்திற்கான ஒரு சூழலாக இருக்கிறது, எனவே இது தீபாவளிக்கான சரியான படமாக இருக்கும். படத்தை பார்த்த பத்திரிகையாளர்களும் படத்தை பாராட்டியுள்ளனர். எனவே, இந்த தீபாவளி போனஸ் எங்களுக்கு போனஸாகவே இருக்கும்.” என்றார்.
நடிகை ரித்விகா பேசுகையில், “என்னை பற்றி தொகுப்பாளி நன்றாக அறிமுகம் கொடுத்தார், ஆனால் அவர் சொன்னது போல் என் சொந்த ஊர் சேலம் இல்லை, சென்னை. நான் சென்னை பெண் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்திற்காக என்னை தொலைபேசியில் தான் முதலில் தொடர்பு கொண்டார் இயக்குநர் ஜெயபால். அப்போது ஒரு ஒன்லைன் சொன்னார், அதை கேட்டதும் இந்த படம் பண்ண வேண்டும் என்று முடிவு செய்தேன். ஒரு விசயம் கேட்டால் அது நன்றாக வரும் என்று நம் உள்ளுணர்வு சொல்லும் அல்லவா அது போல் இந்த படத்தின் கதை கேட்கும் போது இது நன்றாக இருக்கும் என்று என் உள்ளுணர்வு சொன்னது, அதனால் ஓகே சொல்லிவிட்டேன். அதன்படியே படம் சிறப்பாக வந்திருக்கிறது. படத்தின் தலைப்பும் ஈர்க்கும் விதமாக இருக்கிறது. இந்த படக்குழுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நடித்தவர்களை தவிர அனைவரும் புதியவர்கள். இயக்குநர், தயாரிப்பாளர், உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் என அனைவரும் புதியவர்களாக இருந்தார்கள், அவர்களின் செயல் என்னை அதிகம் கோபப்பட வைக்கும். இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து சிறப்பாக பணியாற்றினார்கள். என்னிடம் 22 நாட்கள் கேட்டார்கள், ஆனால் என்னுடைய பகுதியை 19 நாட்களில் முடித்து விட்டார்கள். சில தடுமாற்றங்கள் இருந்தாலும், திட்டமிட்டபடி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை முடித்ததோடு, பின்னணி வேலைகளையும் சரியாக திட்டமிட்டு செய்து முடித்தார்கள். தவறு செய்தாலும் அதை சரி செய்துக்கொண்டு, என்னையும் சமாதானப்படுத்தி அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்ததற்காக அவர்களுக்கு நன்றி.
இந்த படத்தின் தலைப்பை வடிவேலு சார் வெளியிட்டார். இதை பார்த்துவிட்டு இந்த படத்தில் நான் பணியாற்றுகிறேன், என்று கூறி படத்தை இந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு சென்ற பி.ஆர்.ஓ தர்மா அவர்களுக்கு நன்றி. அதேபோல், எடிட்டர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் அனைவரும் சப்போர்ட்டிங்காக இருந்து பணியாற்றினார்கள். நாயகனாக நடித்த விக்ராந்த் நல்ல நடிகர், அவரால் இன்று இங்கு வர முடியவில்லை. அவருக்கு இன்னும் நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். என்னுடைய மகனாக நடித்த குட்டி பையன் ஹரிஷ் சிறப்பாக நடித்தார். எனக்கும், விக்ராந்துக்கும் அடுத்து என்ன வசனம், என்ன காட்சி என்று தெரியாது, ஆனால் அந்த குட்டி பையனுக்கு எல்லாமே தெரியும். அந்த அளவுக்கு அவனுக்கு பயிற்சி கொடுத்திருந்தார்கள். அவன் மட்டும் அல்ல, படத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்தவர்களுக்கு கூட இயக்குநர் பயிற்சி கொடுத்திருந்தார், அதை என்னிடம் வீடியோவாக இயக்குநர் காண்பித்து, நாங்கள் இவ்வளவு தயாராக இருக்கிறோம் இப்போது நீங்கள் படப்பிடிப்புக்கு வந்தால் சரியாக இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்தார். நன்றி ஜெயபால் சார். நல்ல டீம், நல்ல படம் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் தான் இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இப்போது சிறிய படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஊடகங்கள் பெரிய ஆதரவு கொடுத்து பெரிய இடத்தில் கொண்டு செல்கிறார்கள், அதுபோல் எங்கள் படத்தையும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் வாழ்க்கையில் நான் தீபாவளி போனஸ் வாங்கியதில்லை. உங்களுக்கே தெரியும் சினிமாவில் யாருக்கும் போனஸ் என்பது இல்லை. நான் படிப்பு முடிந்ததும் சினிமாவுக்குள் வந்துவிட்டேன், அதனால் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் போனாஸ் வாங்கும் வாய்ப்பும் அமையவில்லை. ஆனால், இந்த 2024 ஆம் ஆண்டு எனக்கு தீபாவளி போனஸ் கிடைத்திருக்கிறது. எனவே நீங்கள் அனைவரும் எனக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.